மு. காவின் பேரம் பேசும் சக்தியை பலி கொடுத்தேனும் காரியப்பரை காப்பாற்ற வேண்டிய இக்கட்டில் ஹக்கீம்!

சுட்டிக்காட்டுகிறார் பஷீர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சொற்ப அளவிலான பேரம் பேசும் சக்தியை பெருந்தேசிய கட்சிகளுக்கு பலி கொடுத்தேனும் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற வேண்டிய இக்கட்டில் ரவூப் ஹக்கீம் உள்ளார் என்று இக்கட்சியின் முன்னாள் தவிசாளரும், தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியின் முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்து உள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய செயலாளராக மு. கா தலைவரால் நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையிலேயே இவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு உள்ளார்.இவரின் அறிக்கை வருமாறு
2015 இல் செய்யப்பட்ட கட்சி யாப்புத் திருத்தத்துக்கு அமைவாக கட்சி உயர்பீடத்திடம் இருந்து மு. கா தலைவர் எடுத்துக்கொண்ட அதிகாரத்தின் பிரகாரம் தலைவரால் செயலாளராக நியமிக்கப்பட்ட மன்சூர் ஏ காதர் தலைவரின்வேண்டுகோளுக்கிணங்க அவரின் செயலாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.பிரதிச் செயலாளராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் செயலாளராகவும், செயலாளராக இருந்த மன்சூர்ஏ காதர் பிரதிச் செயலாளராகவும் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது வரை காலமும் தற்காலிகமாகச் செயலாளர் பதவியில் இருந்த மன்சூர் ஏ காதர் பிரதிச் செயலாளராகநியமிக்கப்பட்டுள்ளார் என தலைவரே பத்திரிகைகளுக்கு சொல்லியுள்ளார்.
கட்சி யாப்பில் தற்காலிகச் செயலாளர் என்றொரு பதவி இல்லை என்பதும், ஒரு பதவிக்கு தற்காலிகமாக இரண்டுவருடங்களுக்கு அதிகமாக ஒருவரை எந்த நிறுவனமும் வைத்திருப்பதில்லை என்பதும் தலைவருக்குத் தெரியாதா?அல்லது வழமை போல உயர்பீடத்துக்கும், முஸ்லிம் மக்களுக்கும் புளுகு மூட்டையை அவசர அவசரமாக அவிழ்த்து விட்டுள்ளாரா?
சல்மானைத் தற்காலிகமாகத் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்திருக்கிறார் என்று மக்களுக்குப்பொய் சொல்லி விட்டு, சல்மான் ஐந்து வருடங்களுக்கும் எம். பியாக தொடர சல்மானுடன் இரகசியமாக ஒப்பந்தம்செய்ததைப் போல ஒரு தேவை மன்சூர் ஏ காதர் விடயத்தில் தலைவருக்கு ஏற்பட்டிருக்கவில்லை. மட்டுமன்றி காதர்செயலாளராக இருந்த இரு வருடங்களும் காரியப்பர் பிரதிச் செயலாளராகத்தான் இருந்தார்.
காதரைத் தற்காலிகமாக நியமித்து வைத்து, அவருக்குக் கீழ் பிரதியாக இருந்த ஒருவரைத் திடீரெனச் செயலாளராகநியமிக்கும் தேவை என்ன இக்கட்டினால் தலைவருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும்? 2015 இலேயே காதரைத் தவிர்த்துகாரியப்பரைச் செயலாளராக நியமிக்க எந்தத் தடையும் இருக்கவில்லையே?
உண்மையில் இரண்டு முழு வருடங்களிலும் இரண்டு தடவைகள் மன்சூர் ஏ காதர் தற்காலிகமாகநியமிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் உயர்பீடத்தில் இவர் தற்காலிகமாகவே செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்என்று என்றுமே தலைவர் அறிவித்து இருக்கவுமில்லை.இது மட்டுமல்ல புதிய யாப்பின்படி செயலாளரை மட்டுமேதலைவர் நியமிக்கலாம். பிரதிச் செயலாளரை உயர்பீடமே நியமிக்க வேண்டும். ஆயினும் தலைவரே கட்சி யாப்பை மீறி, பிரதிச் செயலாளராக காதரை நியமித்துள்ளது மட்டுமன்றி அவரே இந்நியமனத்தைப் பற்றி பத்திரிகைக்குஅறிக்கையுமிட்டுள்ளார்.
