EPDP கட்சியிலிருந்து விலகி, புதிய செயற்பாட்டைத் தொடரவுள்ளேன் – சந்திரகுமார்

தமிழ் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து எனது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் முருகேசு சந்திரகுமார் அவா்கள் தெரிவித்துள்ளார் தமிழ்பேசும் மக்களுக்குரிய நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளுவதற்கு அர்த்த புர்வமாகச் செயற்படவுள்ளதாகவும் இதற்கான புதிய சூழ்நிலைகள் உருவாகி வரும் சந்தர்ப்பத்தில் பல்வேறு சக்திகளையும் அவற்றின் தனித்தன்மைகளுடன் ஒன்றிணைய வைத்துச் செயலாற்ற விரும்புவதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்திருக்கிறார்.

இப்பொழுது இலங்கையில் உருவாகியிருக்கும் புதிய அரசியற் சூழ்நிலைக்கு அமைய ஈழமக்கள் ஜனநாயக் கட்சியிலிருந்து (ஈபிடிபி) விலகி, தனித்துச் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்களுடைய உணர்வுகளில் தமக்கான நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற நிலைப்பாடு மிக நீண்டகாலமாகவே இருக்கிறது. இதில் எந்தச் சமரசத்துக்குப் போவதையும் அவர்கள் விரும்பவில்லை. எனவே, இன்றைய உலக ஒழுங்கின் அடிப்படையில் சமூகங்களுக்கான சமத்துவ, பன்மைத்துவத்தை ஏற்றுக்கொண்டு அதனூடான சுயநிர்ணய அங்கீகாரத்தை அவர்கள் வேண்டி நிற்கின்றனர். பன்மைத்துவம் என்பது, இனங்களுக்கிடையே மட்டுமல்ல, இனங்களுக்கிடையே காணப்படும் சமூகக் கூறுகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதே உண்மையாகும். இந்த அடிப்படையில் சாதிய, பிரதேச, மத, பால்நிலை சமத்துவங்களையும் வேண்டி நிற்கின்றனர்.

இதனை அங்கீகரிக்கும் ஒரு சமூக நீதிக்கட்டமைப்புக்குள் மட்டுமே உண்மையான பன்மைத்துவமும் இனங்களுக்கிடையிலான பரஸ்பர அங்கீகாரமும் ஏற்படும். நலிவுற்ற மக்களுக்குரிய விசேட ஏற்பாடுகளும் நன்மைகளும் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் சூழலிலேயே பன்மைத்துவத்தின் ஊடான சமத்துவம் சாத்தியமாகும். இதுவே, சுய நிர்ணய உரிமையை அர்த்தமுடையதாக்கும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வையும் சமூக நீதியையும் உருவாக்குவதற்கான ஒரு சட்டவாட்சி முறையை ஏற்படுத்துவதற்காக உழைப்பது என்னுடைய இலக்காகும்.

இது ஒரு பாரிய பணி. பலருடைய அர்த்தமுள்ள பங்களிப்புகள் சேர்ந்தாலே இதைச் சாத்தியமாக்க முடியும். இன்று தமிழ் பேசும் மக்கள், தங்களுடைய அரசியல் தலைமைகளை ஐக்கியப்படுமாறு கோருகின்றனர். ஆனால், அந்த ஐக்கியம் என்பது, எல்லோருடைய கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளுகின்ற நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு, சரியான தீ்ர்மானங்களை நோக்கிய விவாதங்களாக அமைய வேண்டும். இதன் மூலமே ஒரு உண்மையான ஐக்கியத்தை உருவாக்க முடியும். இந்த அடிப்படையில் இன்று ஐக்கியப்படும் நிலைப்பாட்டை வலியுறுத்தி, ஒரு பொதுமைப்பாடுடைய அரசியல் தீர்மானத்தை நோக்கி நகர்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். அத்தோடு கடந்த காலங்களைப்போன்று மக்களுடைய நலன்களை தேவைகளை நிறைவு செய்வதில் என்னால் ஆற்றக்கூடிய பங்களிப்பை எப்போதும் வழங்கிக் கொண்டிருப்பேன்.

