என்ன நடக்கிறது? ரஷ்யா வாழ் தமிழர் பேட்டி

இது குறித்து ரஷ்யாவில் வசித்து வரும் பாஸ்கரன் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், 

“நான் மாஸ்கோவில் வசித்து வருகிறேன். இங்கே பாதிக்கும் மேற்பட்டோருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. வாக்னர் அமைப்பு என்பது கேள்விக்குறியான அமைப்பு. அதன் தலைவர் சொல்வதையும் முழுமையாக நம்ப முடியாது. எனவே, இப்போது நிலைமை என்ன எனத் தெளிவாகச் சொல்ல முடியாது. இப்போது தகவல் யுத்தம் நடக்கிறது என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.

வாக்னர் அமைப்பு வெளியிட்டுள்ளதாகக் கூறப்பட்டும் அறிக்கையில் நிறைய விஷயங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்கோவில் மக்களின் இயல்பு வாழ்க்கை அனைத்தும் வழக்கம் போலவே இருக்கிறது. 

இன்று மாஸ்கோவில் இந்திய தூதரகத்தில் சிறப்பு நிகழ்ச்சி கூட நடக்கிறது. அது ரத்தானதாகக் கூட தகவல் இல்லை. பொது நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும் என மாஸ்கோ மேயர் மட்டுமே வேண்டுகோள் விடுத்துள்ளார். இருப்பினும், இங்கே பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை.

எல்லை நகரில் மட்டுமே இப்போது சில ராணுவ நடவடிக்கைகள் இருப்பதாகத் தெரிகிறது. மாஸ்கோவில் வசிக்கும் மக்கள் பெரிதாக இது குறித்துக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வாக்னர், பிரிகோஜின் சொல்வதை நாம் முழுமையாக நம்ப முடியாது. அவர்கள் என்ன செய்கிறார் என்றும் நமக்கு முழுமையாகத் தெரியாது.

அதேநேரம் இது குறித்து புதின் வெளியிட்டுள்ள வீடியோ ரொம்பவே முக்கியமானது. அதில் வாக்னர் குழுவின் நடவடிக்கையால் அந்த நகரில் ராணுவ மற்றும் சிவில் நடவடிக்கை முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதை நாம் முக்கியமாகப் பார்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் திணறி வரும் நிலையில், இப்போது அங்குள்ள தனியார் ராணுவம் குழுவான வாக்னர் அமைப்பு ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகத் திரும்பியுள்ளது.

இத்தனை ஆண்டுகளாக ரஷ்யாவுக்கும் புதினுக்கும் மிகப் பெரிய பலமாக இருந்த வாக்னர் குழுவே இப்போது அவர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். இதனால் அங்கே உள்நாட்டுப் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.