1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 3)

இவர்கள் காலைக் கடன் கழித்து மீண்டும் குழிகளுக்குள் இறக்கிய பின்னர் புலி விலங்குகள் தங்களது இயக்கப் பாடல் என்று கூறி சில பாடல்களை பொக்ஸ் வைத்து ஒலிபரப்புச் செய்வார்கள். அவற்றில் ஒரு பாடல் என் நினைவை இன்றுவரை அகலவில்லை. அப்பாடல் பின்வருமாறு:

நடந்து வந்த பாதை தனைத்

திரும்பிப் பாரடா

நீ நாச வேலை செய்த பின்னர்

வருந்துவாயடா

அடர்ந்த காற்றில் எரியும்

தியாக நெருப்புத்தானடா
உன்னை ஆட்டுகின்ற சக்தியோடு எரிக்கும்தானடா
எதிரி காலில் ஏறிநின்று செருப்புமாகினாய்

தமிழீழ மண்னை எண்ணை ஊற்றி

நெருப்பை மூட்டினாய்

கதிரை ஏறும் ஆசை கொண்டு

விலையுமாகினாய்

புலிவீரர் களத்தில் போகும் போது

தலையுமாட்டினாய்….(2) – நடந்துவந்த

தம்பிமாரை கொன்றவர்க்கு

வாழ்த்துப் பாடினாய்

உன் தங்கை கற்பை தின்றவர்க்கு

மாலை சூடினாய்

நம்பி இருந்த எங்களுக்கு

நஞ்சை ஊட்டினாய்,

புலி நாளை வரும் அந்த நேரம்

கம்பி நீட்டுவாய் -(2) – நடந்துவந்த

இந்தப் பாடலைப் பாடியவர் தேனிசை செல்லப்பா எனக் கூறினர். தமிழகத்தில் பலர் புலிகள் சுரண்டிய பணத்தில் இவர்களும் பக்கவாட்டில் சம்பாதித்தார்கள். சிலர் வாய்கிழியப் பேசிச் சம்பாதித்தனர் ஈழத் தமிழர் பணத்தை.

செல்லப்பா என்ற நபர் தெருக்கூத்துப் பாடல்களைப் பாடித்திரிந்த நபர், சினிமாக்களிலோ அல்லது கச்சேரிகளிலோ தலைகாட்டத் தயுதியில்லாதவர், இன்று பல கோடிகளைக் குவித்து பெருவாழ்வு வாழ்கிறார். அனைத்தும் பிற நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் வழங்கியது. புலி ஏற்பாட்டில் உலகம் சுற்றி சம்பாதித்துள்ள இந்த நபர் தமிழகத்தில் இருக்கும் எங்கள் அகதி இனத்துக்கு அப்படிச் சம்பாதித்தப் பணத்தில் ஒரு ரூபாயைக் கூடக் கொடுக்காத கொடை வள்ளலாவார்.

இந்த நபரது சொந்த ஊர் சொக்கம்பட்டி, இவரது ஊருக்கு அருகில் கடையநல்லூர் என்ற இடத்தில் அகதிகள் முகாம் உண்டு. இவர் ஈழத் தமிழர் பணத்தில் பிளைப்பு நடத்தப் புறப்பட்ட இந்த 25 ஆண்டுகளில் தனது பணத்தில் ஒரு ரூபாயைக் கூட இந்த அகதிகளுக்கு வழங்கியது கிடையாது. தமிழ் இனத்துக்குள் மோதிக் கொண்டு அழிகின்றனர். பாட்டுப்பாடி அவ்வின அழிப்பை ஊக்குவித்த இந்த மிருகமும் ஓர் கழுதைப் புலிதான்.

“நடந்து வந்த பாதையினைத் திருப்பிப் பாரடா”!

