1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்!(பகுதி 4)

அங்கே இருந்த ஏனைய இயக்க அங்கத்தினருக்கும் புலி விலங்குகளுக்கும் தன்னை ஓர் பொல்லாத விலங்கு என்று காண்பிப்பதற்காக என்னை அப்படிப் பலமாக அடித்துத் துவைத்தார். என்னை அவருக்கு யார் என்றே தெரியாது. அன்றுதான் இந்தப் பகுதிக்கு வந்தவர். தன்னை ஓர் சூரப்புலியாகக் காண்பிக்க பிறரை வருத்தினார். எனது கையால் ஒரு அடிக்குத் தாங்கமாட்டார் அந்தப் பலிலிளிக்கும் விலங்கு. கைது செய்யப்பட்டிருக்கும் இயக்க அங்கத்தினரைப் பார்வையிட வந்தவராம் அன்று. தனது வீரத்தையும் காண்பிக்க வேண்டும் என்று அவர் எடுத்த முடிவுதான் இது. யுத்த நிறுத்த காலத்தில் இவர் நான்கு பஸ்களை உறவினர்கள் பெயரில் வாங்கி தொழில் நடத்திவந்தார். இவரது குழந்தை விளையாடுவதற்கு ஒன்றரை இலட்சம் ரூபாயில் லாப்ரொப் கம்யூட்டர் வேண்டி கொடுத்திருந்தார். சாதாரண புலிப் போராளி அங்கத்தினர் இதனைக் கண்டு வேதனை அடைந்தனர்.

புலிகளின் பெருந்தலைகள் எல்லோரும், சொகுசான வீடுகள், வாகனங்கள், ஆடம்பரப் பொருட்கள் என்று வன்னியிலும் ஐரோப்பியர் போன்று வாழ ஆரம்பித்தனர். இந்த வாழ்க்கையை முன்நின்று நடத்திக் காட்டியவர் தமிழ்ச்செல்வன்தான். இவரது அந்த இரக்கமற்ற கொடுந் தாக்குதலை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை. அவர் இறந்த போது பலர் கவிதைகள் பாடினர். இப்படியான கொடியவர்களும் நல்லவர் போல் உலகத்தை ஏமாற்றியுள்ளனர் என்று கண்டேன். இந்த அடிக்கும் அதே மருத்துவர் தயாபரன் வின்ரோஜன் தடவி எனக்கு ஆறுதல் கூறினார். தமிழ் செல்வன் இதற்கு முன்னரும் ஒரு தடவை இங்கு வந்து ஒரு பெடியனைப் போட்டு தாறுமாறாக அடித்துவிட்டுச் சென்றார். அவருக்கும் இந்தப் பகுதிக்கும் எந்தவிதச் சம்மந்தமும் இல்லை. இங்கு கைதிகளை மிகவும் சுதந்திரமாக விட்டுள்ளனர். தன்னிடம்; ஒப்படைத்தால் காலில் விலங்குபோட்டு இப்படி இருக்கவைத்திருக்க மாட்டேன், வெளவால் போல அனைவரையும் தலைகீழாகத் தொங்கவிட்டிருப்பேன் என்று கூறிச் சென்றார் என்று என்னிடம் கூறினார்.

இப்படியாக ஒருவாரம் கழிந்தது. ஒருநாள் இரவு ஒரு சக கைதிக்கு வயிறு வலி ஏற்பட்டது. காலை மாலை இருவேளை தவிர ஏனைய நேரங்களில் இயற்கை உபாதைகளைக் கழிக்க அவர்கள் அனுமதிப்பது கிடையாது. அந்தச் சகோதரன் வலியில் தான் கழிவறை செல்லவேண்டும், இங்கு சொப்பின் பைகிடையாது எனவே என்னை வெளியிலே கூட்டிச் செல்லுங்கள் என்று சத்தமிட்டார். காவல் விலங்கு அதற்குச் சம்மதிக்காமல் சத்தம் போட்டாமல் இரு! சத்தம் போட்டால் அடிவாங்குவாய் என்று கூறிச் சென்றார். இரவு அனைவரும் தூங்கிவிட்டோம். அந்தச் சகோதரன் அம்மண்டபத்தின் உள் ஓரத்தில் மலம் கழித்துவிட்டார்.

