முதல்வர் விடயம் புகையா ? பனிப்புகாரா ?

(மாதவன் சஞ்சயன்)

வடக்கின் முதல்வர் அடுத்தடுத்து விடும் அறிக்கைகள் சில விடயங்களை கூறாமல் கூறுகிறது. மிகவும் எதிர் பார்க்கையுடன் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சம்மந்தர் தன் ஆளுமை மூலம் கொண்டுவந்த விக்னேஸ்வரன் பதவி ஏற்பின் போதே ஒற்றுமைக்கு சவாலானார். முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல அவரது தொடர் நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு வழிவிட்டது. நாளுக்கு நாள் அவர் அன்னியப்பட தொடங்கினார். ஆரம்பத்தில் அவருக்கு அரணாக இருந்தவர்களை கூட விலக செய்யும் செயலை அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் செய்தார். தான் சார்ந்த கூட்டமைப்பை அமோக வெற்றி பெற செய்ய வேண்டிய தார்மீக கடமையில் இருந்து அவர் தவறினார். தான் நடுநிலை வகிப்பதாக கூறியது மறைமுகமாக கஜேந்திரகுமாரின் வெற்றியை எதிர்பார்த்தே. கராணம் சுமந்திரன் தோற்க்க வேண்டும் அல்லது வென்றாலும் சும்ந்திரனுக்கு குடைச்சல் கொடுக்க ஒருவர் வேண்டும் என்பதே அவர் விருப்பு.

விளைவு முதல்வர் வழி தொடர்ந்தவர் வாக்குகளால் கஜன் 5% வாக்கு பெற்று கட்டுப்பணத்தை காப்பாற்றினார். அதனால் கூட்டாமைப்புக்கு மேலதிகமாக கிடைக்கவேண்டிய ஆசனத்தை விஜயகலாவிடம் இழந்தது. முதல்வர் செயலால் குழம்பிய 1 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர் பகிஸ்கரித்ததால் மேலும் ஒரு ஆசனத்தை டக்ளசிடம் இழந்தது. மருதனா மடத்தில் சம்மந்தர் மிகுந்த நம்பிக்கையுடன் 7ம் எமக்கே என கூறியதை கிடைக்காமல் செய்தது அவர் நம்பி கூட்டிவந்த முதல்வர்தான்.

நிர்வாகத்துக்கு என கூட்டிவந்தவர் அரசியல் செய்யப் புறப்பட்டு விட்டார் என அவர் மீது குற்றச்சாட்டுக்கள் குவிகின்றன. 13வது திருத்தத்தில் உள்ளதை சட்டப்படி பெற்றுத் தருவார் என கூறியே முன்னாள் நீதிபதிக்கு செங்கம்பளம் விரிக்கப்பட்டது. வந்த வேலையே விட்டு அரசியல் பேசுவதும் தான் சார்ந்த அமைப்பையே மறைமுகமாக வசை பாடுவதும் அவரது வடிக்கையாகிவிட்டது. மாகாண நிர்வாகத்தை நடத்த மத்தியுடன் அதுவும் பிரதமருடன் முரண் படுவதால் பலன் கிடைக்குமா என பாமரனே கேட்கிறான்.

தன் செயற் திறன் இல்லாமையை மறைக்கவே அவர் அடிக்கடி தீர்மானங்களை போடுவதாக, கூட இருப்பவர்களே குறைப்படும் நிலை. எதிர்க் கட்சி தலைவர் கேட்கும் ஆதாரத்துடனான கேள்விகள் ஒன்றுக்கு கூட அவர் நேரடியான பதிலை இதுவரை கூறியதாக ஹன்சாட்டில் பதிவில்லை. அதிகாரிகளை சரியாக வழி நடத்தாமல் அவர்கள் வழியில் இவர் நடப்பதால் இத்தனை வருடங்கள் ஆகியும் எந்த மாற்றமும் இல்லை இது வெறும் கூடிக் கலையும் சபை எனும் விமர்சனம் தொடங்கிவிட்டது.

கடந்த தேர்தல் காலத்தில் அவர் போட்ட திட்டம் பிழைத்து அவர் மீது குற்றச்சாட்டு பகிரங்கமாக ஒலிக்க தொடங்கியதும் தன்னிலையை தக்க வைக்க உள்ளே எரிந்த நெருப்பில் இருந்து வந்த புகையை பனிப்புகார் என அறிக்கை விடுகிறார். மாவை வவுனியாவில் வைத்த பகிரங்க குற்ற சாட்டுக்கு மறுப்போ விளக்கமோ தராது தான் மாட்டக்ளப்பில் நீதிபதியாக இருந்தபோது மாவையையும் காசி ஆனந்தனையும் விடுதலை செய்ததாக கூறி வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு 2 கொட்டப்பாக்கு என்கிறார்.

அன்று முதல்வர் ஆனதும் தமிழ் நாட்டில் இருப்பவர்கள் எமது விடயத்தில் தலையிட வேண்டாம் என பேட்டியளிக்க, இவரால் விடுவிக்கபட்டதாக இவரே கூறும் காசி ஆனந்தன் விக்னேஸ்வரன் வெளியில் (கொழும்பில்) இருந்து புடுங்கி நட்ட நாத்து அவருக்கு மண் வாசனை கிடையாது என திட்டித் தீர்த்ததை யு டியூபில் பார்க்கலாம். இன்று முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் சர்வதேச விசாரணை கேட்டு பிரேரணை நிறைவேற்ற அதில் தானும் குளிர்காய்கிறார் காலம் கடந்து ஞானம் பெற்ற வடக்கின் முதல்வர்.

அண்மையில் கொழும்பில் நடந்த தமிழரசு கட்சி கூட்டத்தில நடந்தவை திரிபுபடுத்தப்பட்டே வெளிவந்தன. முதல்வர் மீது யாரும் கரிசனை காட்டவில்லை. ஆனால் சூழ்நிலை கருதி பொறுமை காக்கும்படி ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. பேராசிரியர் சிற்றம்பலம் அண்மையில் வரும் உள்ளூர்ராட்சி தேர்தலை கவனத்தில் கொள்ளும்படி தான் கூறினார். மக்கள் மத்தியில் கட்சிக்குள் குழப்பம் என்ற எண்ணம் வந்துவிட கூடாது அதை காத்திருக்கும் பயனாளிகளான கஜேந்திரன் கூட்டம் பாவிக்க கூடாது என்பது சிறீதரன் நிலைப்பாடு.

பிரபாகரன் மறைவின் பின் எதனையும் நிதானமாக முன் நகர்த்தும் சூழ்நிலையில் சுயமாக செயல்படும் சம்மந்தரிடம் விக்னேஸ்வரன் விடயம், அதனால் தான் பாரப்படுத்தப்பட்டது. சம்மந்தர் கொடுத்த பேதி மாத்திரை நன்றாக வேலை செய்யத் தொடங்கி அடுத்தடுத்து அறிக்கைகள் விக்னேஸ்வரனிடம் இருந்து வெளி வருகிறது. எமக்குள் பிரச்சனை இல்லை. வீணே கோழ் மூட்டி பத்த வைக்கவேண்டாம். உங்களுக்கு தெரிவது புகை அல்ல அது பனிப்புகார் என பூசி மொழுகுகிறார். செக்ஸ் சாமியார் திருச்சி விராலிமலை பிரேமானந்தா அவரை ஆசீர்வதிக்கட்டும்.

(மாதவன் சஞ்சயன்)