1986ல் ரெலோ இயக்கத்தவர்களை நெருப்பில் போட்டு எரித்துக்கொன்றதையும், துப்பாக்கியால் சுட்டும், கிறனைட்டை அவர்கள் மீது வீசியும் பல நூற்றுக்கணக்கான தமிழீழ விடுதலைப் போராளிகளை படுகொலை செய்து விடுதலைப் போருக்கு களங்கத்தை மட்டுமல்ல தீராத பகையினை ஏற்படுத்திய வரலாற்றை அதாவது நடந்து வந்தவரலாற்றை நீ திரும்பிப் பாரடா என்று நாம்தான் புலி விலங்குகளைப் பார்த்துக் கேட்க வேண்டும். ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள், பின்னர் புளொட் தோழர்கள் அதற்கு முன்னர் ஓபராய் தேவன், பின்னர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனது இயக்க அங்கத்தினர் என்று அனைத்து இயக்க இளைஞர்களையும், அவர்களது உறவினர்களையும், உதவி செய்தவர்களையும் வதை செய்து கொன்றவர்கள் மற்றவர்களுக்கு பட்டம் சூட்டி பாடல் பாடுகின்றனர். ஒவ்வொரு முறையும் இப்பாடலைக் கேட்கும் போது செல்லப்பாவின் முகத்தில் காறித் துப்பிக் கொண்டிருந்தேன் மனதுக்குள். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று கூறுவார்கள். செல்லப்பா கொண்டாடியது மட்டுமல்ல கோடிகளையும் சேர்த்து ஓய்ந்திருக்கிறார். இந்த நாயின் ஊளைக்கு புலி விலங்குகள் அன்று கூத்தாடினர் எங்கள் கண்முன்னே!

“நீ நாச வேலை செய்த பின்னர் வருந்துவாயடா”

நாசவேலைகள் அனைத்தையும் செய்து முடித்தது புலி விலங்குகள் என்பது உலகம் அறிந்ததுதான். ஆனால் “பின்னாளில் வருந்துவாயடா” என்ற தீர்க்க தரிசனம் மிகவும் கச்சிதமாக பொருந்தியது இந்த புலி விலங்குகளுக்குத்தான். வருந்தியது இவர்கள் மட்டுமல்ல, மக்களையும் இழுத்து வந்து வருந்த வைத்தார்கள் முள்ளிவாய்க்காலில்.

நாம் மூவாயிரம் பேர் இவர்களால் துணுக்காயில் வதைக்கப்பட்டோம். நாம் அனைவரும் பல இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் நாசவேலை செய்த இவர்கள் மொத்தமாகவே வருந்தினார்கள் முல்லைத்தீவில். காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று வானொலி வைத்துக் கதறினார்கள் இவர்களும் இவர்களது புகழ் பாடிகளும். உலகமே மௌனித்து நின்றது இவர்கள் வருந்தும் போது. செல்லப்பாவின் பாட்டு இவர்களது இரக்கமற்ற கொடுஞ்செயலால் முற்றுப்பெற்றது. தெய்வம் நின்று கொல்லும் என்பது என் கண்முன்னே நடந்தது. ஆயினும் எங்கள் மக்களும் இந்த விலங்குகளிடம் சிக்குண்டு வதைபட்டதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

‘நாம் சிறைபட்டு இவர்களது சவக்குழிகளுக்குள் இருந்த போது எங்கள் இரத்த உறவுகள் எங்களைப் பார்க்க தினமும் புலி விலங்குகளது அலுவலகங்கள் முன்னால் காத்துக் கிடந்தனர். அங்கு இருந்த மூவாயிரம் பேரில் ஒருவரைக்கூட இந்த விலங்குகள் பார்வையிட அனுமதிக்கவில்லை. அம்மா, அப்பா, சகோதரர்கள், மனைவி, குழந்தைகள் என்று அனைத்து இளைஞர்களுக்கும் இரத்த உறவுகள் இருந்தன. இவர்களது பல அலுவலகங்களுக்கும் நாயாக அலைந்து திரிந்தனர். எங்களை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பது கூட எங்கள் உறவினருக்குத் தெரியாது.

மனித நேயமே அற்ற இந்த விலங்குகளா எங்கள் இனத்துக்கு விடுதலை பெற்று வாழவைக்கப்பபோகின்றனர்? மனித உரிமைகள் என்றால் என்னவென்றே தெரியாத இந்த மிருகங்கள் தமிழினத்தை வன்னியில் விலங்குகளாக மாற்றிக்கொண்டிருந்தனர்.

