டெனீஸ்வரனின் மனு தொடர்பில் ஒக். 3இல் உத்தரவு

வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்த ரிட் மனுவின் அடிப்படையில், இடைக்காலத் தடையுத்தரவு மற்றும் பிரதிவாதிகளுக்கான நோட்டீஸ் பிறப்பிப்பது தொடர்பான உத்தரவு, ஒக்டோபர் 3ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (19) அறிவித்தது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிராகவே மனுத்தாக்கல் செய்திருந்தார்.

தன்னைப் பதவி நீக்கியதற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கும்படியும், வடமாகாண சபையின் உறுப்பினர்களான ஜி.குணசீலன் மற்றும் கே.சிவநேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டமைக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்குமாறும் அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.

மனுவில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், கே.சர்வேஸ்வரன், ஜி.குணசீலன், கே.சிவநேசன், முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.