நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி – 1)

என்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில் என் முன் எஞ்சியிருந்த ஒரே தீர்வு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை அழைத்து அவரை பிரதமர் பதவியில் அமர்த்தி புதிய அரசாங்கத்தை அமைப்பது மாத்திரமே ஆகும். இந்த புதிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற மதிப்பிற்குரிய 225 அங்கத்தவர்களுக்கும் வெளிப்படையாக நான் அழைப்பு விடுக்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு ஆற்றி உரையின் முழுவடிவம் வருமாறு,

வணக்கம் உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள்.

இறைவனின் துணை.

எனது அன்புக்குரிய பெற்றோர்களே, நண்பர்களே,

இன்று உங்கள் முன் எனது இந்த கருத்துக்களை முன்வைக்க தீர்மானித்தமைக்கு கடந்த சில தினங்களாக இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுடன் நாட்டின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் நாம் பயணிக்க வேண்டிய திசையை தெளிவுபடுத்துவதற்காகவேயாகும். அத்தோடு குறிப்பாக இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படையாக அமைந்த காரணங்களைப்பற்றி மிக சுருக்கமான ஒரு தெளிவை முன்வைப்பதற்காகவாகும்.

இன்று நாம் ஒரு புதிய வருடப் பிறப்பை அண்மித்திருக்கின்ற கால கட்டத்திலேயே இருக்கின்றோம். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி இந்த நாட்டின் எனது அன்புக்குரிய பொதுமக்களாகிய உங்களின் ஏறத்தாழ 62 இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுக்கொடுத்து என்னை உங்களின் பிரதம சேவகனாகவும் அரச தலைவனாகவும் பெரும் எதிர்பார்ப்புகளுடனேயே தேர்ந்தெடுத்தீர்கள். அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்காக இன்றும் நான் உங்களுக்கு எனது மதிப்புடன் கூடிய நன்றியைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, இன்றும் எதிர்காலத்திலும் நீங்கள் என்மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையினை பாதுகாப்பதுடன் எனது உயிரைப் பணயம் வைத்தேனும் அவற்றை நிறைவேற்றுவேன் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நாட்டையும் மக்களையும் முன்னிலைப்படுத்தி அரசியலில் ஈடுபடும் நாம், எந்த கட்சி என்பதையோ வலதுசாரி கட்சியா இடதுசாரி கட்சியா என்பதை விட நாம் சேவை செய்யும் நாட்டிற்கும் மக்களுக்கும் சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு நாம் செய்ய வேண்டிய மிகச் சிறந்த காரியம் என்ன என்பதையே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். 2014 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக என்னை தெரிவு செய்தபோது எனக்கு முகங்கொடுக்க நேர்ந்த இக்கட்டான நிலைமையை பற்றியும் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

இந்நாட்டு அரசியலில் எவருமே பொறுப்பேற்காத பாரதூரமான அரசியல் சவாலையே அன்று நான் பொறுப்பேற்றேன். அத்தோடு அது அரசியல் ரீதியாக மாத்திரமன்றி தனிப்பட்ட வகையில் எனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட பெரும் அச்சுறுதலுக்கு மத்தியிலேயே அன்று நான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். அதேபோலவே கடந்த 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி நான் மேற்கொண்ட தீர்மானமானது, 2014 நவம்பர் 21 ஆம் திகதி நான் மேற்கொண்ட தீர்மானத்தை விட மிகப் பாரதூரமான, சவால்மிக்க அதேநேரத்தில் மிகவும் இக்கட்டான ஒரு தீர்மானமே ஆகும் என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகின்றேன். இந்த அனைத்து தீர்மானங்களையும் உங்களதும் எனதும் அன்புக்குரிய இந்த தாய் நாட்டுக்காகவும் அன்புக்குரிய பொதுமக்கள் உங்களுக்காகவுமே என்பதை நான் இங்கே மிகுந்த கௌரவத்துடனும் பணிவுடனும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

