பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிபதி பணிப்பு

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை பகுதியில் அத்துமீறிய அபகரிப்பு தொடர்பான வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், நீதிபதி எம்.என்.அப்துல்லா தலைமையில் இன்று (22) எடுத்துக்கொள்ளப்பட்டது.

பண்ணையாளர்கள் சார்பில் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை அபகரிப்பு தொடர்பான வழக்கு, கடந்த மாதம் 18ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, பிரதிவாதிகளும் மேய்ச்சல்தரையில் அத்துமீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரும் நீதிமன்றில் ஆஜராகியிருந்ததாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தெரிவித்தார்.

இதன்போது, மேய்ச்சல் தரையில் பண்ணையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, குறிப்பிட்ட அதிகாரிகள் மேய்ச்சல்தரை பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும், பண்ணையாளர்கள் மேய்ச்சல்தரையை பாவிப்பதை தடைசெய்யக்கூடாது, அதனை நடைமுறைப்படுத்துவதாக அரச சட்டத்தரணி ஏற்றுக்கொண்டதுடன், அது தொடர்பில் உரிய அதிகாரிகளை அறிவுறுத்துவதாக நீதிமன்றுக்கு வாக்குறுதியளித்தாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.

தற்போது மேய்ச்சல்தரை அபகரிப்பட்டதாக தெரிவிக்கப்படும் பகுதியை தவிர, அப்பகுதியில் எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்ககூடாது என்பதற்கும் அரச சட்டத்தரணி இணக்கம் தெரிவித்தார்.

வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரையில் தற்போது பிடிக்கப்பட்டுள்ள காணியை அவ்வாறே பேணுமாறும் வேறு எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்ககூடாது என பணிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ரத்தினவேல் தெரிவித்தார்.

அதேவேளை, இந்த வழக்கு, மார்ச் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.