காலையில் புலி விலங்குகள் வந்தனர். யார் மலங்கழித்தது என்று கேட்டனர். பதில் சொல்ல யாரும் முன்வரவில்லை, உங்கள் அனைவருக்கும் இதற்காகத் தண்டனை உண்டு என்று கூறிவிட்டுச் சென்றனர். மாலை உணவு வழங்கப்பட்டப் பின்னர் அனைவரையும் எழுந்து நிற்கும்படி கூறினர் விலங்குகள். அனைவரும் எழுந்து நின்றோம். தலைக்கு மேலே கைகள் இரண்டையும் உயர்த்திக்கொண்டு நிற்கும்படி கூறினர்.

மாலை நான்கு முப்பது மணியளவில் இந்த உத்தரவைப் போட்டனர். ஒரு மணி இரண்டு மணி நேரமல்ல 16மணி நேரம் யாரும் கையைக் கீழே கொண்டுவரக்கூடாது. அருகில் இருக்கும் சுவரில், அல்லது தூணில் சாயக்கூடாது, பத்துக்கும் மேற்பட்ட புலி விலங்குகளை இதற்காகவே காவலுக்குப் போட்டனர். வலி தாங்காமல் கைகளைக் கீழே கொண்டு வந்தவர்களுக்கு அடிவிழுந்தது. 3-4 மணி நேரங்களுக்கு மேல் என்னால் தொடர்ந்து நிற்கமுடியவில்லை. எதிர் முனையில் றொலெக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் என்னைப் பார்த்து அழுதுகொண்டு நின்றார். இரவு 10மணியைக் கடந்ததும் ஏறக்குறைய 10பேருக்கு மேல் நிலத்தில் இருந்து விட்டனர். இதைப் பார்த்துவிட்ட புலிவிலங்குகள் ஓடிவந்தனர். நிலத்தில் இருந்தவர்களைத் தாக்கினர், எங்களைக் கொன்று விடுங்கள் என்று கத்தினார்கள் நிலத்தில் இருந்தவர்கள்.

இந்தக் கதறல்கள் எவற்றினையும் அவர்கள் காதில் வாங்கவில்லை. தொடர்ந்து அடித்து அவர்களை எழுந்து நிற்கவைத்தார்கள். எனது தோழ்கள் இரண்டும் வலியெடுத்து விறைத்துவிட்டது. கைகளை நேரே தூக்காமல் தலையின் மேல் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்துக்கொண்டேன். இதைபோன்று அனைவரும் வைத்திருந்தனர். உறக்கம் உடலைத் தள்ளாட வைத்தது. புலிவிலங்குகள் ஆள்மாறி ஆள்மாறி எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். சிலர் தள்ளாடி மற்றவர் மீது விழுந்தனர். இப்படியாக இரவு முடிந்தது.

காலையில் வழக்கம் போல் கடன் கழிக்க வரிசையாகச் சென்று முடித்துவிட்டு வந்தோம். இப்போது கூட விலங்குகள் திருப்தியடையவில்லை. மீண்டும் கைகளைத் தூக்கிக்கொண்டு நிற்கும்படி கூறினர். அவர்கள் உத்தரவுபடி கைகளை தலைக்கு மேலாக உயர்த்திக்கொண்டு நின்றோம். காலை 8.30 மணியளவில்தான் நிலத்தில் அமரும்படி கூறினர். அப்படி நிலத்தில் அமர்ந்தவர்கள் இருந்தபடியே உறங்கலாயினர். இதைக் கவனித்த விலங்குகள் மீண்டும் தடிகள் எடுத்து வந்து உறங்கியவர்களை அடிக்கத் தொடங்கினர்.

பகல் நேரத்தில் நித்திரை கொள்ளக்கூடாது கைதிகள் என்பது அவர்களது சட்டமாம். கொடுமைப்படுத்த வேண்டும் என்பது கொள்கையானால் அனைத்துமே சட்டம்தான்! மிருகவதை என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அது என்னவென்று தெரியாது. இந்தப் புலி விலங்குகளிடம் தான் அதன் உண்மைநிலையைக் கண்டேன். இப்படியான ஓர் தண்டனையைக் கண்டு பிடித்து நடைமுறைப்படுத்திய புலி விலங்கின் பெயர் ரவி என்பதாகும். இவர் செம்படை சலிமுக்கு அடுத்தப்டியான பதவியில் சில காலம் இருந்தார். பின்னர் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார் என அறிந்தேன்.