2015 ஆம் ஆண்டு எனது உயிரைப் பணயம் வைத்து அன்று பெற்றுக்கொண்ட அந்த அரசியல் வெற்றியை கொச்சைப்படுத்தும் வகையில் ஒழுக்கமிக்க அரசியலுக்கு ஒவ்வாத அரசியல் செயற்பாடுகளில் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரவேசித்தார். இலங்கையின் எதிர்காலத்தை அவரும் அவருடன் நெருங்கி செயற்படும் உண்மையான மக்களின் உணர்வுகளை உணராத ஒரு சில செல்வந்தர்கள் குழுவினரின் களியாட்ட செயற்பாடுகளாக்கிக் கொண்டார் என்பதே எனது நம்பிக்கையாகும். குறிப்பாக நல்லாட்சி அரசாங்கம் எனும் கருப்பொருளை கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மிக வெளிப்படையாகவே துஷ;பிரயோகம் செய்தார் என்பதே எனது நம்பிக்கையாகும்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி நான் வெற்றியீட்டியதன் பின்னர் 09 ஆம் திகதி மாலையில் நான் ஜனாதிபதியாக பதவியேற்ற அதே கையோடு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்தில் 47 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அவருடன் இருந்த பின்னணியிலும் அவரை பிரதமர் பதவியில் அமர்த்தியமை எனக்கு ஞாபகம் இருப்பதைப் போல் உங்களுக்கும் ஞாபகம் இருக்கும் என நான் நினைக்கின்றேன். இருப்பினும் அந்த உன்னதமான நல்லாட்சி கோட்பாடுகளையும் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாசமாக்கினார் என்பதை என்னைப் போலவே நீங்களும் கடந்த சில ஆண்டுகளாக பெற்ற அனுபவங்களில் அறிந்திருப்பீர்கள் என நான் நம்புகின்றேன். நாட்டில்ஊழலும் மோசடியும் தலைதூக்கின.

ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் கூட்டுக்கட்சிகளும் அதாவது அச்சமயம் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிய அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் என 49 தரப்புக்கள் எம்முடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்கள். அதன்மூலம் நாம் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் ஏற்படுத்திக் கொண்ட எதிர்பார்ப்புகளும் மிகத் தூய்மையான உயரிய உன்னத குறிக்கோள்களும் மிக அப்பட்டமான முறையில் துவம்சம் செய்யப்பட்டதுடன் நாட்டில் ஊழலும் மோசடியும் தலைதூக்கின. சில தினங்களுக்கு முன் டி.எஸ்.சேனாநாயக்க ஞாபகார்த்த நிகழ்வில் வெளியிட்ட கருத்து உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

டி.எஸ்.சேனாநாயக்க அவர்களின் அரசியல் நோக்கு, டட்லி சேனாநாயக்க அவர்களின் அரசியல் நோக்கு, ரணசிங்க பிரேமதாச அவர்களின் அரசியல் நோக்கு ஆகியன ஐக்கிய தேசிய கட்சியினை ஒரு பலமிக்க, பாரிய அரசியல் கட்சியாக எவ்வாறு உருவாக்கின என்பதையும் நமது கலாசாரம், நாட்டுப்பற்றுமிக்க நமது உற்பத்திகள் உட்பட அனைத்தையும் எந்தளவு பாதுகாத்தன என்பதையும்நாட்டின் தனித்துவம், ஒருமைப்பாடு ஆகிய எமது உயரிய தன்மைகளை அந்த சிரேஷ்ட தலைவர்கள் எந்தளவுக்கு பாதுகாத்தார்கள், அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள் என்பதையே நான் கூறினேன். ஆகையால் நான் இப்போதும் பிரார்த்திப்பது ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய தலைவர்களுக்கு டி.எஸ், டட்லி, ஜே.ஆர்.ஜயவர்தன, பிரேமதாச ஆகியோர் கடைப்பிடித்த அந்தஅரசியல் நோக்குகள்மிக்க இன்றைய உலகுக்கு பொருந்துகின்ற ஒரு சமூகத்தை உருவாக்கத்தக்கஅறிவு கிட்ட வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பொதுவாகவே கூட்டுச் செயற்பாடற்ற, தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்கும் மிகவும் முரட்டுத்தனமான பிடிவாதமிக்க முறையிலேயே அரசாங்கத்தில்செயற்பட்டார். அவரின் அந்த செயற்பாடுகள் ஒரு பாரிய அரசியல் நெருக்கடியை உருவாக்கியது. கூட்டுத் தீர்மானங்கள், கலந்துரையாடல்கள், கருத்துப்பரிமாறல்கள் அற்ற நிலையில் அவரின் நெருங்கிய சகாக்களுடன் மாத்திரம் கலந்தாலோசித்து முடிவுகளை எடுத்ததன் காரணமாக ஒரு நாடு என்ற வகையில் எமக்கு துரதிஷ்டமான நிலை ஏற்பட்டது. இங்கே இன்னொரு விடயத்தையும் நான் குறிப்பிட வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் எனக்கும் இடையில் கடந்த மூன்றரை வருடங்களுக்கு மேலான காலப்பகுதியில் கொள்கை ரீதியிலான அரசியல் பிளவையும் வேறுபாட்டையும் முரண்பாடுகளையும் நான் தெளிவாகக் கண்டேன். ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் கொள்கைக்கும் எனது அரசியல் கொள்கைக்கும் இடையில் கொள்கை ரீதியிலான மோதல் ஏற்பட்டது. அதுமாத்திரமன்றி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் எனக்கும் இடையில் பாரிய கலாசார வேறுபாடுகளையும் நான் கண்டேன். அவருக்கும் எனக்கும் இடையிலான இந்த அரசியல் கொள்கை ரீதியிலான வேறுபாடுகள், அரசியல் கலாசார ரீதியிலான வேறுபாடுகள், தனிநபர் சார்ந்த வேறுபாடுகள் ஆகிய அனைத்தும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நெருக்கடியை மிக மோசமாக்குவதற்கு காரணமாக அமைந்தன என நான் நம்புகின்றேன்.

