மன்னார் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் ஆராய்வு

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலின் ஒருங்கமைப்பில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், மன்னார் நகர பிரதேச செயலாளர் எம்.பிரதீப், கடற்றொழில் உதவி பணிப்பாளர், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும், மாவட்டத்தில் உள்ள கிராமிய கடற்தொழிலாளர் சங்கம் மற்றும் மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகங்களை சீர்படுத்தி, தேவையான பதிவுகளை மேற்கொண்டு  கடற்றொழிலாளர் நலன்சார் செயற்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

குறிப்பாக, மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் உள்ளடங்களாக மாவட்டத்தில் சில பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு தொழிலுக்குச் செல்லும் போது கடற்படையினரின் சோதனை நடவடிக்கைகளினால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

கடற்கரையில் மீனவர்களை  சோதனை மற்றும் பதிவுகளை மேற்கொள்ள கடற்படையினர் நீண்ட நேரத்தை செலவிடுவதால், தாமதித்தே தாங்கள் தொழிலுக்குச் செல்வதாலும், இதனால் தமது தொழில் நடவடிக்கை தாமதிப்பதாகவும், எனவே உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தாமதம் இன்றி தொழிலுக்குச் செல்ல கடற்படையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கையை முன் வைத்தனர்.