“கதிரை ஏறும் ஆசை கொண்டு விலையுமாகினாய்”

ஏனைய அனைத்து இயக்கங்களையும் கதிரை ஏறும் ஆசை கொண்டு வதைக்கவில்லை? அழிக்கவில்லை? 1983 முதல் அனைத்து இயக்கங்களும் போர் முனைக்குச் செல்லத்தான் தயாரித்துச் செயல்பட்டன. கதிரை ஆசை யாருக்கும் அப்போது வரவில்லை. கதிரை ஆசை வந்தது புலி விலங்குகளுக்குத்தான். போட்டிக்கு இயக்கங்கள் இருந்தால் தானே கதிரைக்கும் போட்டி வரும். அனைத்து இயக்கங்களையும் அழித்துவிட்டால் எனக்கு மட்டும்தானே கதிரை! மொத்தமாகவே தமிழ் இளைஞர்களையும் தமிழினத் தலைவர்களையும் அழித்த விலங்குகள் கதிரைக்கு ஆசைப்படுவது ஏனைய இயக்கங்கள் என்று கதை சொல்லிப் பாட்டுப்பாடுகின்றனர். என்ன கொடுமை இது! பாவத்தை இரக்கமின்றிச் செய்து கொண்டு பழியைப் பிறர்மீது சுலபமாக விதைத்தனர் பாடல் வழியாக!

“உன் தங்கை கற்பைத் தின்றவர்க்கு மாலை சூட்டினாய்”

எந்த மனிதனாவது தனது தங்கையைக் கற்பழித்தவனுக்கு மாலை சூட்டுவானா? ஐ.பி.கே.எப். கற்பழித்தது, ஏனைய இயக்கங்கள் மாலை சூட்டினர் என்பதுதான் இந்தப் பாடல் வரிகள். “கவிதைக்குப் பொய்யழகு” என்று தமிழகத்தில் ஒருவர் பாடினார். இந்த விலங்கும் பொய்யையே கவிதையாக்கி ஏனைய விலங்குகளிடம் கைத்தட்டல் பெற்றிருப்பார். ஐ.பி.கே.எப். தமிழ் பெண்களைக் கற்பழிப்பதற்காக ஈழத்துக்கு வரவில்லை. மாலை போட்டு வரவேற்றது புலிகள்தான். அமைதியை நிலைநாட்டி தமிழருக்கென்று மாநில அரசொன்றை உருவாக்கி நிர்வாகத்தைத் தமிழரே, தமிழர் பகுதிகளில் நடத்திட ஓர் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்த அமைதிபடை வந்தது. புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது துப்பாக்கியை ஐ.பி.கே.எப். க்கு எதிராக திருப்பினால் ஏனைய இயக்கத்தவர்களும் துப்பாக்கியை அவர்களுக்கு எதிராகத் திருப்ப வேண்டும் என்று எதிர்பார்த்தாரா? எந்த நியாயத்தை வைத்து இந்த விலங்குகள் எதிர்பார்த்தனர்?

கதிரை ஆசைக்காக ரெலோ இயக்க அங்கத்தினரை படுகொலை செய்தீர்கள். எனவே ஏனைய இயக்கத்தினரும் ரெலோ இயக்கத்தினரைக் கொலை செய்ய வேண்டுமா? ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தினரைக் கொன்றார்கள் ஏனையோரும் மதிகெட்டு அப்படிச் செய்ய வேண்டும் என்றா எதிர்பார்த்தனர்?

பிரபாகரன் என்ன நினைக்கிறாறோ அதனைச் செய்ய வேண்டும். இல்லையெனில் அனைவரும் துரோகிகள். பிரபாகரனுக்கோ அல்லது புலிகளுக்கோ முடிசூட்டும் பணிக்காக நாம் விடுதலை கோரவில்லை! தமிழ் இனத்தின் விடுதலைக்காகத்தான் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் திலகமிட்டு அனுப்பினர். அப்படி அனுப்பப்பட்ட பிள்ளைகளை எண்ணை ஊற்றி எரித்துவிட்டு தேவாரம் பாடி மக்களை ஏமாற்றினார்கள் அன்று. தமிழ் இனத்துக்கு எதிரான வன்கொடுமை ஒரு புறம் நடக்க, மறுபுறம் தமிழின உணர்வுப் பிரசாரம் செய்து பணம் பார்த்தார்கள் பிறநாடுகளில்.

