D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட் அதிகாரிகள் தன்னிடம் 25 000 ரூபாய் பணத்தை இலஞ்சமாக கோருவதாக அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவில் மணல் விற்பனை மற்றும் போக்குவரத்து செயற்பாட்டில் ஈடுபடும் ஒருவர் கொழும்பிலுள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனடிப்படையில் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய சம்பவ தினமான சனிக்கிழமை(21) அம்பாறை மணிக்கூட்டு கோபுரம் அருகில் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட் அதிகாரிகள் கூறியமைக்கு அமைவாக இலஞ்சப் பணத்தை மணல் விற்பனை செய்யும் நபர் வழங்கியுள்ளார்.
இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த அதிகாரிகள் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட் அதிகாரிகளையும் கைது செய்துள்ளனர்.
மணல் விற்பனை மற்றும் போக்குவரத்து செயற்பாட்டில் ஈடுபடும் நபர் குறித்த தொழிலை எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடரவும் அந்த தொழில் தொடர்பாக சட்டப்பூர்வமாக செயல்படுவதைத் தவிர்க்கவும் சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளும் குறித்த நபரிடமிருந்து25000 ரூபாய் இலஞ்சம் கோரியிருந்தமை ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
பின்னர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு இரு சந்தேக நபர்களும் அழைத்து வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.