மாநில அந்தஸ்தை இழக்கிறது காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை இரத்து செய்யும் மசோதா இன்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் இந்த மசோதாவுடன் மேலும் 3 மசோதாக்களை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சரவையில் முடிவின்படி ஜம்மு-காஷ்மீர் என்ற தனி மாநிலம் இனி லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என அறிவித்தார்.

‘தற்போதைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட பகுதியாக இருந்தாலும் மக்கள்தொகை நெருக்கம் என்பது மிகக்குறைவாகவே உள்ளது. லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.

எனவே, இனி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக்கப்படும். லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாக மாற்றப்படும். சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீரும் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் பகுதியும் செயல்படும்’ என அமித் ஷா குறிப்பிட்டார்.