ஐ.பி.கே.எப். தமிழர்களைத் தாக்கவுமில்லை, அழிக்கவுமில்லை, எப்போது புலிவிலங்குகள் அவர்கள் மீது தாக்குதல் தொடுத்தார்களோ அப்போதுதான் அவர்கள் திருப்பித் தாக்குவதற்கு ஆரம்பித்தார்கள். திரு. புலேந்திரன், திரு. குமரப்பா உள்பட 12 புலிகள் இலங்கைக் கடற்பகுதியில் வைத்து சிங்களக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டு இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கை இராணுவம் வடக்கு கிழக்கில் தமிழர்களைக் கைது செய்யக் கூடாது என்று இந்தியாவின் உத்தரவு. கடல் பகுதியில் வைத்து கைது செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என்ற உத்தரவு ஒப்பந்தத்தில் இல்லை. எனவே கடற்படை ஒப்படைத்த நபர்களை விசாரிக்க கொழும்புக்கு கொண்டு செல்லப்போகிறோம் என்று இலங்கை இராணுவம் முயற்சிகள் மேற்கொண்டது. அதை மறுத்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தது.

இந்த வேளையில்தான் புண்ணியவான்களான பாலசிங்கமும், மாத்தையாவும் அந்தக் கைதிகளைச் சந்திப்பதற்கு இந்தியாவிடம் வற்புறுத்தி அனுமதி பெற்று பார்க்கச் சென்றனர். அவர்களுக்கு உண்ண உணவும் கொடுத்துக் கூடவே சைனைட் குப்பிகளையும் கொடுத்து ‘தலைவர் உத்தரவு” சாப்பிட்டுச் செத்துப் போங்கள் என்று ஆசி வழங்கிவிட்டு வந்தனர். அவர்கள் உண்டார்கள், இறந்தார்கள்! புலிகளது கொள்கைப்படி, படைப்பிரிவுகளிடம் அகப்பட்டுக்கொண்டால் விசக்குப்பியைக் கடித்துத் தின்று இறந்துவிட வேண்டும். ஆகவே புலேந்திரன் குமரப்பா மற்றும் புலிகளும் கடற்படையிடம் சிக்குண்ட போதே குப்பியைக் கடித்து இறந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை! அப்படியாயின் அவர்கள் வாழவேண்டும் என்று நினைத்துள்ளனர். அவர்களிடமிருந்த குப்பிகளை கடற்படையினர்தான் அகற்றி எடுத்தனர்.

இவர்கள் இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர்தான் திருமணம் செய்திருந்தனர். அத்திருமணங்களை தாலி எடுத்துக் கொடுத்து வாழ்த்தி நடத்திவைத்தவர் தலைவர் பிரபாகரன்தான். எனவே அவர்கள் தற்கொலை செய்ய விரும்பவில்லை. தங்கள் குடும்பத்தினருடன் வாழ்வதற்கே விரும்பினர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திவைத்த இந்;தத் திருமணங்களுக்கு மணப்பெண் வீட்டார் சார்பில் மணப்பெண்களை அழைத்து வந்து மணமேடை ஏற்றியவர்கள் அமைதிப்படையினர்தான் என்றால் நம்பவா போகின்றனர் புலிவிலங்குகள்.

1987 ஆகஸ்ட் மாதத்தில் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான திரு. குமரப்பாவும், திரு. புலேந்திரனும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்குச் சென்று வரவேண்டும் என்று விண்ணப்பித்திருந்தனர் அமைதிப்படையிடம். தரைமார்க்கமாகச் செல்வதற்கு பாதுகாப்புகள் அப்போது இல்லை. எனவே உலங்கு ஊர்தியில் இவர்களை அழைத்துச் சென்றுவர ஐ.பி.கே.எப். ஏற்பாடு செய்தது.

