பொறுப்புக்கூற வேண்டியவர்களின் கவனத்துக்கு

எவ்வாறாயினும், இவ்வாறான சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யும் போது தாம் பயணிக்கும் பேருந்து பற்றிய விவரங்கள் மற்றும் தரக் கடிதம், தங்கியிருக்குமிடம், பயணம் செய்யும் தேசப்படம், மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து அனுமதிக் கடிதம் போன்ற பல தகவல்களை கல்வி வலயத்துக்கு சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நடைமுறை உள்ளது.

இவ்வாறு அனுமதியை வழங்கும் பொறுப்பதிகாரி, மாணவர்கள் பயணிக்கும் பேருந்தின் தரம் தொடர்பில் பரிசோதித்து அதற்கான அனுமதியை வழங்கும் நடைமுறை காணப்பட்ட போதிலும், கடந்த வெள்ளிக்கிழமை மாலை ரதெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பேருந்தின் பிரேக் கட்டமைப்பு இயங்காமை காரணமாக அமைந்திருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பேருந்தில் பயணம் செய்த மாணவர்களுக்கு சிறு காயங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளதாகவும், மரணித்தவர்கள் வேன் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

கல்விச்சுற்றுலா என்பது மாணவர்களுக்கு பயனளிக்கக்கூடிய பொது விடயங்களைப் பற்றி அறிந்து கொள்ளக்கூடிய சுற்றுலாவாக அமைந்திருப்பது சிறந்தது. குறிப்பாக, தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலவும் காலப்பகுதியில் பெற்றோர்களிடமிருந்து இந்தப் பயணத்துக்காக ஒரு தொகைப் பணம் அறவிடப்பட்டே இவ்வாறான சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பயணங்களில் சில மாணவர்களின் பெற்றோர்களும் மேற்பார்வைக்காக செல்வது வழமை.

பேருந்துகளின் தரத்தை பரிசோதிக்கையில் அவற்றில் தரம் தொடர்பில் கவனம் செலுத்தாமல், இசைக் கட்டமைப்புகள் உள்ளனவா? பேருந்தின் ஹோன் பல ஒலிகளில் இயங்குகின்றதா? வர்ண வர்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளனவா? போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தப்படுகின்றன. சாரதியின் அனுபவம், குறிப்பாக கொழும்பு, புத்தளம், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலிருந்து மலைநாட்டுக்கு சுற்றுப் பயணம் செய்கையில், சாரதிக்கு அப்பகுதிகளில் பேருந்தை செலுத்திய அனுபவம் உள்ளதா போன்ற விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

அத்துடன் கல்விச் சுற்றுலாக்களுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்துவது சிறந்ததாகும். இதற்கான அனுமதியைப் பெறுவது சற்று நீண்ட செயன்முறையாக உள்ளதுடன், கட்டணங்களும் தனியார் பேருந்துகளை பதிவு செய்வதற்கு ஒப்பானதாக இருப்பதால் ஏற்பாட்டாளர்கள் தனியார் பேருந்துகளை நாடுகின்றனர்.

சரி, இவ்வாறு பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்புக்கூறுவது?

(Tamil Mirror)