நாட்டுக்குள் நுழைந்தது சீனக் கப்பல்?

சேதன உரத் தொகுதியை  ஏற்றிய குறித்த கப்பல் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், கப்பல் தொடர்பில் தமக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த அதிகாரசபையின் அதிகாரி, கடல் மாரக்கமாகப் பயணிக்கும் போது இலங்கை எல்லைக்குள் நுழைவது சட்ட விரோதமாகாது என்றும் குறிப்பிட்டார்.

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக மாத்திரமே இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பை கண்காணிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன நிறுவனமான குவின்ங்டாவோ சீவின் பயோடெக் குருப் கம்பனியின் சேதன உரத் தொகுதியை ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் இலங்கைக்கு கொண்டுவந்தது.
 
முதல் மாதிரிகள் இலங்கையால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, கப்பல், சீனாவுக்குத் திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக, சிங்கப்பூருக்குப் பயணம் செய்த ஹிப்போ ஸ்பிரிட், சீனாவுக்குத் திரும்பாமல் இலங்கைக்கு மீண்டும் திரும்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை (National Plant Quarantine Service) மூலம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகள் பரீட்சிக்கப்பட்டுள்ளதுடன், பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒருசில பக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்கள் அதில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.