மீண்டும் பல நாட்கள் இதே போன்று பலதரப்பட்ட தாக்குதல்கள், சித்திரவதைகளுக்கிடையில் வழக்கம் போல் கே.டி. வந்து பலரது மூக்குகளை உடைத்துக் கொண்டிருந்தார். கே.டி. உள்ளே வரும்போது அங்கிருக்கும் சகோதரர்கள் தங்கள் தலைகளைக் கீழே சரித்துக்கொள்வார்கள். கே.டி. திரும்பி வெளியே செல்லும் வரை தலையை நிமிர்த்திப் பார்க்கவேமாட்டார்கள்.

ஒருநாள் நான் விசயம் தெரியாமல் கே.டி.யைப் பார்த்துவிட்டேன். சைகையால் வா என்று அழைத்தார். வேறு வழியில்லை, எழுந்து சென்றேன். அப்பையா அண்ணன் சொன்னது உடனே நினைவுக்கு வந்தது! எனது மூக்கை எப்படிப் பாதுகாப்பது என்று தெரியவில்லை! மூக்கைப் பாதுகாக்கப்புறப்பட்டால் உடல்ப் பாகங்கள் பழுதடையும், ஒரு தடவை வலிதானே! வருவது வரட்டும் என்று அந்த விலங்கின் முன் நின்றேன்.

தூசன வார்த்தைகள் பேசி தனக்குத் தானே கோபத்தை வரவழைத்து தனது உள்ளங்கையால் என் மூக்கின் மீது பலமாகக் குத்தினார். மூக்கு உடைந்து இரத்தம் கொட்டியது, போய் இரடா என்றார், தரை முழுவதும் இரத்தம் வடிய நான் மீண்டும் எனது இருப்பிடத்தில் இருந்தேன். இரத்தத்தைத் துடைக்க எந்தவித துணியும் கிடையாது. எனது சறத்தைக் கழற்றி இரத்தத்தைத் துடைத்தேன். மறுநாள் காலை கடன் கழித்த பின்னர்கூட அந்தச் சறத்தைக் கழுவ முடியவில்லை. ஐந்து நாட்கள் கழித்துத்தான் குளிப்பதற்கு அனுமதித்தனர். அன்றுதான் இரத்தக்கறை படிந்த சறத்தைக் கழுவினேன். வாரத்தில் இரண்டு மூன்று தடவை வந்து மூக்குடைக்கும் கே.டி. இப்போது தினமும் வர ஆரம்பித்தார். காலைக் கடன் கழித்துவிட்டு வரும் சகோதரர்களுக்கு வாசலில் நின்று கெட்டவார்த்தைகள் பேசி பெருத்த தடி ஒன்றினால் அடிப்பார். தொடர்ந்து ஒரு வாரமாக இந்தப் பணியை கே.டி. என்ற விலங்கு செய்து வந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எப். ஆதரவாளர் தர்மலிங்கம் என்பவர், வயது 45க்கு மேல் இருக்கும். வழக்கம் போல் காலைக்கடன் முடித்து வரும்போது கே.டி. வரிசையில் வருபவர்களுக்கு ஓர் தடிப்பான தடியினால் அடித்துக்கொண்டு நின்றார். தர்மலிங்கம் அவர்கள் வந்ததும் அவரை அடிக்கும் போது அவர் தனது இடது கைகளினால் தடுத்து விட்டார். கே.டி.க்கு கோபம் வந்துவிட்டது. தர்மலிங்கம் அவர்களைத் தள்ளிவிட்டார். கால்சங்கிலி தடுக்க அவர் கீழே விழந்தார். சற்று தள்ளி ஓர் மண்வெட்டி இருந்தது. அந்த மண்வெட்டியை எடுத்து பிடியை நிலத்தில் குத்திக் கழற்றினார். அந்தப் பிடியினால் தர்மலிங்கம் அவர்களைத் தாக்குவதற்கு ஆரம்பித்தார். முழங்கைக்குக் கீழ் உடைந்தது. அவர் மீது பட்ட ஒவ்வொரு அடியும் அருகில் நின்ற அனைவரையும் திகைக்க வைத்தது. புலி விலங்குகளும் இதனை தள்ளி நின்று ரசித்துக் கொண்டிருந்தனர்.

