பிரேதாஸாவும் பிரபாகரனும்

பிரேமதாசா புலிகளுடன் 1989 ல் தேன் நிலவு கொண்டாடியபோது இந்திய அரசாங்கம் பிரபாகரனை நாடுகடத்த கோரிக்கை விடுத்தபோது பிரேமா “ஒரு மூத்த சகோதரன் தனது இளைய சகோதரனை அவருடைய தவறுதலுக்காக அயலவரிடம் கையளிக்க மாட்டான்” என்று உரிமையுடன் நிராகரித்தார். அவருக்கும் புலிகளுக்குமான உறவு பல சிங்கள, தமிழ், முஸ்லிம் உயிர்களை காவு கொள்வதற்கு காரணமாக அமைந்தது. இது இராணுவத்தினரைக்கூட சங்கடத்தில் ஆழ்த்தியது. முன்னாள் இராணுவத் தளபதியும் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கமைய இடம்பெற்ற புலிகளின் ஆயுதக் கையளிப்பின்போது அரசின் பிரதிநிதியாக கலந்து கொண்டவருமான சேபால ஆட்டியகலவை; முன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷரப் அவர்களும் லத்தீப் என்னும் அவரது உதவியாளருடன் கொழும்பு பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.

அஷரப் தனக்கு வழங்கியுள்ள பாதுகாவலர்களின் எண்ணிக்கை போதாது என்பதற்காக சேபால ஆட்டியகல அவர்களைச் சந்தித்தபோது நான் தற்செயலாகவே அவருடன் செல்ல நேரிட்டது. ஆட்டியகல பிரேமதாசா மீதான தனது மன உளைச்சலைக் கொட்டித் தீர்த்தார். நிபந்தனையாக எங்கள் இருவரையும் அஷரப்பிடம் யார் இவர்கள் என்று உறுதிசெய்த பின்னர் அவர் புலிகளுக்கு பிரேமதாசா வழங்கும் நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் பல்வேறுபட்ட பொருட்கள் தொடர்பான விபரங்களை கூறியதுடன் தங்களுக்கு (இராணுவத்திற்கு) அவற்றினை இராணுவ முகாம்களைத் தாண்டி கொண்டு செல்வதற்கு அனுமதிக்குமாறு வழங்கப்பட்ட ஆணைகள் குறித்து அதிருப்தி தெரிவித்து தமது கையேறு நிலையினை வெளிப்படுத்தினார்.

(Bazeer Seyed)