இலங்கை: கொரனா செய்திகள்

தெற்காசிய பிராந்தியத்தில் பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ள முதலாவது நாடு இலங்கை  என ஒளடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இராணுவம் அதிரடியாக களமிறங்கியது; நாளை காலை 8.30 முதல் தடுப்பூசி. தேசிய தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டத்தை துரிதப்படுத்த புதிய தடுப்பூசி சமூக நிலையங்கள் திங்களன்று (05) ஆரம்பமாகும் என இராணுவம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் கட்டளைக்கிணங்க பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரையின்படி புதிய நடமாடும் தடுப்பூசி சமூக நிலையங்களை திங்கட்கிழமை (05) முதல் நிறுவ உள்ளதோடு, சினோர்ஃபார்ம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்கும் தேசிய செயற்றிட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதன்படி

கொழும்பு இராணுவ வைத்தியசாலை (நாராஹேன்பிட்டி),

பத்தரமுல்லை தியத உயன,

பானாகொடை இராணுவ விகாரை

வெஹரஹேர முதலாவது இலங்கை இராணுவ வைத்திய படையணி தலைமையகம்

என்பவற்றில் நிறுவப்பட்டுள்ள தடுப்பூசி ஏற்றுவதற்கான நிலையங்களில் 2021 ஜூலை மாதம் 5ஆம் திகதி முதல் (திங்கள்) காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மேல் மாகாணத்தை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முதல் மாத்திரை தடுப்பூசி ஏற்றும் பணிகளை ஆரம்பிக்கப்படும்.

இவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வருவோர் மின்சார பட்டியல் அல்லது தொலைபேசி கட்டண ரசீதுகளுடன் நிரந்தர வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்கான கிராம சேவகரால் வழங்கப்பட்ட உறுதி பத்திரம் அல்லது அடையாள அட்டை அல்லது வாக்காளர் அட்டையை கொண்டு வருதல் அவசியமாகும்.

இதேபோன்ற இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி ஏற்றும் சமூக நிலையங்கள்

காலி வித்தியாலோக வித்தியாலயம் (காலி மாவட்டம்),

மாத்தறை மஹிந்த ராஜபக்‌ஷ வித்தியாலயம் (மாத்தறை மாவட்டம்),

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம் தியதலாவை (பதுளை மாவட்டம்),

அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலை (அனுராதபுரம் மாவட்டம்),

காலாட்படை பயிற்சி பாடசாலை மின்னேரிய (பொலன்னறுவை மாவட்டம்),

கிளிநொச்சி இராணுவ ஆதார வைத்தியசாலை (கிளிநொச்சி மாவட்டம்)

புதுகுடியிருப்பு மத்தியக் கல்லூரி, (முல்லைத்தீவு மாவட்டம்)

மன்னார் இலங்கை முதலீட்டுச் சபை கட்டிடம் (மன்னார் மாவட்டம்)

ஆகியன ஒரே நேரத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் திங்கட்கிழமை (05) தொடக்கம் காலை 08.30 மணி முதல் மாலை 04.30 வரை வழங்கப்படும்.

பொதுமக்கள் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டாலும், சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், தொற்றாளர்கள் குறைவாக பதிவாகுவதால், ஆபத்து இல்லை என்ற முடிவுக்கு நாம் வர முடியாது. தொடர்ந்தும் 1,500 முதல் 2,000 வரையில் தொற்றாளர்கள் பதிவாகின்ற நிலையில், டெல்டா திரிபு தொற்றியவர்கள் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் எதிர்காலத்தில் வேறு திரிபுகளும் ஏற்படலாம். எனவே, சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்ற வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.