இலங்கை: கொரனா செய்திகள்

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று (05) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஏற்கெனவே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வியாபாரிகள், வியாபார நடவடிக்கையை மேற்கொண்டு வந்த ஓட்டமாவடி பிரதான வீதியிலுள்ள வியாபார நிலையம் மற்றும் வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள வியாபார நிலையம் என்பவற்றின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இப்பரிசோதனைகள் இடம்பெற்றன.

321 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைககளும் 206 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகளும் இன்று முன்னெடுக்கப்பட்டன. 

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 96 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகளும் 100 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும்; கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 100 பேருக்கு  அன்டிஜன் பரிசோதனைகளும் 60 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும்; ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 165 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனையும்  6 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகளும் இவ்வாறு முன்னெடுக்கப்பட்டன. 

இதில் ஓட்டமாவடியில் அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் அன்டிஜன் பரிசோதனை செய்ததில் மூன்று பேருக்குமாக வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு – 15, முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 03 வீதிகள் இன்று (05) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

புனித அன்ரூஸ் வீதி, புனித அன்ரூஸ் மேல் மற்றும் கீழ் வீதி ஆகியன இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் (04) அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் பெரும்பாலானோர் குறித்த பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையை இனிவரும் நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறிப்பிட்ட சில இடங்களில் இன்று முதல் எழுமாறாக சிலரை தெரிவுசெய்து, ரெபிட் என்டிஜன் பரிசோதனையை முன்னெடுக்க திட்மிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், பொதுமக்கள் இதற்கு தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.