இந்திய-சீன நெருக்கடி: தெற்காசியா குறித்த வினாக்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

தெற்காசியா, பத‌ற்றத்தின் விளிம்பில் உள்ளது போன்றதொரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நெருக்கடி தேவையற்றது என்பதை, அனைவரும் அறிவர். ஆனால், இதை வெளிப்படையாகச் சொல்வதற்கு யாரும் தயாராக இல்லை.

இந்த நெருக்கடியால் பயனடைவோர் பலர். எனவே, இந்த நெருக்கடியைத் தக்கவைப்பதும் தகவமைப்பதும் பலரின் தேவையாக உள்ளது. அதன் காட்சிகளே, இப்போது அரங்கேறுகின்றன.
இந்தக் கட்டுரையை எழுதுகின்ற போது, நான்கு முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளன. அவற்றின் அடிப்படையில், இந்த நெருக்கடியை நோக்குவது தகும்.

முதலாவது, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முயற்சியொன்றை ரஷ்யா, இந்த வாரம் முன்னெடுத்து, அதில் வெற்றியும் கண்டுள்ளது.
இரண்டாவது, சீனா மீதான பொருளாதாரத் தடைகள், இந்தியாவையே பெருமளவில் பாதிக்கும் என, வெளியுறவுத்துறை நிபுணர்களும் பொருளியலாளர்களும் தெரிவிக்கின்றனர்.

மூன்றாவது, இந்தியாவில், சீன எதிர்ப்புப் பிரசாரம் வலுப்பெற்றுள்ள நிலையில், சீனாவின் பெயரைச் சுட்டாமல், பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

நான்காவது, சீனா வலிந்து தாக்குதல் நடத்தியது என்ற கருத்துருவாக்கத்தை, அமெரிக்கா வலிமையாக முன்னெடுக்கிறது

கொவிட்-19 பேரிடர் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியைக் கையாள இயலாமல், இந்தியா தடுமாறுகையில், எல்லைத் தகராறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியா, ஒரு போருக்குத் தயராக இல்லை என்பதை, இந்திய ஆட்சியாளர்களின் நடத்தை காட்டுகிறது. ஆனால், தெற்காசியாவில் தனது ஆதிக்கத்தைத் தக்கவைக்கவும் இந்தியா விரும்புகிறது.

தெற்காசியா: உலைக்களம்

தெற்காசியாவைப் பூகோள ரீதியாக, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான போரின் ஒரு பகுதியே, இப்போது அரங்கேறுகிறது. தெற்காசியாவின் அமைவிடம், அதைச் சூழ்ந்துள்ள கடற்பரப்பு, சீனா முன்னெடுக்கும் ‘ஒருபட்டி; ஒருவழி’ திட்டம் என்பன, முன்னரை விட இப்போது முக்கியத்துவம் பெறுகின்றன.

இதன் பின்னணியில், இந்தியாவைத் தனது மூலோபாயப் பங்காளியாக்க, அமெரிக்கா நீண்ட காலமாக முயன்று வருகிறது. இப்போது, அது சாத்தியமாகி உள்ளது. இதையே, 2010ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு வருகை தந்த அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்திருந்தார். அவர், “அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயற்பட்டால், அது ஒரு சக்திமிக்க இணைப்பாய் இருக்கும். இரு தரப்புக்கும் நன்மை பயக்கும்” என்றார்.

ஒபாமாவின் ‘ஆசியாவை மீள்சமநிலைப்படுத்தல்’ திட்டத்தின் கீழ், 21ஆம் நூற்றாண்டில், கிழக்கு-மேற்கு உறவு எப்படி அமையப் போகிறது என்பதே, பாரிய வினாவாக இருந்தது. அதன்படி, அமெரிக்காவும் இந்தியாவும் மூலோபாயப் பங்காளிகள் (Strategic Partners) என்ற அடிப்படையில் கைகோர்த்துள்ளன.

இவ்விடத்தில், இந்திய-அமெரிக்க உறவின் பரிணாமங்களைப் பார்ப்பது அவசியம். இந்தியா சுதந்திரமடைந்தது முதல் 1990 வரை, இந்திய-அமெரிக்க உறவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக, இந்திய-சோவியத் உறவுகள் அமைந்திருந்தன.

குறிப்பாக, கெடுபிடிப் போர் உச்சத்தில் இருந்த காலத்தில், இந்திய-அமெரிக்க உறவு மிக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது; ஆனால், பகைமையற்று இருந்தது.