அதன்படி இந்த இருவரும் உலங்கு வானூர்தியில் மட்டக்களப்புக்குச் சென்றனர். அங்கே ஒருமணி நேரம் தங்கிவிட்டு மீண்டும் ஊர்தியில் ஏறும்போது ஒரு பெண்ணை அழைத்து வந்து ஏற்றினர். இராணுவக் கெலிகாப்ரரில் பெண்களை ஏற்றக் கூடாது என்று சட்டம் உள்ளது. பைலட் ஏற்றுவதற்கு மறுத்தார். குமரப்பா முடியாது ஏற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டும் என்று அடம்பிடித்தார். பைலட் ரேடியோவில் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டார். அவர்களும் பலருடன் ஆலோசித்துவிட்டு ஏற்றிக்கொண்டு வரும்படி பைலட்டுக்கு அனுமதி வழங்கினர். பின்னர் அதே கெலிகாப்ரர் திருமலைக்கு வந்தது. அங்கும் ஒரு பெண்ணை ஏற்றினார் புலேந்திரன். ஊர்தி யாழ்ப்பாணம் வந்தது. இரு நாட்கள் கழித்து அப்படி அழைத்துவரப்பட்ட பெண்களுக்கும் குமரப்பா, புலேந்திரனுக்கும் பிரபாகரன் தலைமையில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.

ஐ.பி.கே.எப். இவர்களுக்கு பெண் அழைக்கும் வேலையைக் கூட வெட்கப்படாமல் அவர்கள் சட்டத்தையும் மீறி செய்தனர்.

திருமணம் நடந்த ஒருமாதத்தில் அந்தப் போராளிகளை இறந்து போகும்படி அவர்களது தலைவர் விசம் கொடுத்து உத்தரவிடுகிறார்! எதற்காக? கொழும்புக்குக் கொண்டு சென்றால் அவர்களைச் சித்திரவதை செய்து விடுவார்கள். அவற்றை அந்தப் போராளிகள் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்களை அதிலிருந்து காப்பாற்ற தலைவர் கண்ட வழி மரணம்.

ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். எந்த மடையன் இப்படி ஓர் உத்தரவினைச் செயற்படுத்துவான்? தனது குழந்தைகள் இவ்விதம் அகப்பட்டால் எந்தப் பெற்றோரால் இந்த வழிதான் சிறந்த வழி என்று தங்கள் குழந்தைகளை இறந்து போகும்படி கூறுவாரா? சக தோழனை ஓர் தலைவன் காப்பாற்றுவானா? அல்லது இறந்து போ என்று கூறுவானா? யாரையும் எந்த நேரத்திலும் கைவிட்டுதான் லாபத்தைப் பார்ப்பார் இந்தத் தலைவர்.

இந்தப் 12 பேரும் விசம் கொடுத்துக் கொல்லப்பட்டதனால் புலிகளுக்குக் கிடைத்த லாபம் என்ன? தமிழர்களுக்குக் கிடைத்த லாபம் என்ன? விளலுக்கு இறைத்த உயிர்களானதா இல்லையா? இளம் வயதில் அவர்களது மனைவியர் விதவைகள் ஆக்கப்பட்டனரா இல்லையா? ஒரு தலைவர் தன் சகாக்களை அபாயத்திலிருந்து காப்பாற்றுவானா அல்லது எதிரி செய்ய வேண்டிய வேலையை இவரே செய்வாரா? தனது சகாக்களைக் காப்பற்ற முடியாதவரா தன் மக்களைக் காப்பாற்றப் போகிறார். அந்த இளைஞர்களை செத்துப் போகும்படி உத்தரவிட்டது மன்னிக்க முடியாத குற்றமாகும். இவை கொலை குற்றமாகும்.

