உடைகிறதா உதயசூரியன்?

உடைகிறது உதயசூரியன், தமிழ் தேசிய விடுதலை கூட்டணிக்குள்ளும் லடாய்’ என்று Tamil Page உள்ளிட்ட சில ஊடகங்களால் பரப்பப்படும் செய்தி இட்டுக் கட்டிய பொய் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி ஐயா தெரிவித்துள்ளார்.

சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்புக்கு எதிராக தமிழ் மக்கள் திரும்பியுள்ள சூழலிலும் காணாமல் போனவர்கள் பிரச்சனை, காணி விடுவிப்பு,தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை போன்ற விவகாரங்களில் தமிழரசு கட்சியின் மெத்தனப் போக்கும் நல்லாட்சி அரசுடனான ஊடலும் தொடர்வதால் தமிழ் மக்களின் அரசியல் சார்ந்த விடயங்களில் இருந்து தமிழரசு கட்சி தூக்கியெறியப்பட்டுள்ள சூழலில் மக்களின் மனவோட்டம் மற்றும் பிரச்சினைகளை அறிந்து இதய சுத்தியுடன் செயலாற்றி வரும் மாற்று அணியைச் சிதைப்பதற்கான வேலைகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் அதன் ஒரு அங்கமாகவே தனக்கும் ஈபிஆர்எல்எப்இன் தலைவர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக வெளியாகிய செய்தியை பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

என்ன செய்தாவது இக் கூட்டணியை உடைக்கவேண்டும் என்று முயல்வோரின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. அது பகற்கனவே தவிர அதற்கு என்னைப் பகடைக்காய் ஆக்கலாம் என்று யாராவது கனவுகண்டால் அது கனவில் மட்டும்தான் சாத்தியம் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே தமது தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக வெளியாகிய செய்தியில் எதுவித உண்மையில்லை என்றும் இது தொடர்பில் செய்திவெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியரிடம் தான் விசனம் வெளியிட்டதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜனநாயகத் தமிழரசுக்கட்சியின் செயலாளர் சிவகரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை ஒற்றுமையாகவே இருக்கின்றோம். வருகின்ற 3ந்திகதி யாழ்ப்பாணத்தில் நாம் அனைவரும் இணைந்து தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவிருக்கிறோம்” என்றார்.

இதேவேளை இச் செய்திகளின் பின்னணியில் சுமந்திரன் அணியின் பின்புலம் இருப்பதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற ஒரு சதி முயற்சி மூலமே மாகாண சபையின் அமைச்சர் அனந்தி சசிதரனின் வெற்றி 2013ல் தடுக்கப்பட்டதுடன் அதற்கான பழியை டக்ளஸ் தேவானந்தா மீது தமிழரசு கட்சியினர் போட்ட சம்பவம் நினைவில் இருக்கலாம் என நம்புகிறோம்.

எது எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடகிழக்கு மாகாணங்களில் இலங்கை தமிழரசு கட்சிக்கு உதயசூரியனின் புதிய கூட்டணியானது பெரும் சவாலாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.