கிழக்கு முதல்வருக்கு எதிராக மனுத்தாக்கல்

திருகோணமலை, சம்பூர் பாடசாலையொன்றில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, கடற்படை உயரதிகாரியொருவரை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் ஏசிய விவகாரத்தைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில், உயர்நீதிமன்றத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (07), அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு முதலமைச்சரின் நடவடிக்கை காரணமாக, மேற்படி கடற்படை உயரதிகாரியினதும், சம்பவத்தின் போது மேடையில் நின்றிருந்த பாடசாலை மாணவர்களினதும் கௌரவம் சீர்குலைக்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டி, பி.லியனாரச்சி என்ற சட்டத்தரணியால், மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு சீர்குலைக்கப்பட்ட கௌரவத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டுமாயின், உயர்நீதிமன்றத்தினால் உரிய உத்தரவொன்று பிறப்பிக்கப்படல் வேண்டும். முதலமைச்சரின் செயற்பட்டால், ஒட்டுமொத்த இலங்கையர்களதும் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளது. அதனால், உரிய தீர்ப்பொன்றை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் எனவும், மேற்படி மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.