இராக்கின் புனித நகரில் முதல் முறையாக ‘சமூக நீதி’ கோரும் 2 பெண் கம்யூனிஸ்ட்கள் வெற்றி

இராக் அரசியல் சூழல் பற்றிய குப்பைவாத புரிதல்களைக் கேள்விக்குட்படுத்தும் விதமாக இராக் தேர்தலில் அதன் புனித நகரில் 2 பெண்கள், அதுவும் கம்யூனிஸ்ட் கட்சிப் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இராக்கில் நடந்த பொதுத்தேர்தலில் ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுள்ள வரலாறு காணாத வெற்றி அக்கட்சியின் சார்பில் 2 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத ரீதியாக பாரம்பரியக் கட்சியான சதரிஸ்ட் கட்சியுடன் மதச்சார்பற்ற ஐசிபி கட்சி கூட்டணி மேற்கொண்டுள்ளது, அமெரிக்க, இந்திய, வலதுசாரி மனங்களுக்கு ஆச்சரியமாகவும் திகைப்பூட்டுவதாகவும் தெரியும். ஆனால் அது ஒரு அபாரமான கூட்டிணைவையும் வெற்றியையும் சாத்தியமாக்கியுள்ளது.

அமெரிக்க எதிர்ப்பை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் சதரிஸ்ட் கூட்டணி சார்பில் போட்டியிட்ட இராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1934இல் உருவாக்கப்பட்ட ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி முதல்முறைாயக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது.

முஸ்லீம் மத நம்பிக்கையாளர்களின் புனித நகரங்களில் ஒன்றான நஜாபில் சுகாப் அல் கதீப் வெற்றிபெற்றுள்ளார். கதீப் ஒரு ஆசிரியை வறுமைக்கு எதிரான சமூகப் போராளி, பெண்ணுரிமை போராளியுமாவார்.

திகரில் கட்சி வேட்பாளரான ஹைப அல் அமீனும் வெற்றி பெற்றுள்ளனர். முக்தாத அல் சபரின் தலைமையிலான அமெரிக்க எதிர்ப்பு கூட்டணி இராக் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ளது. ஆனாலும் சதரிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியை அரசமைக்க அனுமதிக்க முடியாது என்பது ஈரானின் நிலைபாடாக உள்ளது.

அமெரிக்காவும் என்னவிலை கொடுத்தாவது சதரிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க முயன்று வருகிறது. இராக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி மத்திய கிழக்கு பகுதியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உற்சாகமளிக்கும் என்பது உறுதி. அண்மைக்காலத்தில் ஏராளமான ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டனர், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தகர்க்கப்பட்டன. இந்த பின்னணியில் இராக் கம்யூனிஸ்ட் கட்சி இந்த வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது.2008இல் முன்னாள் அமெரக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்கு எதிராக காலணி வீசிய பெண் பத்திரிகையாளர் மும்தாஸ அல் செய்தியும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

கம்யூனிஸத்திற்கும் எந்த ஒரு மதத்திற்கும் ஆகவே ஆகாது, அதுவும் இஸ்லாம், கம்யூனிசம் எப்பவுமே பகைமை கொண்டது. ஏனெனில் மதவாதிகள் கம்யூனிஸத்தை கடவுளற்ற நாத்திகவாதம் என்றும் கம்யூனிஸ்ட்கள் மதங்களை பூசாரிவாத பாசிசம் என்றும் கருதி வரும் நிலையில் மதமும், மதச்சார்பின்மை நாத்திகவாதமும் இணைந்து குறிப்பாக இராக்கில் பெண் சுதந்திரத்தை மறுக்கும் இஸ்லாமியத்தை முறியடிக்கும் விதமாக இரு பெண்கள் நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றிருப்பது வலதுசாரி, நாசகார ஆட்சிகளும் அதற்கான வலதுசாரி மக்கள் குரல்களும் உரத்து ஒலித்துவரும் இன்றைய இருண்ட காலத்தில் இந்த இணைப்பு உலகிற்கு புதிய ஒளிபாய்ச்ச வாய்ப்புள்ளது, புதிய நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. குறிப்பாக இராக்கில் அமெரிக்க படையெடுப்புக்குப் பிறகு நடந்த அக்கிரமவாத படுகொலைகள், பயங்கரவாதங்கள், ஐஎஸ் எழுச்சி, உலக நாடுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் பயங்கரங்களுக்குப் பிறகு இந்த புத்தெழுச்சி அவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.