இன்று பெய்த அடைமழை காரணமாக நகரின் வடிகால்கள் பெருக்கெடுத்து, வெள்ள நீர் பிரதான வீதிகளுக்குள் புகுந்தது. இதனால் பண்டாரவளை நகரின் வர்த்தக நிலையங்களுக்குள் நீர் புகுந்துள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் வெள்ள நீர் மட்டத்திற்கு மேல் பாய்ந்ததால், சிறிய ரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பண்டாரவளை – பதுளை மற்றும் பண்டாரவளை – தியத்தலாவ ஆகிய பிரதான வீதிகளில் நீண்ட வாகன நெரிசல் காணப்பட்டது.வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்தவும், தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் நகர சபையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், மலைப்பாங்கான வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.