யார் இந்த ஜெகன்? பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது?

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக, யுத்த குற்றங்களை முன்வைத்து மெல்போர்ன் நீதிமன்றத்தில் அவுஸ்திரேலிய தமிழ் பிரஜையொருவர் வழக்கு தாக்கல் செய்த சம்பவத்தை சில அவுஸ்திரேலிய பத்திரிகைகளும், ஏ.பி.சி. தொலைக்காட்சியும் மேற்கோள்காட்டி, செய்திகளை வெளியிட்டுள்ளன.

இங்கு அவுஸ்திரேலிய தமிழ் பிரஜையாக அருணாசலம் ஜெகதீஸ்வரன் காணப்படுகின்றார். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை, தான் கண்டதாக இவர், தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளார். இறுதிக்கட்ட போர் காலத்தில் வன்னியில் மனிதாபிமான பணிகளை மேற்கொள்ளும் தொண்டராக அருணாசலம் ஜெகதீஸ்வரன் கடமையாற்றினார் என்றும் தனது வழக்கு தாக்கல் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இவர் பற்றிய பின்னணி, இவர் ஒரு பயங்கர வாதி என்பதை சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கின்றது. ஜெகன் என்று சுருக்கமாக அழைக்கப்படும் அருணாசலம் ஜெகதீஸ்வரன், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஒரு முக்கிய எல்ரிரிஈ உறுப்பினராக செயற்பாட்டு பின்நாட்களில் வன்னி வந்து பிரபாகரனுடனின் பயங்கரவாத செயல்களுடன் தன்னை நேரடியாக இணைத்துக்கொண்டவர்.

அவுஸ்திரேலியாவின் தமிழ் ஒருங்கமைப்பு குழுவின் சிட்னி கிளைக்கான முன்னாள் தலைவராகவும் இவர் இருந்துள்ளார். ரி.சி.சி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ் ஒருங்கமைப்பு குழுவானது, எல்ரிரிஈ இயக்கத்தின் முன்னணி ஆதரவு நிருவகமாக இருந்து வந்துள்ளது.

இந்த குழுவினூடாக அவுஸ்திரேலியாவில் நிதி திரட்டி, பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்தாசை வழங்கிய இந்த குழுவின் சில முக்கிய அங்கத்தவர்கள் முன்னர் கைது செய்யப்பட்டு, அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டும் உள்ளனர்.

தமிழ் ஒருங்கிணைப்பு குழுவின் நிதியை முகாமைத்துவப்படுத்தும் ரஜீவன் எனும் கணக்காளர் தீய நோக்கத்துடன் பயங்கரவாத நிறுவனத்தின் அங்கத்தவராக செயற்பட்டமை, எல்ரிரிஈ பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு மற்றும் வளங்களை வழங்கியமை மற்றும் அந்த இயக்கத்திற்காக சொத்துகளை சேகரித்துக்கொடுத்தமை போன்ற காரணங்களுக்காக அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தால், குற்றம் சாட்டப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர், இவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் லண்டன் நகரில் பிரித்தானிய எல்ரிரிஈ வலயமைப்பில் முக்கிய நபராக செயற்பட்டு, எல்ரிரிஈ யினருக்கு பல உதவிகளை வழங்கிய காரணத்திற்காக, இரண்டு வருட சிறைதண்டனை விதிக்கப்பட்ட அருணாசலம் கிறிஷாந்த குமார் (சாந்தன்) என்பவர், ஜெகனின் இளைய சகோதரராவார்.
 
அரசாங்கத்திற்கும், எல்ரிரிஈ யிற்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானதும், எல்ரிரிஈ யினர் சர்வதேச ரீதியாக செயற்பட்டு வந்த முக்கிய எல்ரிரிஈ உறுப்பினர்களை வன்னிக்கு அழைத்தனர். வன்னிக்கு அழைக்கப்பட்ட எல்ரிரிஈ செயற்பாட்டாளர்களில் ஒருவரே, இந்த ஜெகன் ஆவார்.