மறுநாள் இச்சிறையின் பொறுப்பாளர் சலீம் வந்தார். கே.டி.யை அழைத்து இனிமேல் இந்தப்பக்கம் வரக்கூடாது என்றும் யாரைக் கேட்டு அவரை அடித்தனீ என்றும், நீ இங்கு வரும்போதெல்லாம் இவர்களை அடிக்கிறாய் என்று ஏக வசனத்தில் திட்டி அனுப்பிவைத்தார். ஆனாலும் கே.டி. இந்த உத்தரவை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

ஒருவாரம் அந்தப்பக்கம் வராமல் இருந்தவர் பழையடி தனது கைவரிசையைக் காண்பித்துக் கொண்டுதான் இருந்தார். கே.டி.யின் சொந்த இடம் வட்டக்கச்சி, இவர் பலதரப்பட்ட ஒழுங்கீனங்களைச் செய்ததாகவும், புலி விலங்குகளின் கட்டுப்பாட்டையும் மீறி தன்னச்சையாகச் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு, புலி இயக்கத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டதாகவும் அறிந்தேன்.

நான் இந்த மில் சிறைக்கு வந்த போது இருந்த கைதிகளில் பாதியளவு குறைந்து அந்தக் குறைந்த அளவைப் புதியவர்களைக் கொண்டு வந்து நிரப்பியிருந்தனர். நான் வருவதற்கு முன்னர் ஏறக்குறைய 1500 பேர்வரையில் புலி விலங்குகள் கொலை செய்துவிட்டதாக அறிந்தேன். நான் வந்த பின்னரும் இதே அளவு சகோதரர்களை புலி விலங்குகள் கொன்றிருப்பார்கள். விடுதலை செய்யப்படுபவர்கள் பகல் நேரங்களில்தான் அழைத்துச் செல்லப்படுவார்கள். அப்படி நான் வந்த இவ்வளவு காலங்களிலும் பகல் நேரத்தில் அழைத்துச் சென்று விடுதலை செய்யப்பட்டவர்கள் இரண்டுபேர் மட்டுமே. நாட்கள் ஓடிக்கொண்டிருந்ன. எங்களுக்கு வெளியுலகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. செய்தித் தாள்கள் கிடையாது. வானொலி, ரி.வி எதுவும் கிடையாது. அவர்களது சித்திரவதை அவர்கள் கொடுக்கும் இரண்டு வேளை உணவு, அருகில் இருப்பவர்கள் சொல்லும் அவர்களது அனுபவங்கள், கால் விலங்கு இவைகள்தான் எங்களுடன் பிணைந்திருந்தன. நாங்கள் தினமும் பரிதாபப்படும் விடயம் அந்தக் குழிகளுக்குள் வாழும் சகோதரர்கள் பற்றியதுதான். தரையில் வைத்திருக்கும் எங்களுக்கே இவர்கள் இவ்வளவு கொடுமைகள் செய்திருக்கையில் அந்த குழிகளுக்குள் இருக்கும் இளைஞர்களுக்கு எப்படியான கொடுமைகளைச் செய்திருப்பார்கள் என்பது கற்பனைகூட செய்துபார்க்க முடியாது.

விடுதலை இயக்கங்களைச் சேர்ந்தவர்களை புலிவிலங்குகள் எதிரியாகக் கற்பனை செய்து பழிதீர்த்தார்கள். ஆனால் பொதுமக்களை இழுத்துவந்து எதற்காக பிற இயக்கங்களுக்கு உதவி செய்தாய் என்று கொடுமைப்படுத்தி கொலை செய்தது மனிதத் தன்மைக்கும் நியாயத்துக்கும் பொருத்தமில்லாதது.

என்னுடன் செட்டி என்றொரு சகோதரர் எனது பகுதியில் கால்விலங்குடன் பலதுயரங்களைச் சந்தித்து வந்தார். இவர் யாழ்ப்பாணம் கெனடி வீதியைச் சேர்ந்தவர். சிறந்த கடல் ஓட்டி, இவர் அனைத்து இயக்கங்களுக்கும் உதவிகள் பல செய்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கும், இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் இலங்கை இந்திய நேவிகளின் கண்களில் படாமல் படகு ஓட்டக்கூடியவர். ஆயிரக்கணக்கானவர்களை இந்தியாவுக்கு படகுகளில் ஏற்றி கரைசேர்த்துள்ளார். இறுதியாக ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்களையும் இந்தியாவில் இறக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கம் போல் பெட்டிசன் வர இவரை அழைத்து வந்து கொடுமைகள் பல செய்தனர். இவர்க்கு நான்கு குழந்தைகள்.

