‘புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த செயற்படுகிறது’

‘அமெரிக்காவிலுள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு, நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது, நாட்டை அபிவிருத்திச் செய்வதற்கான செயற்பாடல்ல பலவீனப்படுத்தும் செயற்பாட்டாகும்.’ என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஹம்மட் முஸமில் தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ‘குறித்த நிறுவனத்துக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன்

தொடர்பினை வைத்திருந்த ராஜ் ராஜரத்தினத்துக்கும் நெருங்கிய தொடர்புடைய நிறுவனம் என்பதுடன், குறித்த நிறுவனமானது இவருக்கு இரகசியமாக தகவல் வழங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது. குறித்த நிறுவனம் தமது வாடிக்கையாளரின் தனிப்பட்ட தன்மையைப் பேணுவதில் பலவீனப்பட்டது என்ற அபகீர்த்தியையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இவ்வாறானதொரு நிறுவனத்துடன் உறவினைப் பேணுகின்றமையானது, இலங்கையின் நிர்வாகத்துறையினை பலவீனப்படுத்தும் ஒரு செயற்பாடு எனத்தெரிவித்தார்.

‘காணாமற்போனோர் தொடர்பில் ஆய்வு செய்யும் அலுவலகத்தினை ஸ்தாபிப்பதன் மூலம் நாட்டின் இராணுவத்தினைப் பலவீனப்படுத்தினார்கள், புதிய அரசியலமைப்பினை ஸ்தாபிப்பதன் மூலம், நாட்டை பலவீனப்படுத்தினார்கள், மூன்றாவதாக நாட்டின் அபிவிருத்தி திட்டத்தினை வெளிநாட்டு தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்குகின்றமை நாட்டின் நிர்வாகத் துறையினை பலவீனப்படுத்துவதற்கான செயற்பாடு, என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது’ என்றார்.