இலங்கை ராணுவம் கிளிநொச்சி நோக்கி நகர்வுகளை மேற்கொண்ட போது, வன்னி பிரதேசத்தில் தங்கியிருந்த தொண்டுநிறுவனங்களை வெளியேறுமாறு இலங்கை அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க சகல தொண்டு நிறுவனங்களும் வெளியேறின, ஆனால் ஜெகன் புலிகளின் தலைமையுடன் இணைந்திருந்து புலித்தலைமைக்கு தேவையான உதவிகளை செய்ததாக படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்றுவெளியேறியுள்ள முன்னாள் புலிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் வன்னியிலிருந்து மக்கள் புலிகளை நிராகரித்து வெளியேறியபோது அம்மக்களை புலிகள் சுட்டுக்கொன்றனர், அவ்வாறன சந்தர்பங்களில் முன்னணியில் நின்று வெளியேறும் மக்களுக்கு தீங்குகளை இவர் செய்ததாகவும் வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபாகரன் எனும் உலக பயங்கரவாதிக்கு மிக நெருக்கமாக இருந்த ஜெகன் எனப்படுகின்ற அருணாச்சலம் ஜெகதீஸ்வரன், இறுதி நாட்களில் பிரபாகரனின் மிக நம்பிக்கைக்கு உரியவராக இருந்ததாகவும், பிரபாகரனின் பெற்றோரை பராமரிக்கும் பொறுப்பு இவரிடமே வழங்கப்பட்டிருந்தாகவும், பிரபாகரனின் பெற்றோரை பத்திரமாக அழைத்துவந்து இராணுவத்தினரிடம் இவரே ஒப்படைத்தாகவும் தெரியவருகின்றது. வன்னியில் ஆயிரக்கணக்கான புலிகள் இருந்தும் பிரபாகரன் தனது பெற்றோரை இவரிடம் ஒப்படைத்திருக்கின்றார் என்றால் ஜெகனுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான நெருக்கத்தை எடைபோட வேறு எந்த மானியும் தேவைப்படாது.

மேலும் வன்னியில் புலிகளின் இராணுவத்தளங்களுக்கான கட்டவேலைகள் உட்பட பிரபாகரனுக்காக கட்டப்பட்ட பாதுகாப்பு பங்கர்கள், நிலக்கீழ் மாளிகை மற்றும் நீச்சல் தாடாகங்கள் என்பன ஜெகனாலேயே வடிவமைக்கப்பட்டதாகவும், வன்னியில் இவரது உதவியாளராக செயற்பட்ட ஒருவர் தெரிவிக்கின்றார்.

இதில் மிக முக்கியமான விடயம் யாதெனில் பிரபாகரனுக்காக கட்டப்பட்ட பாதுகாப்பு பங்கர்கள், நிலக்கீழ் பாதுகாப்பு மாளிகை மற்றும் நீச்சல் தடாகம் என்பவற்றை கட்டுவதற்கு சிறைக்கைதிகளும் சில போராளிகளும் பயன்படுத்தப்பட்டனர். பின்னர் இத்தொழிலாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் இப்படுபாதக கொலையின் பின்னணியில் ஜெகனே உள்ளதாகவும் மேற்படி வேலைகள் முடிந்தபின்னர் தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்படவேண்டும் என்ற முன்மொழிவை பிரபாகரனுக்கு ஜெகனே முன்வைத்திருந்தாகவும் மேற்படி அவரது உதவியாளர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு ஆயிரக்கணக்கான கொலைகளுக்கு நேரடிப்பொறுப்பாளியாக குற்றஞ்சுமத்தப்படக்கூடிய ஜெகன் இடைத்தங்கல் முகாமிலிருந்து எவ்வாறு வெளியேறினார் என்பது மிகவிரைவில் வெளிப்படுத்தப்படும்.

அவை வெளிப்படுத்தப்படும்போது அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் எவ்வாறு பயங்கரவாதிகளையும் கொலைக்குற்றவாளிகளையும் பாதுகாக்கின்றது என்ற விடயங்கள் அம்பலமாகும்.

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்து அரசுக்கு எதிராக செயற்படும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமொன்றுடன் இணைந்து செயற்பட்டமை, பல கொலைகளுக்கு உடந்தையாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக இவர் மீது வழக்கு தொடரப்படவேண்டும்.

ஜெகனின் பின்னணியை முழுமையாக அறிந்து கொள்ளாமலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான அடிப்படையற்ற சில குற்றச்சாட்டுகளுக்கு, அவுஸ்திரேலிய ஊடகம் முன்னுரிமை வழங்கி வருகிறது.

வன்னியில் புலிகளின் அவலங்களை காட்டி புலம்பெயர் நாடுகளில் வசூலிக்கப்பட்ட பணத்தின் பெரும்பகுதி ஜெகனின் குடும்ப அங்கத்தவர்கள் கைகளில் உள்ளது. புலிகளால் சிதைக்கப்பட்ட வன்னியில் உள்ள குடிமனைகள் அரச கட்டிடங்கள், சமய ஸ்தலங்கள் எனபவற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கு இவர்களிடமுள்ள பணமும் சொத்தும் பறிமுதல் செய்யப்படவேண்டும். இதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றில் இவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்படுவேண்டும்.

(இலங்கைநெற்)