தமிழ் மக்கள் பேரவையில் இணைய அணி திரண்டு வாருங்கள் (ஏற்பாட்டுக்குழு அறைகூவல்)

அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ் மக்களின் உரிமைகளை, நலன்களை வென்றெடுப்பதற்காக மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் இணைத் தலைமையில் உருவாக் கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவைக்கு தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தமிழ் உறவுகள் வாழும் இடங்களிலும் பலத்த ஆதரவு கிடைத்து வருகிறது. நாளுக்கு நாள் தமிழ் மக்கள் பேரவைக்கு வருகின்ற தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல் செய்திகள், குறுஞ் செய்திகள், முகநூல் கருத்துக்கள் தமிழ்மக்கள் பேரவை மிக விரைவில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் ஒன்றிணைத்து மக்கள் இயக்கமாகப் பரிணமிக்கப்போவதைத் கோடி காட்டியுள்ளது.

இதேவேளை எங்களையும் தமிழ்மக்கள் பேரவையில் சேருங்கள். நாங்கள் இழந்தது ஏராளம். அரசியல் என்ற பெயரால் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமை களை இழந்து, தருவதைப் பெற்று வாழ்வோம் என்ற தமிழ் அரசியல்வாதிகளின் புரியாமையை, அறியாமையை தொடர்ந்தும் நாம் பார்த்திருக்க முடியாது என்று தத்தம் ஆதங்கத்தைத் தெரிவித்து நிற்கும் தமிழ் நெஞ்சங்களால் தமிழ்மக்கள் பேரவை நெக்குருகி நிற்கிறது. அன்பார்ந்த தமிழ் உறவுகளே! நீங்கள் அனை வரும் தமிழ்மக்கள் பேரவையில் இணைந்து மக்கள் இயக்கமாகப் பேரவையை உலகுக்கு காட்ட முன்வாருங்கள்.

2016 இல் சப்புச் சவலான தீர்வுக்கு ஆமாம் போடும் தமிழ் அரசியல் தலைமைக்கு ஒரு செய்தியைச் சொல்லுங்கள். தீர்வு உங்களுக்கானது அல்ல அது தமிழ்மக்களுக்கானது. எனவே எங்கள் பிள்ளைகள் செய்த தியாகம், நாங்கள்பட்ட துன் பம், வன்னிப் பெருநிலப் பரப்பில் எங்களுக்கு ஏற் பட்ட பேரிழப்புகள் யாவற்றுக்கும் கிடைக்கின்ற தீர்வு என்பது நாம் எதிர்பார்ப்பதாக இருக்க வேண்டும்.
நாங்கள் அரசியல் தலை மையில் இருக்கும்போது ஏதோ ஒரு தீர்வைப் பெற்று விட்டால் அது போதும் என்று நினைப்பது எங்கள் இனம் தொடர்ந்தும் அவலப்படவே வழிவகுக் கும். ஆகையால் அடையப் படும் தீர்வு எங்களுக்கு நிரந்தரமான தீர்வாக அமைய வேண்டும். எங்கள் எதிர்கால சந்ததி எங் களைப் போல அல்லற்படாமல் நிம்மதியாக வாழக் கூடியதாக இருக்கவேண்டும். இதை வலியுறுத்து வது எங்கள் கடமை. இச் சந்தர்ப்பத்தை நாம் நழுவ விட்டால் நிலைமை மோசமாகிவிடும்.

அன்பார்ந்த தமிழ் மக்களே! பொது அமைப்புகளின் பிரதிநிதிகளே! தமிழ் மக்கள் பேரவையோடு இணைந்து கொள் ளுங்கள். உங்களுக்காக பேரவையின் கதவுகள் திறந்திருக்கின்றன. வடக்கு கிழக்கு மக்கள் கைகோர்த்து நிற்கின்ற இந்த அமைப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவது உங்கள் கைகளில் என்பதை மறந்து விடாதீர்கள். அன்பார்ந்த தமிழ் இளைஞர்களே! ஜனநாயக வழியில் எங்கள் உரிமைகளை கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. இந்த நாட்டில் ஜனநாயகம் தழைக்க வேண்டுமாயின் ஜனநாயகத்தின் பெயரால் தமிழ் மக்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும். விவேகம் மிக்க தமிழ் இளைஞர்களாகிய உங்கள் உணர்வுகள் மெளனிக்கப்பட்டுள்ளன. நீங்களே இந்த நாட்டின் வலிமைமிகு சக்தி. நீங்கள் பேசவேண்டும். உங்கள் கருத்துக்கள் வெளி வர வேண்டும். முதுமை என்பது இளைஞருக்கு வழிகாட்டவேண்டுமாயினும் எங்கள் அரசியலில் அதற்கு ஒருபோதும் இடமில்லை.

ஆனால் தமிழ் மக் களின் அமைப்பாகிய தமிழ் மக்கள் பேரவையில் உங்களுக்கே முன்னுரிமை என்பதால் பேரவையுடன் இணையுங்கள். உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். பேரவையின் செயற்பாடுகளை விஸ்தரியுங்கள், கிராமங்கள் தோறும் சென்று மக்கள் பணி செய்யுங்கள். எங்கள் தமிழ் இனத்தின் பெற்றோர்களே! அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்று வீட்டில் இருந்து வீணாகிறது நேரம் என்ற கவ லைகள் இனி வேண்டாம். தமிழ் மக்கள் பேரவையுடன் இணையுங்கள். மக்கள் பணி செய்ய வாருங்கள். எங்கள் மக்கள் படும் துன்ப துயரங்களை அறியுங்கள். வாருங்கள் உங்கள் முதுமையின் பட்டறி வைத் தாருங்கள். அரசியல் என்ற எல்லையைத் தாண்டி தமிழ்மக்களுக்கான பணி என்பது பற்றி சிந்தியுங்கள். எங்கள் மக் களுக்கு எங்களால் முடிந்த சேவையைச் செய்வோம் என்று திடசங்கற்பம் கொள்ளுங்கள். உங்கள் தமிழ் மக்கள் பேரவையில் இணையுங்கள்.

ஜனநாயகத்தோடு – ஆன்மீகத்தின் பலத்தோடு, பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு தமிழினமே பலம் என்ற மனவுறுதியோடு அனைத்து தமிழ்மக்களும் பொது அமைப்புகளும் தமிழ் மக்கள் பேரவையுடன் இணையுங்கள். எல்லாம் நல்லதாக நடக்கும். இறைவன் நிச்சயம் எங்கள் தமிழினத்திற்கு உதவுவான். நாங்கள் நேர்மைத் திறத்துடன், உறுதி கொண்ட நெஞ்சுடன் செயற்படுவோம். எங்கள் தமிழினத்திற்காக பாடுபடுவோம். வாருங் கள் தமிழ் மக்கள் பேரவையில் இணையுங்கள்.

ஏற்பாட்டுக் குழு – தமிழ் மக்கள் பேரவை
தொடர்பு :- +94 75 6993211
email :- contact@tamilpeoplescouncil.org