பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாலங்களை திறந்த இளைஞர்கள்

நோர்வூட் பிரதேச சபைக்கு சொந்தமான பொகவந்தலாவ கெர்கஸ்வோல்ட் எல்பட கீழ்பிரிவு மற்றும் மேற் பிரிவு ஆகிய தோட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் நாளாந்தம் போக்குவரத்திற்கு  பயன்படுத்தும் கெசல்கமுவ ஒயாவை ஊடறுத்து  செல்லும் இரண்டும் தொங்கு பாலங்களே புனரமைக்கப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.

பாலம் அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம் பெற்றதன் பின்னர்  குறித்த இரண்டு தொங்கு பாலங்களும் திறந்து  வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கெர்க்கஸ்வோல்ட் தோட்ட உதவி முகாமையாளர்களான டி.எம். ஆர்.எஸ். மதுவந்த திஸாநாயக்க ,பி.எம்.ஏ.ஆக்கேஷ் சரமசிங்க, தோட்ட இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த இரண்டு பாலங்களும் நோர்வூட் பிரதேச சபைக்கு சொந்தமானது இந்த பாலம்  சுமார் நூறு வருடங்கள் பழைமைவாய்ந்தன.

இந்த பாலங்களை புனரமைத்து தருமாறு பல அரசியல்வாதிகளிடம் கோரிக்கைகளை முன்வைத்து வந்த போதிலும் இந்த பாலம் தொடர்பில் எவரும் அக்கறை செலுத்தவில்லை ஆகையால் தான் நாங்கள் எமது தோட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு எமது தோட்ட இளைஞர்கள் அனைவரும் ஒன்றினைந்து இரவு பகல் பாராமல் பாலத்தினை புனரமைத்து  மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டதாக எல்பட தோட்ட இளைஞர்கள் தெரிவித்தனர் .

புனரமைக்கப்பட்ட இரண்டு பாலங்களையும் சில அரசியல்வாதிகள் திறக்கப் போவதாக எமக்கு தகவல் கிடைக்க பெற்ற போதிலும் அதற்கு எமது இளைஞர்கள்  அதை ஏற்றுக்கொள்ளவில்லை  இருந்த போதிலும் பாலம் திறப்பு விழா நிகழ்வும் இடம் பெற்ற பகுதிக்கு இளைஞர்களின் பாதுகாப்பு கருதி விசேட அதிரடிப்படையினரும் நோர்வூட் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர் .

சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இவ்விரு பாலங்களும் புன​ரமைக்கப்பட்டுள்ளன என பாலங்களை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.