வேறுபாடுகளுக்கு அப்பாலும் எதிர்ப்பு…

கொழும்பில் சேரிக்கப்படும் குப்பைகளை, புத்தளம் – அருவக்காடு பிரதேசத்தில் கொட்டும் திட்டத்துக்கு, இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் ஒன்றுதிரண்ட பொதுமக்கள், இன்று (22) பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். புத்தளம், கரைத்தீவு மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப் பள்ளிவாயல், சேரக்குளி சென் பீட்டர்ஸ் தேவாலயம், எரிக்கலம்வில்லு பன்சல ஆகியன ஒன்றினைந்து குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு முன்பாக ஒன்று௯டிய கரைத்தீவு முஸ்லிம் மக்கள், கொழும்பில் இருந்து குப்பைகளை ரயில் ஊடாக புத்தளம் அருவக்காடு பிரதேசத்தில் கொட்டும் திட்டத்துக்குத் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

அத்துடன், ” விஜயன் கால் பதித்த வரலாற்று பூமியில் குப்பை கொட்டுவதா”, ”எமது கடல். வளங்களை அழிக்கும் நச்சுப் பதார்த்தங்கள் கலந்த கொழும்பு குப்பைகளை எமது மண்ணில் கொட்டுவதீ”, ” பொன் விளையும் பொன்பரப்பியா அல்லது பொன் விளையும் எமது பூமியை குப்பை மேடாக்குவதா” எனும் பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பிக் கொண்டு சேரக்குளி சென் பீட்டர்ஸ் தேவாலயம் வரை ஊர்வலமாகவும் சென்றனர்.

இதனையடுத்து, கரைத்தீவு, சேரக்குழி மற்றும் எரிக்கலம்வில்லு ஆகிய பகுதியிலுள்ள முஸ்லிம், சிங்களம் மற்றும் கிறிஸ்தவ மக்கள் சேரக்குளி சென் பீட்டர்ஸ் தேவாலயத்துக்கு முன்னால் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.