முலாயம் சிங், மாயாவதி தொகுதிகள் உட்பட உ.பி.யில் 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியில்லை

உத்தரபிரதேசத்தில் மொத்த முள்ள 80 தொகுதிகளில் மாயா வதியின் பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதிகளிலும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ் வாதி கட்சி 37 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டி யிடுகின்றன. இக்கூட்டணியில் போட்டியிடும் அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா போட்டியிடும் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இக்கூட்டணி போட்டியிடாது என்று அறிவிக்கப்பட்டது.

இக்கூட்டணியில் இடம் கிடைக்காத நிலையில், 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் அறிவித்தது. இந்நிலையில், சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ராஷ்ட்ரிய லோக்தள தலைவர்கள் அஜித் சிங், ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்டோர் போட்டியிடும் மெயின்புரி, கன்னோஜ், பிரோசாபாத் உட்பட 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாது என்றும் இந்த தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்றும் உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் நேற்று லக்னோவில் தெரிவித்தார். கோண்டா மற்றும் பிலிபித் ஆகிய 2 தொகுதிகளை அப்னா தளம் கட்சிக்கு கொடுப்போம் என்றும் அவர் கூறினார். உ.பி.யில் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.