மட்டக்களப்பு விமான நிலையத்தை, ’சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டுகோள்’

இந்திய உயர்ஸ்தானிகரையும் முக்கிய உறுப்பினர்களையும் திருகோணமலையில் வைதது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நேற்று (13) சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு குறித்து தெரிவித்த சாணக்கியன் எம்.பி, “மட்டக்களப்பு விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை இந்தியா அரசு வலியுறுத்த வேண்டும்.

“இதன்மூலம், உள்ளூர் பயண சேவைகளை உருவாக்க முடியும். அதனோடு இணைந்ததாக சென்னைக்கான பயண கட்டமைப்புக்களை இங்கிருந்து ஏற்படுத்துவதன் மூலம், உல்லாச பிரயாணத் துறையை மேலும் அபிவிருத்தி செய்வதோடு, பல தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம்.

“தமிழ் மக்களின் காணி அபகரிப்பு, தொல்பொருள் மற்றும் மகாவலித் திட்டம் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்க்க, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, அதன்மூலம் அதிகார பரவலாக்கலை அமுல்படுத்த வேண்டும்.

“பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப தகவல் தொழில்நுட்பத் துறையை வடக்கு, கிழக்கில் நிறுவுவ வேண்டும். அத்துடன், மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார் மற்றும் காங்கேசன்துறை போன்ற இடங்களில் துறைமுகங்களை உருவாக்குவதன் மூலம் இலங்கை – இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில், இங்குள்ள உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் எனும் பல வகையான சாதகத் திட்டங்களை தான் இந்திய உயர்ஸ்தானீகரிடமும் அவரது குழுவினரிடமும் பரிந்துரைத்ததாகத் தெரிவித்தார்.