ஜே.வி.பிக்கு இடம் கொடுத்ததே வந்த தவறு!

1987 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டு, மாகாண சபைகள் மூலம் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு ஓரளவு அதிகாரப் பகிர்வு கிடைத்த போது அதற்கெதிராக மீண்டுமொரு முறை ஆயுதக் கிளர்ச்சி செய்து சுமார் 60,000 சிங்கள இளைஞர்களைப் பலி கொடுத்து தோல்வி கண்டனர். அதே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த ஆர்.பிரேமதாச (இன்றைய ‘ஜனநாயக’ ஜம்பவான் சஜித் பிரேமதாசவின் தந்தை) மூலமே ஜே.வி.பியினருக்கு மரணக்குழி தோண்டப்பட்டது. ஜே.வி.பியினர் அவலை நினைத்து உரலை இடித்ததின் விளைவு இது.

பின்னர் முற்போக்காளர் விஜே குமாரதுங்கவை அவரது மனைவி சந்திரிக முன்னிலையிலேயே சுட்டுப் படுகொலை செய்து விட்டு, சந்திரிகவின் அரசியல் சந்தர்ப்பவாதம் காரணமாக அவருடன் தேர்தல் கூட்டு வைத்து பாராளுமன்றத்தில் 39 ஆசனங்கள் பெற்று, அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளையும் பெற்றுவிட்டு, பின்னர் சந்திரிகவின் காலையும் வாரிவிட்டனர்.

ஆனால் இவர்கள் என்னதான் தலையால் மண் கிண்டினாலும் அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் ஐந்து அல்லது ஆறு உறுப்பினர்களுக்கு மேல் பெற முடியாமல் திணறுகிறார்கள். இந்த இலட்சணத்தில் தாம்தான் அடுத்ததாக இலங்கையில் ஆட்சி அமைக்கப் போவதாக வேறு பீற்றித் திரிகிறார்கள்.

இப்பொழுது செய்ய வேண்டியது, ஏகாதிபத்திய அடிவருடிகளும் பிற்போக்காளர்களுமான சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க போன்றோரை அரசியல் ரீதியாக ஒழித்துக்கட்டுவதற்கு முன்பு, புல்லுருவிகளான ஜே.வி.பியினரை ஒழித்துக்கட்ட வேண்டும். இல்லாவிட்டால் யார் ஆட்சிக்கு வந்தாலும் இவர்கள் நாடு உருப்படுவதை விட மாட்டார்கள்.