மீனவர்களின் சந்தையை நாம் கட்டித் தருவோம்! தமிழர் அறம் காப்போம்!

(ம.செந்தமிழன்)

மீனவர்கள் நமக்காக வந்தார்கள், நம்மோடு நின்றார்கள். தமிழர் என்ற உணர்வில் நம்மோடு கலந்தார்கள். நெய்தல் நிலத்து மாந்தர் முல்லை நிலத்து உரிமைக்காகப் போராடினர். இது நம் மரபின் தொடர்ச்சிதான். நாடெங்கிலும் இருந்து படையெடுத்து வந்த நீங்கள் அனைவரும் உழவர்களும் அல்ல, ஆயரும் அல்ல. நீங்களும் தமிழர் என்ற ஒற்றை அடையாளத்தோடுதான் வந்தீர்கள். சில மலையாளிகள்,
வடகிழக்கு இந்திய மாந்தர் நம்மோடு இணைந்திருந்தார்கள். மனிதர் என்ற இணைப்பு அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் வீதியில் நின்றார்கள். இனம் அவர்களைப் பிணைத்தது. இசுலாமியர், கிறித்தவர், இந்து என்ற மாறுபாடின்றி அனைவரும் நம்மைத் தமிழினத்தின் அடையாளத்துடன் பொருத்திக்கொண்டோம். நிச்சயமாக, போராடிய அனைவரும் மாடு வளர்க்கவும் இல்லை, வளர்க்கப்போவதுமில்லை.


போராட்டத்தின் போக்கு திட்டமிட்டு திசை மாற்றப்பட்டது. அந்தத் ’திருப்பணியில்’ எவரெல்லாம் ஈடுபட்டார்கள் என்ற ஆய்வு நமக்கு வேண்டாம். நமது ஒற்றுமைதான் நம்மை வழிநடத்தியது, உலகைத் திரும்பிப் பார்க்கச் செய்தது. ஜல்லிக்கட்டு வழக்கில் இந்திய அரசு பிறப்பித்த அறிவிக்கை (2016) நேற்று திரும்பப் பெறப்பட்டுவிட்டது. இது மிக முக்கியமான நல்விளைவு. அந்த அறிவிக்கையை எதிர்த்துத்தான் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நடக்கிறது. ‘அந்த அறிவிக்கையே இப்போது இல்லை. ஆகவே வழக்கை முடித்துவிடலாம்’ என இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறிவிட்டார். ஆக, உச்சநீதிமன்ற வழக்கில் தீர்ப்பே வராமல் போகலாம். ஒருவேளை தீர்ப்பு வந்தாலும் அதை அரசு பொருட்படுத்தத் தேவையில்லை. ஏனெனில், தமிழக அரசின் சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றுவிடும். அதைக்கொண்டு நாம் ஏறுதழுவல், மஞ்சுவிரட்டு உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்தலாம்.
இந்திய விலங்கு நல வாரியத்தின் 2011 ஆணை நீக்கப்பட வேண்டும். அதுதான் காளைகளைக் காட்சிப்படுத்தல் பட்டியலில் இணைத்த ஆணை. அதுவரை, நாம் போராடித்தான் தீர வேண்டும். எந்த வடிவத்தில் போராடுவது என இப்போது சிந்திக்க வேண்டாம். இப்படிச் சிந்தித்து நாம் தைப்புரட்சியை நிகழ்த்தவில்லை. இலக்கை எட்டும்வரை நம் விருப்பம் மாறக் கூடாது.
சென்னை மெரினா கடற்கரை அருகே, மீனவர்களின் சந்தை எரிக்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் குலைந்துள்ளதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மீனவச் சமூக உறவுகளுக்கு வேறுபல இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அவர்கள் மீதான வழக்குகள் அவர்களுக்குப் பெரும் சுமையாகியுள்ளன.
மெரினாவில் மட்டுமல்ல உலகெங்கும் களமிறங்கிய அனைவரின் சார்பாகவும் நான் ஒரு செயல்திட்டத்தை முன் வைக்கிறேன்.
1. மீனவர்களின் சந்தையைக் கட்டித் தருவோம்.
2. நமக்காகப் போராட வந்த, உணவும் நீரும் அளித்த மீனவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தால் அவ்வழக்குகளை நடத்தும் பொறுப்பை நாம் ஏற்போம்.
3. மீனவர் குப்பத்தில் நம் போராட்டத்திற்கு அவர்கள் ஆற்றிய உதவிகளுக்காக ஒரு நன்றித் தூணை நாட்டுவோம். இந்நிகழ்வில் அவர்களோடு கலந்து கொண்டாடுவோம்.
இதுதான் செயல்திட்டம்.
மேற்கண்ட செயல்களுக்காக எவரும் நன்கொடையை அனுப்ப வேண்டாம். செம்மை அமைப்பில் நாங்கள் அவ்வாறு நன்கொடை வாங்குவதை முன்னிறுத்துவதில்லை.
இப்பணிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம். அவற்றுக்கான நிதித் தேவையைத் திட்டமிட்ட பின்னர் அறிவிக்கிறேன். இயன்றவரை நேரில் வந்து மக்கள் முன்னிலையில் கொடுங்கள்.
அயல் நாடுகளில், ஊர்களில் இருப்போர் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் வழியாக ஏற்பாடு செய்யலாம். நீங்களோ உங்கள் பிரதிநிதிகளோ நேரில் வந்து தொகை வழங்கும்போது, நமக்குள்ளான வெளிப்படைத்தன்மை உறுதிப்படும்.
நமது இலக்குகள் மேன்மையானவை, நாம் தெரிந்தெடுத்த பாதைகளோ உன்னதமானவை, நமது அன்பும் அக்கறையும் அனைத்திலும் மேலானவை.
தமிழர்களின் அறப் போராட்டத்தை இவ்வுலகம் வியக்கிறது. நாம் செய்யப்போகும் அறப் பணிகளை இவ்வுலகம் போற்றட்டும். மீனவர்கள் – போராட்டக்காரர்கள் என்ற பிரிவினை நமக்குள் இல்லை. இதை வார்த்தைகளால் விவரிக்க வேண்டாம். நாமும் அவர்களும் ஒன்றுதான் என்ற நம் உணர்வைச் செயலாக்குவோம் வாரீர்!