ஜனநாயக போராட்டங்கள் மூலம் விடுதலையை நோக்கி பயணிக்க வேண்டும்

விடுதலையியை நோக்கி பயணிப்பதற்கு பெளதீக வளங்களை இலட்சியமாக கொண்டு இருக்காது, ஜனநாயக போராட்டங்களின் மூலம் விடுதலையினை நோக்கி பயணிக்க வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். சேகுவேராவின் நினைவு தின நிகழ்வு யாழ். ரிம்பர் மண்டபத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணம் போரினாலும் முதலாளித்துவ மற்றும் இனவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் முழுமையாக கிடைக்கவில்லை. சேகுவேரா இன ஒடுக்குமுறைக்காக போராடியவர்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பிரிவினையினை தவிர்த்து எதிரிகளை அடையாளம் கண்டு விடுதலை போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அடிப்படை உரிமைகளின்றி வாழ்கின்றார்கள். மக்களின் அடிப்படை உரிமைகளை வழங்குவதில் எடுத்துக் காட்டாக இருக்கின்றது.

முதலாளித்துவத்தினை தோற்கடிப்பதற்கு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்பது சேகுவேராவின் கருத்தாக இருக்கின்றது.

பெளதீக வளங்களை இலட்சியமாக கொண்டு இருக்கவில்லை. மாற்றங்கள் எமக்கு கட்டாயம் தேவை. அந்த மாற்றங்களுக்கு வழிகாட்டக் கூடியவராக சே இருக்கின்றார்.

எந்தவொரு மாற்றமும் ஏற்படாத நிலை தற்போது இருக்கின்றது. விவசாயம் பொருளாதார ரீதியில் நெருக்கடியாக இருக்கின்றது. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக விவசாயிகளின் பிரச்சினைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

சிறுவர்கள் மற்றும் பெண்கள் வன்முறைகளினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். வன்முறைகளை ஒழிப்பதற்கு சமூகத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அத்துடன் தேசிய நல்லிணக்கம் அவசியமாக இருக்கின்றது.

அத்துடன் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். ஆனால் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.

வல்லரசு நாடுகளினால் எமது நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியாது. எமது நாட்டு ஆட்சியாளர்களினால் அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும். போராட்டங்களின் மூலம் வடக்கினையும், கிழக்கினையும் இணைத்துக் கொள்ள வேண்டும். சேயின் வழியில் செல்ல வேண்டும்.

எமது இளைஞர்கள் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதனால் விடுதலையினை நோக்கி பயணிக்க முடியும். எனவே நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.