புதிய கட்சி யாப்பின் அடிப்படையில் செயலாளராகப் பதவி வகிப்பவர் எந்தத் தேர்தல்களிலும் போட்டியிடமுடியாது.காரியப்பர் பல தேர்தல்களில் போட்டியிட்டவர், கல்முனை மாநகர மேயராகப் பதவி வகித்தவர். உள்ளூராட்சிமற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு சூழலில்வேட்பாளராகப் போட்டியிடுகின்ற வேட்கையில் உள்ள காரியப்பரை, எந்தத் தேர்தலிலும் பங்கு பற்றும் விருப்பற்றிருந்தகாதருக்குப் பதிலீடாக நியமிப்பதற்கு உந்தித் தள்ளிய ஆபத்தான காரணி எது? காரியப்பர் இந்நியமனத்தை ஏற்றுக் கொள்ள அல்லது கேட்டுப் பெற வைத்த சூழ்நிலையை ஏற்படுத்தியது எது?
காரியப்பர் தாருஸ்ஸலாம் தொடர்பான நீதி விசாரணைக்கு முகம் கொடுத்துள்ளார்.பொலிஸ் மோசடிப் பிரிவு கொழும்புகோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்துள்ளது. மோசடிப் பிரிவு காரியப்பரை அழைத்து சர்ச்சைக்கு உரிய காணி உறுதிப் பத்திரம் தொடர்பாக விசாரித்துள்ளது. அடுத்த விசாரணை விரைவில் நடைபெறஇருக்கிறது.எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி ஆவணங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை மோசடிப் பிரிவு நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும். காரியப்பர் நீதிக்கு முகம் கொடுப்பது கடினமாக உள்ளதாக அறியமுடிகிறது.
எனவே, இது விடயத்தில் உயர் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. காரியப்பருக்குகட்சியில் உயர்ந்த பதவி ஒன்றை வழங்கி அவரை அரசில் உச்ச பதவி வகிப்பவர்களிடம் சந்தைப்படுத்த வேண்டிய அவசரமும், அவசியமும் தலைவருக்கு ஏற்பட்டு உள்ளது. எதிர்வரும் தேர்தல்களில் கட்சிக்கு இருக்க கூடிய சொற்பபேரம் பேசும் சக்தியை பெருந்தேசியக் கட்சிகளுக்குப் பலிகொடுத்தாயினும் காரியப்பரைக் காப்பாற்றியாக வேண்டும்இல்லாவிட்டால் தலைவர் உட்பட பலர் கூண்டோடு கைலாசம் செல்ல நேரிடும்.
இந்த ஆபத்தான நிலைமையை சமாளிக்கப்பதற்கு அரச தலைவர்களிடம் தலைவர் சென்று நிசாம் காரியப்பரையும், இவர் அடங்கலாக ஏனையவர்களையும் காப்பாற்றி தருமாறு ஒப்பாரி வைப்பதற்கு வசதியாகவே காரியப்பரை அவசர அவசரமாக செயலாளராக நியமித்து உள்ளார். நிசாம் காரியப்பரை காப்பாற்றா விட்டால் இவர் அடங்கலாக அனைவரும் அகப்பட நேரும், அப்படி நடந்தால் கிழக்கில் மு. கா செல்வாக்கை இழந்து விடும், இது பெருந்தேசிய கட்சிகளுக்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தும் என்று சொல்லி பெருந்தேசிய தலைவர்களின் கால்களில் விழுந்து கதறி அழ போகின்றார். இதுவே புதிய செயலாளர் நியமனத்துக்கு பின்னால் உள்ள இரகசியம் ஆகும்.