‘வடக்கு முஸ்லிம்கள் கள்ளத்தோணியில் வந்தவர்கள் அல்லர்’

வட மாகாண முஸ்லிம்கள் கள்ளத்தோணியில் வந்தவர்கள் அல்லர். அவர்கள் இலங்கையர்கள் என, மேல் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் முஜிர்பு ரஹ்மான் தெரிவித்தார். வில்பத்து பிரச்சினை தொடர்பாகத் தமது நிலைப்பாட்டினைத் தெரிவிக்கும் வகையில், முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் என்.எம். அமீன் தலைமையில், கொள்ளுப்பிட்டி, ரேணுகா ஹோட்டலில் இன்று நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 1990ஆம் ஆண்டு புலிகளால் அடித்து விரட்டப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் மீண்டும் தமது பரம்பரைக் காணிகளில் குடியேறும் போது, பெரும் ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரசாரம் செய்கின்றனர். இந்த மக்கள், இந்த நாட்டில் பிறந்தவர்கள். இவர்கள் இலங்கையர்கள். இவர்கள் கள்ளதோணியில் வந்தவர்கள் அல்ல, ஆப்கானிஸ்தானில் இருந்தோ மாலைத்தீவில் இருந்தோ வந்தவர்கள் அல்ல.

பெரும் பாதிப்பை ஏற்படுத்திய யுத்தம் காரணமாக கடும் இழப்புகளுக்கு முகங்கொடுத்து, சொந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து அனாதைகளாகியவர்கள். இவர்கள் இடத்தை ஆக்கிரமிக்கவில்லை. தமது சொந்த இடத்தைத் தான் கேட்கிறார்கள். இவர்களை யாரும் தெற்கிலிருந்து கொண்டு வந்து குடியேற்றவில்லை. வானத்திலிருந்து குதித்தவர்களும் அல்ல. பாரம்பரியமாக வாழ்ந்த இவர்களுக்கு, தமது சொந்த இடத்துக்குச் சென்று குடியேறும் ஆசை மட்டுமே உள்ளது.

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தமை காரணமாகவே இவர்கள், இந்த நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஏனையவர்களை போல அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இருந்திருந்தால், இந்த நிலை இவர்களுக்கு ஏற்பட்டிருக்காது. தமது சொந்த இடத்துக்குச் சென்று வீட்டை அமைத்து வாழ்வதற்கு இவர்கள் இன்று இந்தளவு சிரமத்துக்கு உள்ளாக வேண்டியதில்லை.

விடுதலை புலிகளின் செயற்பட்ட காலத்தில் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிர்ப்பாக இருந்தனர். அதற்காக தமது வாழ்க்கையில் நிறைய விலை கொடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்தால், இன்று இந்த மக்கள் தெற்குக்கு இடம்பெயர்ந்திருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. அவர்களது சொந்த இடத்திலேயே மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம்” என்றார்.