கொரோனா தொற்று கிழக்கில் 915 ஆகியது

அத்துடன், கல்முனைப் பிராந்தியத்தில் 16,785 நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மற்றும் அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நேற்று வரையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 665ஆக அதிகரித்துள்ளதாகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

மேலும், இன்று காலை முடிந்த 24 மணித்தியாலங்களில் 51 பேர், கிழக்கில் மாகாணத்தில் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கூடிய 22 பேர் கல்முனை தெற்கிலும் அடுத்ததாக 10 பேர் பொத்துவிலிலும் இனங்காணப்பட்டிருந்தனர்.

திருமலை மாவட்டத்தில் நீண்டகாலமாக 20க்குள் இருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று திடீரென 94ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், அவசர அவசரமாக சுகாதாரத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளின் உயரதிகாரிகளை அழைத்து, கூட்டமொன்றை நடத்தி, முக்கியமான தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்துக்குள் யாரும் அநாவசியமாக பிரவேசிக்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனைய நடவடிக்கைகளை இறுக்கமாகப்பேணவும் ஆளுநரால் உத்தரவிடப்பட்டுள்ளன.

இதுவரை கிழக்கில் பேலியகொட கொத்தணி மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 110 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 665 பேரும் திருமலை மாவட்டத்தில் 94 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 23 பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.

மேலும், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பொதுமக்கள் தொடர்ந்து சமூக இடைவெளி மற்றும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து, வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும், இதனை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.