கோல்​பேஸ் போராட்டம் தொடர்கிறது

காலிமுகத்திடலை மேவியிருந்த போராட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள், நேற்று (09) நள்ளிரவுடன் சென்றுவிட்டனர். எனினும், ஒருசிறு குழுவினர், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கைகளை கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுத்திருந்தனர்.

விடியவிடிய முன்னெடுக்கப்பட்ட போராட்டம் விடிந்தும் தொடர்ந்தது. அவர்களுடன் மேலும் சிலர், தங்களையும் காலையிலும், பிற்பகலிலும் இணைத்துக்கொண்டனர். இதனால், காலிமுகத்திடலின் போராட்டம் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

போராட்டத்துக்கு வருவோருக்கு நேற்றையதினம் தண்ணீர் போத்தல்கள்   தன்னார்வ தொண்டர்களினால் வழங்கப்பட்டன. இன்றையதினமும் சுடசுட தேநீர் மற்றும் மரவள்ளி கிழங்கு அவியல், தன்னார்வ தொண்டர்களினால் வழங்கப்படுகின்றனமை சிறப்பு அம்சமாகும்.

சீரற்ற வானிலையையும் கடும் மழையையும் ​பொருட்படுத்தாது, போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் ராஜபக்ஷர்களையும் வீட்டுக்குச் செல்லுமாறும் இந்த அரசாங்கத்தையும் வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.