சுரேஸ் மாணிக்கவாசகத்தை நாடு கடத்தும் உத்தரவை அமுல்படுத்தும் கனடா!

 

1995ல் கைது செய்யப்பட்டு நாடு கடத்த முயற்சிக்கப்பட்ட கனடா உலகத்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்த சுரேஸ் மாணிக்கவாசகத்தை நாடு கடத்துவதற்கான உத்தரவை கனடிய உச்சநீதிமன்றம் 2002ல் இடைநிறுத்தி அவருடைய வழக்கு மீள்விசாரணைக்கான அனுமதியை வழங்கியிருந்தது.
இப்போது இப்போது புதிதாகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் அவரிற்கான நாடுகடத்தல் உத்தரவு 13 வருடங்கள் கழித்து மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டங்களின் படி திரு.சுரேஸ் மாணிக்கவாசகம் தனக்கான இந்த உத்தரவு குறித்த தனது வாதப்பிரதிவாதங்களை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லமுடியாது. எனவே அவரை கனடிய அரசு எந்த நேரமும் நாடுகடத்த முடியும்.
வாய் மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தனது தரப்பு வாதத்தை முன்வைக்க முடியாதபடியான இந்த உத்தரவு கனடிய அமைச்சரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தார், உலகத்தமிழர் இயக்கத்தை வழிநடத்தினார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் என நம்பப்படுகின்றன.
கனடிய ஆங்கிலப் பத்திரிகைத் தகவல்களின் படி, இந்த மாதம் 60 வயதையடையும் சுரேஸ் மாணிக்கவாசகம் மார்ச் 23, 1998ல் தான் வசிக்கும் பகுதியிலிருந்து 50 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் எங்கும் செல்லக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளின் அடிப்படையில் 40 ஆயிரம் பணப் பிணை மற்றும் 150 ஆயிரம் டொலர்கள் சொத்துப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஒரு புறம் யாழ்ப்பாணத்தில் கனடிய உயர்ஸ்தானிரின் அலுவலகத்தை திறந்து இலங்கைத் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்வோம் என்று கன்சவேட்டிவ் கட்சி தேர்தல் பிரச்சாரம் செய்கின்றது. மறு புறத்தில் தனது ஆட்சிக் காலத்தின் இறுதியில் இவ்வாறு பழைய கோப்புக்களை நூசி தட்டி எடுத்து நாடுகடத்தும் வேலையிலும் ஈடுபட்டு வருவது இவர்களின் இரட்டை நிலையயை எடுத்துக்காட்டுகின்றது என்று அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்