இவருக்கு இழைத்துவிட்ட கொடுமைகளை அவர் என்னிடம் விபரித்தார். ஒவ்வொரு சம்பவங்களையும் விபரிக்கும் போதும் அவரால் அழுகையை அடக்கமுடியவில்லை. எனது குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்று பல தடவை கண்ணீர் வடித்தார். உண்மையில் அவர் தியாக உணர்வு கொண்ட பாமரனாக இருந்தார்.

அவர் என்னிடத்தில் கேட்டார்! எதற்காக புலிகள் இப்படி எல்லாரையும் கொல்லினம்? எல்லாரும் தனிநாடு கேட்டுப் போராடினவர்கள்தானே! நான் எலலாருக்கும் உதவியிருக்கிறேன். எனக்கு இந்த இயக்கங்களுக்குள் உள்ள வித்தியாசங்கள் என்னவென்றே தெரியாது! யாழ்ப்பாணத்தில் எல்லாரும் எல்லாருக்கும் உதவி செய்தினம், நானும் அப்படித்தான் உதவிசெய்தென். கடல் ஓடுவது. எங்களுக்கு நாடு கிடைக்க என்னாலான உதவியைச் செய்தேன். எனக்குப் பெரிய படிப்பறிவு கிடையாது. உடல் உழைப்பை எங்கள் இனத்துக்காக வழங்கினேன். இதில் என்ன குறையைக் கண்டனர் இந்தப் புலிகள். நான் முன்பு நினைத்தேன் புலிகள் இயக்கத்தினர் படித்தவர்கள், பண்புள்ளவாகள் என்று என்னைப் பிடித்துவந்த பின்னர்தான் தெரிந்தது, படிப்பறிவு மட்டுமல்ல, நாகரீகமே தெரியாதவர்கள் என்று. அவ்வளவுக்கு இவர்கள் அரக்கர்களாக இருக்கின்றனர்.

இப்போதே இவர்கள் இப்படி என்றால் நாடுகிடைத்தால்! எனது குடும்பத்தையேஅழித்துவிடுவார்கள். நான் இல்லாமல் எனதுக் குடும்பத்தினர் உணவுக்கே கஸ்ரப்படுவார்கள். அவர்களுக்கு யார் உணவு கொடுப்பது? என்னைப் பார்ப்பதற்கு கண்டிப்பாக வந்திருப்பார்கள். இந்த மிருகங்கள் அவர்களைக் காட்டவே இல்லை. எனது மூத்த மகள் என்னைக் கொண்டு வந்த அன்றே புலிகளின் ஒப்பிசுக்கு முன்னால் நின்று சண்டை போட்டவள். தாயை விட என்னுடன்தான் பாசமாக இருப்பாள். நான் இல்லாமல் பள்ளிக்கூடம் கூட போயிருக்கமாட்டாள். எப்படியாவது அவளைப் பள்ளிக்கூடம் போகச் சொல்ல வேண்டும், இந்த விலங்குகளிடம் கேட்டேன், “ஒரு கடுதாசி போடவேனும் என்டு” ‘உண்ட சறத்தைக் கழட்டி கடுதாசி எழுது” என்று ஏசிவிட்டுச் சென்றார்கள். பிள்ளைப்பாசம், குடும்பப்பாசம் பற்றி இந்த மனித விலங்குகளுக்கு எப்படித் தெரியப்போகுது” என்று அழுதான் செட்டி!

இவர் தினம் தினம் தன் உடல் எடையை இழந்துவந்தார். அதிஸ்ரவசமாக இவர் ஒரு நாள் விடுவிக்கப்பட்டார். செட்டி வீடு சென்ற நான்கு மாதங்களில் இறந்துவிட்டார். புலிவிலங்குகளில் சித்திரவதை அவரது நுரையீரலைப் பாதித்திருந்தது. பல மருத்துவர்களைச் சந்தித்தும் முடியாமல் போய் இறந்தார். இவரது இறப்பைப் கண்ட இவரது மனைவி ரூத் மற்றும் குழந்தைகள் புலிகளை வாழ்த்தியிருப்பார்கள்!!