சரி, தலைவருக்குத்தான் அறிவு இல்லை. அரசியல் ஆலோசகர், அரசியல் ஞானி, கலாநிதி, தத்துவ வித்தகர். விஸ்கி மாஸ்ரர் என்று பல பதவிகளை தன்னகத்தே வைத்திருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்குக் கூட சுய அறிவு இருக்கவில்லை. 12 பேரைக் கொலை செய்ய தூதுவனாக தானே சென்று, குப்பிகளைக் கொடுத்து மரண தண்டனை வழங்கிவிட்டு வந்து பின்னாளில் அதனைப் பெருமையாக வேறு சொல்லிக்கொண்டார். மகா மோசமான இந்தச் சம்பவத்தை உலகப் பிரசித்திப் பெற்ற சாதனையாக விபரித்தனர் இந்தக் கொலையாளிகள்.

அற்ப பிரச்சினைக்காக தங்கள் சக வீரர்களைப் பலி கொடுக்கும் இவர்கள் மக்களை எப்படி மதிப்பார்கள்? குமரப்பா, புலேந்திரன் போன்றோர் கொல்லப்பட்டதற்கு உள் இயக்க முரண்பாடே அல்லாமல், வேறெந்தக் காரணமும் இல்லை! தங்கள் நலனுக்காக எத்தனை ஆயிரம் பொதுமக்களையும் பலிகொடுக்கத் தயங்கமாட்டார்கள். அதுதான் நடந்தது முல்லைத்தீவு மாவட்டத்தில். இந்திய அமைதிப்படை கொலை செய்யவில்லை, கற்பழிக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை, புலி விலங்கு அங்கத்தினரும் கற்பழித்தவர்கள்தான். அவர்களுக்கு புலித் தலைவர்கள் தண்டனை வழங்கியுள்ளனர். செல்வாக்கு மிக்கவர்கள் தண்டிக்கப்படாமல் கண்டுகொள்ளாமல் விடபட்டனர். ஐ.பி.கே.எப். கற்பழித்துவிட்டது என்று பிரசாரம் செய்யப்பட்டது. தங்கள் அங்கத்தவர்களின் கற்பழிப்புகளை பிரசாரம் இல்லாமல் மறைக்கப்பட்டது. எனவே மேற்கண்ட பாடல் புலிகளுக்குத்தான் பெருத்தமானதே தவிர ஏனைய இயக்கத்தினருக்கு அல்ல! தேனிசை செல்லப்பா பாடிய பாடல் புலி நடந்துவந்த பாதையினைத் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

துணுக்காய் வதைமுகாமில் குழிகளுக்குள் வைக்கப்படும் ஏனைய இயக்க அங்கத்தினருக்கென்று தனியாக மூன்று விலங்குகள் பொறுப்பாக இருந்தனர். றோஸ், பூட்டோ, பாபு ஆகிய இந்த மூன்று பேரும்தான் குழி தோண்டி மனித வதைசெய்யும் நிபுணர்கள். அங்கிருக்கும் அனைத்துக் குழிகளையும் வெட்டியவர்கள் பிடித்துவரப்பட்ட கைதிகள்தான். இந்தக் குழிகளுக்குள் மொத்தம் எத்தனை பேர் வைக்கப்பட்டிருந்தனர் என்பது தெரியாது. எனது கணக்கின்படி ஏறக்குறைய முன்னூறு பேர் வரை இவ்விதம் குழிகளுக்குள் இருந்திருப்பார்கள்.

இந்த வதை முகாமில் வைக்கப்பட்டிருந்தவர்களில் ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள்தான் அதிகமாக இருந்தனர். ஈ.என்.டி.எல்.எப். தோழர்கள் மொத்தம் நூறுபேர் வரை இருந்தனர். இவர்களில் முக்கியமானவர்கள் குமார் (கொட்டடி), குகன் (யாழ்ப்பாணம்), விக்கி (கிளிநொச்சி), நியூற்றன் (பாசையூர்) பாப்பா (பாசையூர்), வேதநாயகம் (பாசையூர்) நிக்கான் (யாழ்ப்பாணம்) போன்றோர் முக்கியமானவர்கள். இவர்களில் விக்கியைத் தனிக் குழி ஒன்றில் வைத்திருந்தனர். புளொட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் முசல்குத்தியைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாக இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குழிகளில்தான் இருந்தனர்.