நான் ஏனைய சிரேஷ்ட தலைவர்களுடன் கூடியிருந்த காலங்களில் நாம் இணைந்து செயற்படுவோம். கூட்டாக செயற்படுவோம். நாம் எடுக்கும் தீர்மானங்களை கலந்துரையாடி மேற்கொள்வோம். நல்லாட்சி கோட்பாடுகளை அடையும் வகையில் நாம் செயற்படுவோம் என நான் அவரிடம் பல தடவைகள் எடுத்துக் கூறினேன். எனினும் 62 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர் மக்களின் அந்த உன்னதமான அபிலாiஷகளை அவர் கவனத்தில் கொள்ளவில்லை. அவர் அப்படி நடந்ததையிட்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். இந்த நாட்டின் தலைமைத்துவத்தை நான் பொறுப்பேற்றது இந்த நாட்டை இலஞ்சம், ஊழல் அற்ற நல்லாட்சி கோட்பாடுகளை முதன்மைப்படுத்திய புத்தாக்கமிக்க மிகச்சிறந்ததோர் அரச நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கேயாகும். கடந்த கால அனுபவங்களுடன் தற்கால, எதிர்கால சவால்களை அறிந்து எமது நாட்டின் எதிர்காலத்தை மிகவும் உயரிய வகையில் எதிர்கால குறிக்கோள்களை அடையும் அதேவேளை, ஆன்மீக நல்லொழுக்கமிக்க சிறந்த கோட்பாடுகளுடன் முதன்மைப்படுத்தி செயற்பட நான் தொடர்ந்தும் முயற்சித்து வந்ததுடன், அதற்காக பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன். அநேகமான நேரங்களில் நான் சில அடிகளை பின்வாங்கியும் இருக்கின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் சில சமயங்களில் நான் சினத்துடன் கருத்து தெரிவித்ததை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் அவ்வாறான வேளைகளில் நீங்கள் என்னை குறை கூறியதையும் நான் அறிவேன். சில வேளைகளில் நான் முதிர்ச்சியடையவில்லை என்றும் உணர்ச்சிவசப்படுவதாகவும் கூறியிருக்கின்றீர்கள்.

ஆயினும் அரசாங்கத்தின் அந்தரங்க கலந்துரையாடல்களின் போதும் அமைச்சரவை கூட்டங்களிலும் கட்சித் தலைவர்களின் கூட்டங்களிலும் நான் எந்த அளவு பொறுமையாகவும் கண்ணியமாகவும் நடந்து கொண்டேன் என்பதை எனது மனசாட்சி மட்டுமே அறியும். அந்த அர்ப்பணிப்பை நாட்டுக்காவும் நாட்டு மக்களுக்காகவுமே அதை நான் செய்தேன். இருந்தபோதும் நீங்களும் ஏற்கனவேஅறிந்தவாறு அந்த உன்னத குறிக்கோள்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கிய இந்த நல்லாட்சி கருப்பொருளை, இந்த அரசாங்கத்தை உருவாக்கி மூன்று மாதங்கள் முடிவதற்கு முன்னரே சிதைத்து விட்டார்கள்.

மத்திய வங்கியின் மகா கொள்ளை நமது நாட்டை பாரிய பொருளாதார பாதாளத்தில் தள்ளிவிட்டது. இலங்கை வரலாற்றில் அரச சொத்துக்கள் மீதான இத்தகைய கொள்ளையடிப்பை நாம் கேட்டுக்கூட இருக்கவில்லை. அந்த தூய்மையான நல்லாட்சி அரசியல் கோட்பாடுகள் இலஞ்ச, ஊழலற்ற அரச நிர்வாகத்தை முன்னெடுப்பதாக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை வெளிப்படையாகவே மீறினார்கள். எனது ஞாபகத்தில் இருக்கின்றது அன்புக்குரிய பிள்ளைகளே பெற்றோர்களே அந்த மத்திய வங்கி சூறையாடல் சம்பந்தமாக நாட்டில் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள், எதிர்க்கட்சி, அரசியல் கட்சிகளின் சமூகத்திற்கு பொறுப்புக்கூறும் சிவில் அமைப்புகள் ஆகியன குரல் எழுப்பியபோது அரசாங்கத்தினுள் எந்தளவு பாரிய நெருக்கடியான நிலை ஏற்பட்டது என்பதை நான் அறிவேன். அந்த சம்பவத்துடன் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எவ்வாறு செயற்பட்டார் அவரது நடத்தை எவ்வாறானதாக இருந்தது என்பது பற்றி இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது. மிகுந்த பதற்றத்துடனேயே அவர் செயற்பட்டார்.