என்னுடைய இளைய வயதில் (1980 களில்) கூர்மையடைந்திருந்த தேசிய விடுதலை உணர்வு, என்னை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் (ஈபிஆர்எல்எப்) இணைய வைத்தது. அப்போது, தேசிய விடுதலைக்கான ஒரு போராளியாக, தேசிய விடுதலையை வேண்டி நிற்கும் மக்களுக்கான விடுதலைப்படையின் உறுப்பினர் என்ற அளவிலேயே என்னால் சிந்திக்கவும் செயற்படவும் முடிந்தது. இங்கே, தேசிய விடுதலையுடன் இணைந்ததான சமூக விடுதலையின் அவசியத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. இதுவே, என்னுடைய அரசியல் பாதையை தீர்மானிக்கும் அடிப்படையாக அமைந்தது. தேசிய விடுதலைப்போராட்டத்தினுடைய நகர்வின் பரிமாணங்கள், பல்வேறு வகையாக மாற்றமடைகின்ற காலங்களில் இந்த அடிப்படையில் நின்றே நான் தீர்மானங்களை மேற்கொண்டேன். மக்கள் நலன்களை முதன்மைப்படுத்திய அரசியல் வழிமுறையில் ஈடுபட்ட காரணத்தினால், நீண்டகாலம் ஆயுதப்போராட்டத்திலும் அதன் பின்னான ஜனநாயக நீரோட்டத்திலும் என்னுடைய தீர்மானங்கள் இருந்தன. இந்த அடிப்படையிலேயே நான் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,(ஈபிஆர்எல்எப்) ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) என்பவற்றில் செயலாற்றி வந்திருக்கிறேன்.

கடந்த 2010 தேர்தலில் மக்கள் என்னைத் தமது பிரதிநிதியாக இரண்டாவது தடவையும் அங்கீகரித்திருந்தனர். இந்தக் காலகட்டத்தில் மிக மோசமான யுத்தம் மற்றும் இடப்பெயர்வுக்குள் சிக்குண்டு, ஏதுமற்றவர்களாக மீள்குடியமர்ந்த மக்களின் வாழ்க்கை என்னை மிகவும் பாதித்தது. இந்த நிலையில் இந்த மக்களுடைய நலன்களுக்காகச் செயற்படுவது எனது தார்மீகப் பொறுப்பாகும் என உணர்ந்தேன். இதுவே எனது முதற்கடமையாகக் கொண்டு கடந்த ஐந்து வருடங்களும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாட்டு வரையறைக்குள் மிகக் கடினமாக இந்த மக்களுடைய தேவைகளை நிறைவு செய்வதற்காக உழைத்தேன். இந்த மக்களும் என்னைத் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டமையை நான் உணர்ந்திருந்தேன். ஆனாலும் மக்களுடைய உணர்வுகளும் தெரிவும் வேறாக இருந்ததைத் தேர்தலில் உணர்ந்து கொண்டேன். இந்த நிலையில் மக்கள், என்னிடம் வேறு விடயங்களையும் எதிர்பார்க்கின்றனர் என்பதை உணர்ந்து கொண்டதன் அடிப்படையிலேயே நான் என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை மீளாய்வு செய்ய வேண்டும் என்கிற ஒரு அவசியத்திற்குள் தள்ளப்பட்டேன். இன்றும் இந்த மக்கள் என்னுடன் மிகவும் சுமுகமான அன்பான ஒரு உறவைக்கொண்டிருக்கிறார்கள். எனவே மக்கள் நலன்களுக்காக, மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது எனக்கு அவசியமாயிற்று. எனவேதான் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து (ஈபிடிபி) விலகி, புதிய செயற்பாட்டைத் தொடர முன்வந்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.