மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியம் ஏற்பாடுசெய்திருந்த கவன ஈர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு அருகே நடைபெற்றது.

காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டியும் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைவேண்டியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் மட்டக்களப்பு மாவட்ட சங்க உறுப்பினர்கள்,அருட்தந்தையர்கள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றிய பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேச விசாரணைவேண்டும் என்ற கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் தமது உறவுகளை மீட்டுத்தரவும் காணாமல்ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையினை வெளிப்படுத்தவும் சர்வதேச சமுகம் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கமே ஒப்படைக்கப்பட்ட,சரணடைந்த பிள்ளைகள் எங்கே,அச்சுறுத்தாதே அச்சுறுத்தாதே அரச புலனாய்வுத்துறையினர் மூலம் அச்சுறுத்தாதே,சர்வதேசமே மறுக்கப்படும் நீதியைப்பெற்றுத்தா,இலங்கை அரசே உம்மிடம் கையளித்த எங்கள் பிள்ளைகள் எங்கே,சர்வதேசமே இலங்கை அரசுக்கு துணைபோகாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் பெருமளவான கண்தானம் செய்துள்ளதாக அந்த நாடுகளில் உள்ள முக்கிஸ்தர்கள் தெரிவித்துள்ள நிலையில் இந்த கண்களை இலங்கை அரசாங்கம் எங்கிருந்து பெற்றுக்கொண்டது என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன் ஆகியோரினால் கோரப்பட்டது.