நித்தியாவுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

மக்கள் விடுதலை முன்னணியின் கீழ் இயங்கும் ஆசிரிய தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் இவ்ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.

உடுவரை பெருந்தோட்ட (நேப்பியர்) கீழ்ப்பிரிவைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய தர்மராஜா நித்தியா என்ற மாணவியின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர், விசாரணையின் பின்னர், பதுளை நீதவான்  சமிந்த கருணாதாச முன்னிலையில் நேற்று (9)  ஆஜர் செய்யப்பட்டார்.

 சந்தேக நபரை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், தொடர்ந்து புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி, ஹாலி-எலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ருவன் குணதிலக்கவிற்கு ,நீதவான்  சமிந்த கருணாதாச, உத்தரவிட்டார்.

மகளிர் தினத்தன்று,  பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தர்மராஜா நித்தியா, கோடரியினால் தாக்கப்பட்டு,  கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொலைச் சந்தேக நபர், பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்தார்.

இந் நபரைக் கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு, தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சந்தேக நபர் 9ஆம் திகதி  கைது செய்யப்பட்டார்.

அந் நபர் பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், தனது காதலுக்கு சாதகமான பதில் வழங்காமல், தன்னை நித்தியா ஏமாற்றியதால், ஆத்திரம் கொண்ட தான் கோடரியினால் தாக்கி கொலை செய்தேன் என்று வாக்குமூலமளித்துள்ளார்.