இப்படிக் குழிகளில் இருந்த பெரும்பாண்மையானவர்களை புலிவிலங்குகள் கொன்று விட்டனர். இவர்கள் அனைவரும் பலவிதமான கொடுமைகளை அனுபவித்தனர். நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு இந்தச் சித்திரவதைகள் இருந்தன. கல்வி, அறிவு, பழக்கவழக்கம், மனிதப்பண்பு, மனித உரிமை, நாகரீகம் போன்ற அனைத்தையும் அறியாத இந்தப் புலிவிலங்குகள் சிறைச்சாலை நடத்துகின்றனர். அகப்பட்ட அனைவருமே இவர்கள் பார்வைக்கு விலங்குகளாகத் தென்பட்டனர் என்றால் தவறில்லை.

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன, வாரம் முப்பது முதல் நாற்பது பேர்வரை புதியவர்களைப் பிடித்துவருவார்கள். இடநெருக்கடி ஏற்படும் போது, அதே அளவு சகோதரர்களை இரவு வேளை வெளியே அழைத்துச் செல்வார்கள். அவர்களை முளங்காவில் பகுதிக்கு அழைத்துச் சென்று கொன்று எரித்துவிடுவார்கள் என்று கூட இருந்தவர்கள் தெரிவித்தனர்.
ஒருநாள் இரவு 10மணியளவில் ஒருவரோடு ஒருவர் கதைத்துக் கொண்டிருந்தனர். புலி விலங்குகள் எல்லாரும் வெளியில் உலா வந்து கொண்டிருந்தனர். எனது பகுதியில் இருந்தவர்கள் கதைக்கும் சத்தம் அதிகரித்துக்கொண்டே போனது. திடீரென சிமெந்த் நிலத்தில் நன்கு காய்ந்த தடி ஒன்றினை ஓங்கி வீசி எறிந்தால் எழும் ஒலி ஒன்று கேட்டது. உடனே அனைவரினதும் கதைக்கும் சத்தம் நின்றது.

உள்ளே புலி சீருடை அணிந்த சராசரி உயரமான ஒருவர் வேகமாக வந்தார். அந்த வேளையில் நான் எழுந்து நின்று எனது சாரத்தை சரிசெய்து உடுத்தி அமர்வதற்குத் தயாரானேன். அனைவரும் அமர்ந்திருக்கையில் நான் மட்டும் எழுந்து நின்றது அவரை அவமதிப்பது போன்று தோன்றியதோ என்னவோ, அதே தடியை எடுத்துக்கொண்டு என்னை நோக்கி வந்தார். நான் அதற்குள் எனது இடத்தில் அமர்ந்து விட்டேன்.

வந்த வேகத்தில் அந்தத் தடியினால் என்னைத் தாறுமாறாக அடிக்க ஆரம்பித்தார். அந்தத் தடி நான்கு அடி நீளமானதாக இருந்தது. அடி தாங்கமுடியாமல் நிலத்தில் உருண்டேன். அருகில் இருந்தவர்கள் விலகினர். நான் உருளுவதைத் தடுப்பதற்காக மறுமுனைக்குத் தாவி மீண்டும் வயிறு முதுகு என்று கண்ணில் பட்ட இடமெல்லாம் அடித்தார். ஐந்து ஆறு நிமிடங்கள் வரை என்னை அடித்துவிட்டு இறுதியில் அந்தத் தடியின் முனையால் என் முதுகில் ஓங்கி ஓர் குத்து குத்திவிட்டு, “இங்க இருக்கும் எந்த நாயும் கதைக்கக் கூடாது” என்று மூச்சுவாங்கக் கத்திவிட்டு வெளியில் சென்றார். இவ்விதம் என்னைத் தாக்கியவர் வேறு யாருமல்ல, புன்னகை மன்னனும், அரசியல் செயலருமான சூனா. பானா. தமிழ்ச்செல்வன்தான்.

இவர் முதலில் கொலைகாரக் குழுவில்தான் இருந்தார். கால் பழுதுபட்ட பின்னர்தான் அரசியல் பிரிவுக்கு வந்து பலலிளிக்க ஆரம்பித்தார்.

தொடரும்