ஐ.நா அறிக்கையை நிராகரித்தது மியான்மார் இராணுவம்

ரோகிஞ்சா முஸ்லிம்கள் மீது, மியான்மார் இராணுவத்தினால் கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன என்று ஐக்கிய நாடுகள் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளை, மியான்மார் இராணுவம், இன்று (23) நிராகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால், இவ்வாண்டு பெப்ரவரியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் எனக் கருதக்கூடிய சம்பவங்கள் இடம்பெற்ற, இனவழிப்பு என கருதப்படக்கூடிய நடவடிக்கையில், மியான்மாரின் பாதுகாப்புப் படைகள், பாரியளவிலான கொலைகளைப் புரிந்ததாகவும், ரோகிஞ்சாக்களை கூட்டு வன்புணர்வு க்குட்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள 18 குற்றச்சாடுகளில், 12 பிழையானவை என்று என்று கண்டுபிடிக்கப் -பட்டுள்ளதுடன், மிகுதி ஆறும் பொய்யானவை என்றும் சோடிக்கப்பட்டவை என்றும், பொய்களையும் கட்டுக்கதைகளையும் அடிப்படையாகக் கொண்டவை என உள்ளக இராணுவ விசாரணையின் முடிவில் தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.