இலங்கை: நிதியமைச்சர் பதவியிலிருந்து சகோதரர் பசிலை நீக்கிய கோத்தபய ராஜபக்சே

இலங்கை அரசு அந்நியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறி வருகிறது. இதனால் இலங்கையில் உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருள்களுக்கு கடும்கட்டுப்பாடு நிலவி வருகிறது. அங்கு அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இலங்கை அமைச்சரவையில் உள்ள 26 அமைச்சர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மொத்தமாக தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே மட்டும் பதவி விலகவில்லை. இதற்கிடையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது சகோதரரும், நாட்டின் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்துள்ளார்.

இலங்கையில் நிலவிவரும் அந்நியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிக்க அந்நாட்டிற்கு உதவுவதற்காக இந்திய அரசு அனுப்பிய நிவாரண உதவிகளில் பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையில் நிலவி வரும் பொருளதார நெருக்கடியை சமாளிப்பதற்கு, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து சாத்தியமான பிணைக்கடனுதவி பெற அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, நீதித்துறை அமைச்சராக இருந்த அலி சப்ரி புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சர்வேதச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை அதிபர், கோத்தபய ராஜபக்சே, அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியுள்ளதால், நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து கட்சிகளையும் ஒற்றுமையான அரசாங்கத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

(The Hindu)