நேரு அணிசேராக் கொள்கையை, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாகக் கொண்டிருந்ததால், கெடுபிடிப்போர்க் காலத்தில், ஒரு வகையான ‘இரட்டறு’ நிலையை, இந்தியா கொண்டிருந்தது. இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, அமெரிக்கா, பாகிஸ்தானுக்கே ஆதரவு தெரிவித்திருந்தது.

அதேவேளை, இந்தியாவின் கைத்தொழிற்றுறை வளர்ச்சியிலும் ஆயுத விற்பனையிலும் சோவியத் ஒன்றியம் முக்கியப் பங்காளியாக இருந்தது. இக் காலத்தில், இந்தியாவைத் தனது சந்தையாக மட்டுமே பார்த்த அமெரிக்கா, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்கை வழங்கவில்லை.

சோவியத் ஒன்றியத்தின் உடைவின் பின்னர், இந்திய-அமெரிக்க உறவு முன்னேறியது. அமெரிக்கா, ‘உலகப் பொலிஸ்காரன்’ ஆகியதன் விளைவாக, அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை இந்தியா நாடியது. 1997இல் பொக்ரானில் இந்தியாவின் அணுக்குண்டுச் சோதனை, இந்திய-அமெரிக்க உறவில் விரிசலை உண்டாக்கியது.

இந்தியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை, அமெரிக்கா விதித்தது. ஆனால், இந்தியாவின் தொழில்நுட்ப, கைத்தொழில் வளர்ச்சிகளின் பின்னணியில், பொருளாதாரத் தடை பாரிய பாதிப்பை விளைவிக்கவில்லை. எனவே, 2001இல் இந்தியா மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்கியது.

இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கா முன்னெடுத்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரில்’ இந்தியா, அமெரிக்காவின் பங்காளியாகியது.
2004ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட அமெரிக்க-இந்திய அணுச்சக்தி ஒப்பந்தம், இந்திய-அமெரிக்க உறவில், ஒரு புதிய பரிமாணமாகும்.

அணு ஆயுத வலிமையுடைய நாடுகளை, ஒப்பந்தங்களினூடாகத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் அமெரிக்கத் திட்டத்தில், இந்தியா பங்காளியானதுடன், தனது அணுச்சக்தித் திட்டத்தை, சர்வதேச அணுச்சக்தி முகவராண்மையகம் மேற்பார்வையிட, இந்தியா அனுமதித்தது. அடிப்படையில் இது, இந்தியாவின் இறைமைக்குச் சவால் விடுவதாக இருந்தும், ஆட்சியாளர்களின் அமெரிக்க விசுவாசம், இந்த ஒப்பந்தத்தை இயலுமையாக்கியது. இன்று, இந்திய-அமெரிக்க உறவின் முக்கியமான அம்சமாக, அமெரிக்க-இந்தியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு விளங்குகிறது. இதை இயலுமையாக்கிய ஒரே காரணி, ‘சீன மிரட்டல்’ எனப்படும், சீனாவை அண்டிய பிராந்தியத்திலும் உலகளாவிய ரீதியிலும் சீனாவின் தவிர்க்க முடியாத வகிபாகமாகும்.
சீனாவின் வளர்ச்சியும் அதன் இராணுவ பலமும் தெற்காசியப் பிராந்தியத்தில், இந்தியச் செல்வாக்குக்குச் சவாலாகத் தெரியும். அதே வேளை, உலகளாவிய முறையில், அமெரிக்காவின் பேரரசுக் கனவுக்கு, அச்சுறுத்தலாய் விளங்குகிறது.

இந்த அடிப்படையில், சீனாவைப் பொது எதிரியாகக் கொள்ளுமாறு, இந்திய-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைகிறது. குறிப்பிடத்தக்கவாறு, அண்மைக்காலம் வரை, அமெரிக்க அதிநவீன ஆயுதங்கள், இந்தியாவுக்கு விற்கப்படவில்லை. இன்றும், இந்தியாவுக்கு ஆயுதம் வழங்கும் முன்னணி நாடுகளாக, ரஷ்யாவும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுமே விளங்குகின்றன.இந்தியாவைப் பொறுத்தவரை, இவையே நம்பகமான ஆயுத விற்பனையாளர்களாக இன்னமும் உள்ளன.