செட்டி எனக்குச் சொன்ன விடயங்கள் அப்பாவித்தனமாக இருந்தாலும் அதில் மறைந்திருக்கும் நியாயம் தமிழர்களைச் சிந்திக்கவைப்பவை! இயக்கங்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டன. அவர்களுக்குள் என்ன போட்டி என்றே மக்களுக்குத் தெரியாது. ஆனால் இயக்கங்களுக்கு உதவிய பொதுமக்களைச் சித்திரவதை செய்வதைத் தடுத்து நிறுத்துவது யார்? தமிழர்களை வழிநடத்த தமிழருக்கென்று நியாயமான தலைமை என்று இல்லாமல் போனதுதான் தமிழினத்தின் இன்றைய நிலைக்குக் காரணம் என்றே நினைக்கிறேன்.

சென்ற் நிகலஸ் றோட்டைச் சேர்ந்த ஜேக்கப் என்பவர் எனது பகுதிக்குள் இருந்தார். அவருக்கு 5 குழந்தைகள், வயது 45 முதல் ஐம்பது இருக்கும். அவரிடம் விசாரித்தேன். சொன்னார், தம்பி, எனது தெருவில் நான் நன்றாக இங்கிலிஸ் கதைப்பேன். ஐ.பி.கே.எப். வந்ததிலிருந்து எங்கள் பகுதிக்குள் வரும் போது என்னை அழைத்துத்தான் கதைப்பார்கள். காரணம் அவர்களுக்கு தமிழ் தெரியாமல் இருந்தது. ஊரில் உள்ளவர்கள்தான் எனக்கு ஆங்கிலம் தெரியும் என்று அழைத்து வந்தார்கள்.

ஊரில் இருப்பவர்களை சந்தேகத்தில் பிடித்துச் சென்றால் சம்பந்தப்பட்டவர்களுடன் சென்று உயர் அதிகாரிகளுடன் ஆங்கிலத்தில் கதைப்பேன். பின்னர் அந்த வட்டாரத்தில் யாரையாவது பிடித்தால் என்னிடம் வந்து கேட்பார்கள், ஜேக்கப் அண்ண, “ ஒருக்கா வந்து ஆமிக்காரரோட கதைச்சு எப்படியாவது என்ர பிள்ளையை எடுத்துத் தாங்கோ” என்று.

நானும் அவயன்ர காம்புக்குப் போய் பிடிபட்ட பிள்ளையைப் பற்றி நல்லவிதமாகச் சொல்லி அவர எனக்குக் குழந்தையில் இருந்து தெரியும், எந்தத் தப்பும் செய்யாது என்று பொய் சொல்லி கூட்டிக் கொண்டு வந்து விடுவேன். அப்படி முன்பின் பார்த்திராத பிள்ளையளை நான் கூட்டிக் கொண்டு வந்து விட்டதுக்கு இப்ப இவையள் கேக்கினம், “உன்ர பிள்ளையை உன்ர மனிசிய ஐ.பி.கே.எப். க்கு கூட்டிக் குடுத்தியா” என்று. எந்த மனச்சாட்சியை வைத்து இந்த மாதிரி கேக்கினம் என்று தெரியவில்லை!

நான் எந்த இயக்கத்துக்கும் ஆதரவு கொடுத்ததில்லை. ஊர்ச்சனம்தான் ஐ.பி.கே.எப். ஐ இழுத்து வந்து எனது வாசலில் நிறுத்தினவையள். புலியின் ஆதரவாளர்கள்தான் அவர்களுடன் கதையுங்கோ என்று சொல்லி என்னை இப்படி மாட்டிவிட்டவர்கள். இங்கிலிஸ் படிச்சபடியால் வந்த வினை!

எனது நிலையை எடுத்துச் சொல்வதற்கு, அதனை செவிமத்து கேட்பதற்கு இவர்களில் யாரும் படித்தவர்கள் இல்லை. விசாரணை அதிகாரிகள் என்று வந்தவர்கள் கொழும்புச் சிறையில் தமிழ் பெடியங்களைக் கொன்ற சிங்களக் கைதிகள் போல இருக்கிறார்கள். விறகு கட்டையால் அடிக்கிறார்கள். கொழும்பில் விறகுகட்டை, அலவாங்குகளால்தான் தமிழ் கைதிகளை அடிச்சுக் கொன்றவர்கள் என்று கேள்விப்பட்டனான்.