அச்சமயம் மத்திய வங்கியின் பணிக்குழாமை சந்திக்க நான் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தபோது ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு ஓடி வந்து மிகுந்த பதற்றத்துடன் அவர் என்னிடம் கூறினார். மத்திய வங்கி எனது கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கின்றது. அதாவது வர்த்தமானிமூலம் எனது கட்டுப்பாட்டுக்கு கீழேயே இருக்கின்றது அதனால் நீங்கள் எதற்காக மத்திய வங்கிக்கு போக வேண்டும் என என்னிடம் வினவினார். அப்போது நான் அவரிடம் உங்களுக்கு வர்த்தமானி அறிவித்தல் மூலம் அந்த வங்கி கையளிக்கப்பட்டிருக்கின்றது என்பது உண்மை ஆனால் நான் இந்த நாட்டின் ஜனாதிபதி அல்லவா எனக்கு அங்கு செல்வதற்கு உரிமை இருக்கின்றதல்லவா எனக் கூறினேன். அவ்வாறு கூறிவிட்டு இன்னும் சொற்ப நேரத்தில் மத்திய வங்கிக்கு செல்ல போகிறேன் எனக் கூறினேன். அத்தோடு அவர் எனது வீட்டைவிட்டு வெளியேறினார்.

சொற்ப நேரத்தின் பின் நான் மத்திய வங்கியை சென்றடைந்தபோது மத்திய வங்கி நிதி மோசடி காரணமாக விடுமுறையில் இருந்த மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் அவர்கள் என்னை வெற்றிலை கொடுத்து வரவேற்க மத்திய வங்கி வாசலில் காத்திருந்தார். அவர் எவ்வாறு அங்கே வந்தார் என நான் ஆச்சரியப்பட்டேன். அப்போது அவர்கள் மிகவும் பதற்றத்துடன் நடந்துகொண்ட விதத்தையும்; பதற்றமடைந்திருந்த அவர்களது மனோ நிலையையும் அப்போது நான் தெளிவாகக் கண்டேன். அந்த சம்பவத்தினால் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியும் அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டது. அதற்கு தீர்வு காணும் வகையிலும் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையிலுமே ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தேன். அந்த ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் என்னைக் குறை கூறியவாறு ஏன் ஆணைக்குழுவை நியமித்தீர்கள் என என்னிடம் வினவினார்கள். அப்படி செய்ததன்மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது நான் அவமதிப்பை ஏற்படுத்தினேன் என்பதே அவர்களது எண்ணமாக இருந்தது. அதற்கு நான் அந்த சம்பவத்தின்; உண்மையை அறிவதற்கும் மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்கவுமே நான் இந்த ஆணைக்குழுவை நியமித்தேன் எனக் கூறினேன். மத்திய வங்கியின் அந்த சம்பவமே பொருளாதார ரீதியில் இன்னும் எம்மால் தலைதூக்க முடியாத மிக மோசமான பாரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்திய காரணியாக இருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இவ்வருடம் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தல்களில் கிடைத்த பெறுபேறுகளை அரசாங்கத்தின் குறைபாடுகளை திருத்திக் கொள்ள மக்கள் வழங்கிய ஒரு தீர்ப்பாகவே நான் கருதுகின்றேன். ஆகையால் அதன்போது ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களையும் அழைத்து நாங்கள் மூன்று வருடங்களாக மேற்கொண்ட செயற்பாடுகளைப் பற்றி மக்கள் இப்போது தமது தீர்ப்பை வழங்கியிருக்கின்றார்கள். நாங்கள் இப்போது எம்மை திருத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினேன். அத்தோடு பிரதமர் அவர்களிடம் நீங்கள் எனது அதிகாரத்தையும் கையிலெடுத்து செயற்பட்டீர்கள் ஆயினும் என்னை அதிகாரத்தில் அமர்த்தும் செயற்பாட்டிற்கு நீங்கள் முன்னின்று உழைத்ததால் அதற்கு நன்றி உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் மௌனமாக இருந்தேன் எனக் கூறினேன்.