சென்னை மேயர் பதவியை விசிக கோருகிறது? சாந்தி என்கின்ற யாழினியை ….

கூட்டணிக் கட்சித் தலைவர்களும் அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்து தங்களது அடுத்தகட்ட தேவைகளை மனுவாக கொடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

கவுன்சிலர்கள் மூலமே மேயர், துணை மேயர், நகராட்சி- பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதால்… தங்களது கட்சிகளுக்கு இந்த பதவிகளில் பங்கு வேண்டுமென கூட்டணி கட்சி தலைவர்கள் ஸ்டாலினிடம் நேரடியாகவும் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த வகையில் ஸ்டாலினை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது கட்சி சார்பாக எதிர்பார்க்கும் பதவிகள் அடங்கிய பட்டியலை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார்.

சென்னை மாநகராட்சியில் 6 வேட்பாளர்கள் போட்டியிட்டு 4 வேட்பாளர்கள் ஜெயித்திருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவரான சாந்தி என்கிற யாழினியை சென்னை மாநகராட்சியின் மேயர் பொறுப்புக்கு பரிந்துரை செய்தால் திமுகவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும் என்று ஒரு கோரிக்கையை திருமாவளவன் முன்வைத்ததாக அக்கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்கும் ஸ்டாலின், அவர்களின் கோரிக்கைகளுக்கு அந்த இடத்தில் பதிலேதும் சொல்வதில்லை‌.

சென்னை மேயர் பதவியை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கேட்பது குறித்து சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்களிடம் ஸ்டாலின் பிறகு கூறியிருக்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியான சேகர் பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், “மேயர் பதவி என்பது திமுகவுக்கு தான். அதை யாருக்கும் விட்டுக் கொடுத்துவிட முடியாது. சென்னை மாநகராட்சியை பட்டியலின பெண்களுக்கு கொடுத்தது உங்களின் மிகப்பெரிய வரலாற்று புரட்சி. அந்த புரட்சியை ரிப்பன் மாளிகையில் திமுக மேயர் தான் செயல்படுத்த வேண்டும்” என்று ஸ்டாலினிடம் அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்கள்.