வெடுக்குநாறி கோவில் நிர்வாகத்தினரும் பூசகரும் மறியலில்

நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களமும், நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்ததுடன், தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், நவம்பர் 6ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 6ஆம் திகதி கோவில் நிர்வாகத்தினர் நீதிமன்றில் மீண்டும் ஆஜராகிய நிலையில் கொரோகா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அனேகமான வழக்குகள் விசாரணைகளுக்கு அழைக்கப்படாமல் தவணை இடப்பட்டிருந்தது. அந்தவகையில், 2021ஆம் வருடம் ஜனவரிக்கு வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கை முன்னமே அழைக்குமாறு, தொல்பொருள் திணைக்களம் சார்பாக ஆஜராகிய சட்டதரணிகளால், நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், டிசம்பர் 11ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டது.

எனினும், வழக்கின் திகதி மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் தமக்கு தெரியப்படுத்தவில்லை என்று தெரிவித்த கோவில் நிர்வாகத்தினர் நீதிமன்றத்துக்கு சமூகமளித்திருக்கவில்லை. அன்றையதினம், அவர்களது பிணையும் ரத்தாகியிருந்தது. இதனால் கோவில் நிர்வாகத்தினருக்கு எதிராக நீதி மன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றையதினம் வழக்கு தவணைக்காக ஆஜராகிய கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பூசகர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.