ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள கருங்கல்குவாரி ஒன்றிலிருந்து தினமும் 60க்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்கள் சென்று வருவதனால் சிறிய வீதியாக உள்ள குறித்த வீதி தற்போது சேதமடைந்து பாவனைக்கு உதவாத வகையில் மாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீதியின் ஊடாக கனரக வாகனங்கள் செல்வதை அனுமதிக்க வேண்டாம் எனக் கூறியும் அப்பகுதி மக்கள் இதன் காரணமாக விபத்துகளுக்கு உள்ளாகுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
ஓமந்தை வேப்பங்குளம், விளாத்திகுளம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வீதியை ஊடறுத்து செல்லும் புகையிரத பாதையில் பாதுகாப்பு கடவையின்மை மற்றும் புகையிரதம் பெறுகின்ற போது சமிச்சைகள் இல்லை எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த பகுதிக்கு வருகை தந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலந்துரையாடியதுடன் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினரிடம் ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டிருந்தது.
அங்கு வருகை தந்த ஓமந்தை பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களோடு கலந்துரையாடியதுடன் பிரதேச சபை தலைவர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், கற்குவாரியின் உரிமையாளர்களை அழைத்து இது தொடர்பில் ஒரு முடிவை எட்டுவதாக தெரிவித்திருந்தனர்.
இதன் பின்னர் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதோடு பாராளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்குச் சென்று கல்குவாரியை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.