காசியில் ‘புனித’ கங்கை!

  • ஒரு அனுபவப் பதிவு
    நம்மில் பலருக்கு இந்தியாவின் கங்கை நதி என்றால் புனித நதி என்ற நினைப்பும், அதன் காரணமாக அது ஒரு வணக்கத்துக்குரிய நதி என்ற எண்ணமும் எழும். ஆம், உண்மையில் கங்கை, அவள் ஊற்றெடுக்கும் போது புனிதமாகத்தான் தனது பயணத்தை ஆரம்பிக்கிறாள். ஆனால், பின்னர் அவள் சுமார் 3,200 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் போது எப்படித் தன்னை வணங்கும் மனிதர்களால் மாசுபடுத்தப்படுகிறாள் என்பதை தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் இந்த அனுபவப்பதிவு எடுத்துக் காட்டுகிறது.
  • 2014 கிறிஸ்து பிறப்பையொட்டி நான்கு நாட்கள் காசியில் இருந்தேன். காலையும் மாலையும் கங்கைக் கரைக்குச் சென்றேன்.
    எட்டு டிகிரி குளிரிலும் ஒருவித பரவசத்தில் இருந்தபோது, அண்ணா சௌந்தர் வல்லத்தரசு அவர்களுடன் பேசினேன்.
    ‘ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ‘அரிச்சந்திரா காட்’க்குப் போயி கங்கையைப் பார்த்துக்கிட்டு கொஞ்ச நேரம் சும்மா உட்காருங்க!’ என்றார். இரவு பதினொரு மணிக்கு மேல் மிதி ரிக்ஸா கிடைத்தது. மேட்டில் இறங்கி நடந்து கங்கைக்கரை அடைந்தோம்.
    எட்டு, பத்துப் பேர் எரிந்து கொண்டிருந்தனர். சற்று உயரமாக இருந்த மேடையில் நாலைந்து பேர் அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்தனர். கஞ்சா புகையாக இருக்கலாம். எரியும் சடலங்களின் சிதையைச் சீர்பார்த்துக் கொண்டிருந்தனர் ஓரிருவர். ஒரு சிதையின் இரு கால்களும் எரி நெருப்புக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. பின்னர் கங்கையின் மச்சங்களுக்கு விருந்தாகும் போலும்.
    ஊரில் சுடுகாட்டில் பிணமொன்று எரிந்தால் சுற்று வட்டாரம் நாற்றம் உணரும். எட்டு, பத்து பிணம் எரிந்தால் எவ்வளவு நாற்றம் வரவேண்டும்? நாற்றத்தை நாசி அறியவில்லை. காசி பற்றிய நம்பிக்கைகளில் ஒன்று அது. நம்மூர் பரோட்டாக்கடை அடுப்புத் தீ போல, எந்நேரமும் பத்துப் பன்னிரண்டு எரியும் போலும்! அடுத்தடுத்த நாட்களில் வாடகைக் கார்களின் டாப்பில், வண்ண ஜிகினாத் துணிகளில் பொதியப்பட்ட பிணங்கள் கட்டப்பட்டு, அரிச்சந்திரா காட்டுக்கு விரைவதைக் கண்ணுற்றேன்.
    மிக அசுத்தமாகக் கிடந்தது கங்கை அந்தக் கட்டத்தில். அந்தக் கட்டத்தில் பாரிக்கர் சொன்னார், ‘கியா ஜிந்தகி ஹை சாப்!’ என்று. எனக்குள்ளும் பற்றிப் படர்ந்தது அந்த விரக்தி. மனித வாழ்க்கை என்பது இவ்வளவுதானா இறுதியில்? எதற்கு வாரிக் கோரிக் குவிக்கிறார்கள் ஆயிரமாயிரம் கோடிகள்? ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே!’ என்றார் பட்டினத்துப் பிள்ளை.
    எத்தனையோ இழவுகளுக்குப் போயிருக்கிறேன். பல ஊர் சுடுகாடுகளைப் பார்த்திருக்கிறேன். சுடுகாட்டு வழியில் இரவென்றும் பகலென்றும் பாராமல் அலைந்திருக்கிறேன். ஆனால் நள்ளிரவில், கடுங்குளிரில் கங்கையின் சாந்நித்தியத்தில், எரிந்து கொண்டிருக்கும் சடலங்களை, வந்துகொண்டிருக்கும் பிணங்களை, கங்கைக்குள் சென்றுகொண்டிருக்கும் எச்சங்களைக் கண்டுகொண்டிருந்தபோது மனதில் அச்சமோ, பீதியோ இல்லை. என்றாலும் வெறுமை வந்து என்னைக் கௌவிக்கொண்டது.