அமெரிக்க ஆயுதங்களின் கூடிய விலையும், தொடர்ச்சியான விநியோகம் பற்றிய ஐயங்களும், அமெரிக்க ஆயுதக் கொள்வனவில் இந்தியாவின் தயக்கத்துக்கான காரணங்களாகும். இந்த நிலைமை, அண்மைக் காலமாக மாறி வருகிறது. இந்தப் பின்னணியிலேயே, ரஷ்யா அண்மைய நெருக்கடியில் மத்தியஸ்தம் வகிக்க முன்வருவதை நோக்க வேண்டும். ரஷ்யா, யுரேசியாப் பகுதியை, அமைதியான பகுதியாக வைத்திருக்க விரும்புகிறது. அதன் பார்வையில், இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தேவையற்றது. எனவே, பதற்றங்களைத் தணித்து அமைதியையும் பிராந்தியத்தில் சமநிலையையும் உருவாக்க, ரஷ்யா முனைகிறது. மறுபுறம், சீனாவை ஒரு தலைப்பட்சமாகக் குற்றஞ்சாட்டுவதன் மூலம், பதற்றத்தைத் தக்க வைக்க, அமெரிக்க முனைகிறது.

இவ்விடத்தில், தெற்காசியா குறித்த இரண்டு முக்கியமான அவதானிப்புகளை, கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது:

  1. தெற்காசியப் பூகோள அரசியலில், இந்திய-அமெரிக்க உறவென்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டியை மய்யப்படுத்துகிறது. இன்று இலங்கை, நேபாளம், மாலைதீவு ஆகிய நாடுகளில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மேலாதிக்கப் போட்டி உள்ளது. நேபாளத்தில் தொடரும் அமெரிக்கா-இந்திய சதுரங்கமும் மாலைதீவு ஆட்சிக் கவிழ்ப்பில் இந்தியப் பங்கும், கவிழ்க்கப்பட்டவருக்கான அமெரிக்க ஆதரவும், இந்திய-அமெரிக்கப் போட்டிக்கான சில உதாரணங்கள் ஆகும்.
  2. சீனாவும் ரஷ்யாவும் வேகமாக வலுவடையும் நிலையில், ஆசியப் பிராந்தியத்தில் ஓர் ‘ஆசிய நேட்டோ’வை உருவாக்க, அமெரிக்கா முயல்கிறது. இதில் முக்கிய பங்காற்ற, இந்தியா அழைக்கப்பட்டு இருப்பினும், அவ்வாறு உருவாகும் கூட்டமைப்பு, இந்தியாவையும் அச்சுறுத்தும் என்பதை, இந்தியா நன்கறியும். கிழக்கில், இந்தியா மட்டுமே, சீனாவுக்கு எதிராக நிற்கக் கூடிய நிலையில் உள்ளதால், அமெரிக்காவைப் பொறுத்தமட்டில், இந்தியாவுடன் கூட்டுச் சேர்வது அவசியமாகிறது. புவிசார் அரசியலின் மய்யம், விரைவாக ஆசியாவின் பக்கம் பெயர்வதால், இந்தியா ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றது.

கிழக்கில், ஜப்பானும் அவுஸ்திரேலியாவும் அமெரிக்காவின் பெறுமதி மிக்க நண்பர்கள் என்ற போதும், சீனாவை எதிர்கொள்வதற்கு, அவை இந்தியாவை விட முக்கியமானவை அல்ல. பாகிஸ்தானும் முன்னரைப் போல, ‘மூலோபாய’ முக்கியத்துவம் உள்ள பங்காளியல்ல.
அவ்வப்போது தேவைக்கேற்பப் பாகிஸ்தானைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சீனாவுக்கு எதிரான பெருஞ்சுவர் ஒன்றை எழுப்ப, அமெரிக்காவால் கைநழுவிவிட முடியாத நாடாக, இந்தியா விளங்குகிறது. இந்தச் சூழலில், இந்திய-அமெரிக்க கூட்டால், தெற்காசியப் பிராந்தியத்தில் என்ன நடக்கும் என்பது கவனிப்புக்குரியது.

இரண்டு இராட்சதர்களான அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயற்படும் போது, என்ன நடக்கும் என்பதை நினைக்கையில் ஓர் ஆபிரிக்கப் பழமொழி நினைவுக்கு வருகிறது: ‘யானைகள் ஒன்று கூடினாலோ, சண்டையிட்டாலோ நசியுண்டு போவதென்னமோ எறும்புகள் தான்’.