கஜனின் சந்தேகத்துக்குரிய பிடிவாதம்

(புருஜோத்தமன் தங்கமயில்)
தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக, பலமான அணியொன்றைக் கட்டமைக்க வேண்டும் என்கிற சிந்தனையின் வழி செயற்பட்டவர்களில் அநேகர், இன்றைக்கு விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள். புலிகள் இல்லாத அரங்கில், கூட்டமைப்பு ஏகநிலையை அடைந்தது முதல், மாற்று அணியொன்றுக்கான தேவை, தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாற்று அணியொன்றைக் கட்டமைக்கும் காட்சிகளை, மாற்று அணிக்கான கோசத்தை எழுப்பிய தரப்புகளே, கலைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் பெரும் சோகம்.