மஹிந்த தலைமையிலான அரசாங்கத்துக்கு த.தே.கூ எதிர்ப்பு

அரசமைப்பை முற்றிலும் மீறுவதாகவும் சட்டவிரோதமாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. “நடுநிலை”வகிப்பதென்பது, அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கக்கூடிய ஜனநாயக விரோத செயல் எனவும், த.தே.கூ தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், நேற்று (02) பிற்பகல் நடைபெற்றது. இது தொடர்பில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி, நாடாளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கைகள் சம்பந்தமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், நேற்றுப் பிற்பகல் 5 மணிக்கு கூடி ஆராய்ந்து, பின்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளது.

1. இலங்கை அரசமைப்பின் பிரகாரம் பதவியிலிருக்கும் பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை. 19ஆம் திருத்தத்துக்கு முன்னர் ஜனாதிபதிக்குக் கொடுக்கப்பட்டிருந்த அந்த அதிகாரம், 19ஆம் திருத்தத்தின் மூலம் திட்டவட்டமாக நீக்கப்பட்டது.

ஆகையால், பிரதமரை நீக்குவதாகவும், வேறொருவரை பிரதமராக நியமிப்பதாகவும் பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்புகள் அரசமைப்புக்கு முரணானதும் சட்டவிரோதமானவையுமாகும்.

2. மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளை நிறுத்தியதாக ஜனாதிபதி விடுத்த பிரகடனத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக விரோத செயலாகவும் நாடாளுமன்றத்தின் மீயுயர் தன்மையைப் பாதிக்கின்ற செயலாகவுமே நோக்குகின்றது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத ஒருவரை பிரதமராக அறிவித்து விட்டு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை அவர் நிரூபிக்க வேண்டிய தேவையைத் தாமதிப்பதற்கும் முறியடிப்பதற்கும் எதுவாக செய்யப்பட்ட கால நீடிப்பே இதுவாகும்.

இக்கால நீடிப்பை உபயோகித்து அமைச்சுப் பதவிகளையும் பணத்தையும் இலஞ்சமாக கொடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கத்துக்கு முறைகேடாக இழுத்தெடுத்து, நாடாளுமன்ற பெரும்பான்மையை கபடமாக பெற்றுக் கொள்வதற்கான இந்த ஜனநாயக விரோத செயலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதோடு, தனது எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் இந்தச் சதி முயற்சிக்குப் பலியானதை குறித்து எமது கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிடுகிறோம். அவருக்கு எதிரான உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.

3. மேற்சொல்லப்பட்ட காரணங்களுக்காக, அரசமைப்பை முற்றிலும் மீறுவதாகவும் சட்டவிரோதமாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மஹிந்த தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும் இத்தகைய சந்தர்ப்பத்தில் “நடுநிலை”வகிப்பதென்பது அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கக்கூடிய ஜனநாயக விரோத செயல் என்பதே எமது நிலைப்பாடு.