ஒரு புலித் தம்பி கேட்டார், நீ எத்தனை புலிகளைக் காட்டிக் குடுத்தனீ? என்று. ஊரில் இருந்த புலிகளின் ஆதரவாளர்கள் ஏனைய புலி ஆதரவாளர்களை தங்களது பகையின் மூலம் காட்டிக் கொடுத்தார்கள். நான் ஐ.பி.கே.எப். பிடம் போய், தவறாக போட்டியில் சொல்லியிருக்கினம் என்று கூறி பிடித்து வைத்திருந்த புலி ஆதரவாளர்களை எடுத்து வந்தனான்.

இவையள் என்னவென்றால் ஐ.பி.கே.எப். போட உனக்கு என்ன வேலை? என்று கேட்டு கொடுமைப் படுத்துகின்றனர். இங்க பாருங்க தம்பி எனது அலகை என்று காண்பித்தார். மல்லி என்ற கொடிய மிருகம் தனது முரட்டுக் கையால் குத்தினதால் எனது அலகு ஒரு பக்கத்துக்கு இழுத்துக் கொண்டுவிட்டது என்று கூறி தனது இடது பக்கத்து தாடையைக் காண்பித்தார்.

உண்மையில் நான் அவரைப் பார்க்கும் போது அவரது தாடை வலது பக்கம் சரிந்து பக்கவாட்டாக இழுத்துக் கொண்டு இருந்தது. இயற்கையிலேயே அவருக்கு இப்படித்தான் கீழ்வாய்ப் பகுதி அமைந்துள்ளது போலும் என்று நினைத்திருந்தேன். மண்ட மல்லியின் வேலைதான் இதுவென்று சொன்னபோதுதான் அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

2005ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அவரது வீட்டுக்குச் சென்றேன். புலி விலங்குகளிடமிருந்து விடுபட்ட பின்னர் நான் அவரைப் பார்த்ததில்லை. ஒரு நாள் அவர் பற்றி நினைவு வந்தது. பார்த்து வரலாம் என்று தோன்றியது. பார்த்தேன், அவரது வாய் முற்றாகக் கோணலாகி கதைபேச்சு எதுவுமற்றவராகி, கைகளால் ஏதோ சொல்லவந்தார். பின்னர் அழுவதற்கு ஆரம்பித்து விட்டார். அவரது மூத்தமகள் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர். முப்பத்தைந்து வயதை தாண்டியிருந்தார். ஏனைய பிள்ளைகள் திருமணமாகிச் சென்றுவிட்டனர்.

அவர் எதையோ சொல்ல பல தடவைகள் முயற்சித்தார். அவரால் முடியவில்லை. ஆறுதல் கூறி புறப்படும் போது என்னைக் கட்டித்தழுவி அழுதார். அவசரமாக ஓர் வெள்ளைத் தாளை எடுத்து எழுதினார். “புலிகளோட கவனம், அவர்கள் மனிதர்கள் அல்ல! கொடிய சாத்தான்கள்! எங்களுக்கு நடந்த கொடுமைகள் உலகத்துக்குத் தெரியாது, அப்படி உலகத்துக்குத் தெரிந்தால் தமிழருக்குத்தான் அவமானம். நான் மறந்துவிட்டேன். நீயும் மறந்துவிடு! ஜேசு உன்னைக் காப்பாற்றுவார். கடவுளை வணங்கு! இப்படி எழுதிக் காண்பித்தார். அந்தத் தாளை என்னுடனேயே எடுத்து வந்தேன். எவ்வளவு பெருந்தன்மை ஜேக்கோப் அவர்களுக்கு, தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை பழிவாங்க நினைக்காமல், மறந்துவிடு என்றும், தமிழர்களுககு இதனால் அவமானம் என்றும் சிந்திக்கும் அளவுக்கு ஓர் இனப் பற்றுக் கொண்ட மனிதரை இந்தப் புலிவிலங்குகள் விலங்கிட்டுக் கொடுமைப் படுத்தியுள்ளனர்.

