40 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்புகின்றனர்

தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் தங்கவைக்கபட்டிருந்த இலங்கை அகதிகள் 40 பேர் இன்று இலங்கையை வந்தடையவுள்ளனர். ஐக்கிய நாடுகளிள் அகதிகளுக்காக உயர்ஸ்தானிகர் மேற்கொண்ட நடவடிக்கைகையை அடுத்து இவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 14 குடும்பங்களை சேர்ந்த இந்த அகதிகள், திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள முகாம்களில் இருந்தவர்களே நாடு திரும்புகின்றனர். இலங்கை அகதிகள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தும் திட்டத்தின் முதற்கட்டமாக இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானத்தில் கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ள 30 கிலோகிராம் நிறையுடைய பயணப்பொதியுடன் மேலும், 20 கிலோகிராம் கொண்டுவர இவர்களுக்கு விசேட அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐக்கிய நாடுகளிள் அகதிகளுக்காக உயர்ஸ்தானிகர் மேற்கொண்ட நடவடிக்கைகளையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு, 852 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளனர். கடந்த ஜுலை மாதம் 1ஆம் திகதி கணக்கெடுப்பின்படி, 19,388 குடும்பங்களைச் சேர்ந்த 63,649 இலங்கை அகதிகள், 24 மாவட்டங்களில் உள்ள 108 அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்திருந்தது.