‘நாட்டுக்கு பங்கம் விளைவிக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்போவதில்லை’

அத்துடன், நாட்டைக் காட்டிக்கொடுக்கும் சொபா மிலேனியம், செலேஞ் உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் மற்றும் நாட்டுக்குப் பொருந்தாத காணிச் சட்டங்கள் தொடர்பில் சமூகத்தில் பல்வேறு தரப்புகள் கருத்துகளை முன்வைத்து வருவதாகத் தெரிவித் ஜனாதிபதி, அக்கருத்துகளின் தன்மை எவ்வாறாக அமைந்தாலும், நாட்டுக்கு பங்கம் ஏற்படுத்தும். அதேபோன்று நாட்டுக்கு பொருந்தாத எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் தான் உடன்படப் போவதில்லையெனவும் கூறினார்.

இன்று (06) முற்பகல் பிபிலை பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” மொனராகலை மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரையாற்றிய அவர், தேசத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் கடத்தலை இல்லாதொழிப்பதற்கு தான் தலைமைதாங்கும் இச்சந்தர்ப்பத்தில், சில அதிகாரமிக்க அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை காப்பாற்றுவதற்கு முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்தகைய செயற்பாடுகளின் பிரதிபலன்களை அப்பாவி குழந்தைகளே அனுபவிக்க நேரிடுமெனத் தெரிவித்த ஜனாதிபதி, போதைப்பொருள் கட்டத்தல்காரர்களுக்கு எதிராக தன்னால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் அனைவரும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் அவர்களால் வழங்கப்படும் பணத்துக்காகவும் செயற்படும் நபர்களாவரெனவும் ககூறினார்.

போதைப்பொருள் கடத்தல் காரணமாக நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாதென்றும் போதைப்பொருள் அச்சுறுத்தல் விஸ்வரூபம் எடுப்பதற்கான ஒரே காரணம் இதுவரை ஆட்சியமைத்த எந்தவோர் அரசாங்கமும் அரசியல் தேவைகளின் பொருட்டு, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல் படுத்தாமையேயாகுமெனவும், அவர் தெரிவித்தார்.

இன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தான் முன்னெடுத்திருக்கும் செயற்பாடுகளின் காரணத்தினால், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் தெளிவான பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் பொதுவான கொள்கைகளுக்கு அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் ஒன்றுபட வேண்டுமென்றும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பிளவுபடுவதனூடாக ஒட்டுமொத்த நாடும் நாசமடைந்துவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.