தங்களைத் தவிர பிற இயக்கங்களையும், பொதுமக்களையும் புலிகள் எதிரிகளாகத்தான் பார்த்தனர். காரணம் சந்தேகம். குடும்பங்களுக்குள் சந்தேகம் தோன்றினால் அந்தக் குடும்பமே அழிந்துவிடும். அதே போன்றுதான் ஓர் இனத்தவருள் சந்தேகம் தோன்றினால் அந்த இனமே அழிந்துவிடும். தமிழருக்கு இது பொருந்தும். தீராத சந்தேகம் தீவிர பகையானது! ஜாக்கோப் அவர்களால் பலர் காப்பாற்றப்பட்டனர், ஜாக்கோப்பைக் காப்பாற்ற யாருமில்லை! விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை!

புலிகள் பிடித்துவைத்திருந்த தமிழ் இளைஞர்களில் ஏறக்குறைய மூவாயிரத்துக்கும் அதிகமானவர்களை கொலை செய்தார்கள். பிடித்து வராமல் அந்த அந்த ஊர்களில் வைத்தே மூவாயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களைக் கொன்றார்கள். மேலும் இயக்க ஆதரவாளர்கள், ஐ.பி.கே.எப். இருந்த போது அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்று பொதுமக்களில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் வரை கொலை செய்தார்கள். ஐ.பி.கே.எப். வெளியேறிய 1990ஆம் ஆண்டில் தமிழ் இளைஞர்கள் மொத்தமாக ஒன்பததினாயிரம் பேர் வரை புலி விலங்குகளால் கொல்லப்பட்டார்கள்.

தமிழர்களைக் கொலை செய்வது புலிகளுக்கு பிறப்பரிமையாக்கப்பட்டது. 2009;ல் தமிழர்களை கூண்டோடு அழிப்பது சிங்கள இனத்துக்குப் பிறப்புரிமையாக்கப்பட்டது. எனது ஊரில் நடந்த ஓர் நிகழ்வைச் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். 1982ஆம் ஆண்டு நடந்தது.

எனது ஊரில் ஆசீர்வாமும் அந்தோனிப்பிள்ளையும் உறவினர்கள். ஓத்த வயதுடைய இவர்களது குழந்தைகள் ஆறாவது ஏழாவது வகுப்புகளில் படித்து வந்தனர். இந்த இரு மானவர்களுக்கிடையில் ஒரு நாள் கைகலப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் வீடு வந்து சேர்ந்தது. ஆசீர்வாதமும் அந்தோனிப்பிள்ளையும் நேருக்கு நேர் சண்டையிட்டுக்கொண்டனர். இரண்டு பேருக்குமேi முகங்களில் காயம். இரண்டு பேருமே சவால் விட்டுக்கொண்டனர். உன்னை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன். இதுதான் இவரது சவாலும்! ஆசீர்வாதம் தனது தரப்பில் பத்துப் பேரைத் திரட்டினார். இதைக் கேள்விப்பட்ட அந்தோனிப்பிள்ளை பதிலாக அவரும் பத்துப்பேரைத் திரட்டினார். அவரும் விருந்து வைத்தார். இவரும் விருந்து வைத்தார் அடியாட்களுக்கு. இரண்டு நாட்கள் விருந்துக்குப் பின்னர் ஞாயிறு மாலை அந்தோனிப்பிள்ளையின் வீடு நோட்டமிடப்பட்டது. அந்தோனிப்பிள்ளை அலேர்ட் ஆனார். அவரது அடியாட்களும் வந்து சேர்ந்தனர். தடிகள் கத்திகளுடன் மோதிக்கொண்டனர். யாரும் இறந்துவிட வில்லை. ஆனால் பயங்கரக் காயம்.

இரண்டு பகுதியினரும் ஆளுக்கொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆசீர்வாதத்தின் மனைவியிடமிருந்த தாலிக்கொடி காப்புச் சங்சகிலி எல்லாம் அடவு கடைக்கும், விற்பனைக்கும் சென்றன. அதேபோல் அந்தோனிப்பிள்ளையின் நகைகளும் விற்பனைக்குச் சென்றன. இது மானப்பிரச்சினை, கழட்டடி தாலியை என்றுதான் நகைகள் கழற்றப்பட்டன. முதலில் பத்துப் பத்துப் பேருடன் ஆரம்பமான இந்தப் பகை இப்போது ஒவ்வொருப் பகுதியிலும்; ஐம்பது பேராகிவிட்டது.

தொடரும்