முற்றத்தில் மூன்று கல்லு வைத்து….. புது வருடத்தை கொண்டாடுவோம்

(சாகரன்)

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என்றும் என் இனிய உறவுகளே. தமிழரும் சிங்களவரும் இலங்கையில் ஒரே நாளில் கொண்டாடும் கொண்டாட்டமாக இருப்பது இந்த புதுவருட கொண்டாட்டம்தான்.

இணைந்து ஒருமித்து சாராம்சம்தில் ஓரே மாதிரியாக கொண்டாடும் இந்த புத்தாண்டு இலஙகையில் வாழும் இரு மொழி பேசும் மக்களும் சகோதரர்களாக வாழ்வதற்குரிய அடையாளத்தையும் ஒரே மூல வேரையும் கொண்டிருப்பதாக எம்மால் உணரப்பட்டால் இலங்கையில் நான் பெரிது நீ சிறிது என்ற இன சமத்துவம் அற்ற நிலமை ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் குறைவாக இருந்திருக்குமோ என்ற எமது நியாயமான ஆதங்கத்தை இப் புத்தாண்டில் முன்வைக்கின்றேன்.

இப்படியான ஒரு நிலமை இருக்குமாயின் பேரினவாதம் என்றும் குறும் தேசியவாதம் என்றும் இரு பெரும் முரண்பாடுகளும் இதற்கு இடையில் இலங்கையராக தமிழராக மலையகத் தமிழராக தம்மை அடையாளப்படுத்தும் எம்மில் ஒருவாராக இருப்பவர்களும் மொழியால் ஒன்றாகவும் மத நம்பிக்கை கலாச்சார விழுமியங்களால் வேறுபட்டாலும் பலவிடயங்களில் இணைந்தும் பிணைந்தும் வாழும் முஸ்லீம் சகோதரர்கள் என்று நாம் எல்லோரும் சகோதரத்துவமாக வாழ முடியும் என்ற அவா இயல்பானதுதானே.

கடந்த பல வருடங்களாக இலங்கையில் நடைபெற்ற… நடைபெறுகின்ற முரண்பாட்டு நிமைகளும் கலவரங்களும் ஏன் யுத்தமும் சகோதரத்துவமாக வாழ்வதற்குரிய நம்பிக்கைகளை உடைத்தெறிந்துவிட்டன என்ற குரல்களில் உள்ள விடயங்களை கருத்தில் எடுக்காமலும் இல்லை. இதனையும் தாண்டி ஒரு இணைந்து வாழும் சகோதரத்துவத்தை இந்தப் புத்தாண்டில் தேடுவது சிறப்பாக அமையும் என்ற எதிர்பார்பில் உள்ள நியாயத் தன்மையை நாம் உணர முற்படுவது பிழையாகுமா…?

ஆனாலும் ஒன்றாக கொண்டாடும் இந்தப் புதுவருடக் பொதுக் கொண்டாட்டம் ஏனைய வியடங்களிலும் ஒன்றாகவும் அதே வேளை தனித்துவமாக வாழ்ந்தாலும் ஒற்றுமையாக ஒன்றாக வாழ்வதற்குரிய அடித்தளங்களை உருவாக்க உதவாதா என்ற நிலமைகளை நாம் யோசிக்க வேண்டும்.

ஒற்றுமையே பலம் அது எமக்குள் மட்டும் அல்ல எமக்கு அப்பாலும் என்று மனித குலம் சித்தித்து வாழ்ந்த… செயற்பட்ட.. வாழ்வுதான் உயிரினங்களில் மனித குலம் இன்று வரை உயிர்பித்திருப்பதற்கு ஆதாரமாக இருக்கின்றது என்பது உணரப்பட வேண்டும்.

நாம் வாழும் சூழலில் தமிழ் சூழலில் வளவும் வீடும் என்று வாழ்ந்த வளவு வாழ்க்கையில் என் தந்தையரை நான் அதிகம் நினைவு கூரும் நாளாக இந்த சித்திரைப் புது வருடப்பிறப்பு இருக்கின்றது. இதற்கு வலுவான காரண இனிமைகள் உள்ளன. சரியானது அல்ல என்றாலும் வருடம் பூராக அடுப்படிப் புகையிற்குள் பெண்கள் மூழ்கிக் கிடக்க வேண்டும் என்ற தலைமுறை வாழ்வை பார்த்தவர்கள் நாம்.

அப்படியான தாய் தந்தையரை பலரைப போலவும் கொண்டிருந்த நான் தைப் பொங்கல் சித்திரைப் பொங்கல் என்ற இரு பொங்கல் நாட்களில் முழுச் சமையலையும் எனது தந்தையார் (பல வீடுகளிலும் அவ்வாறே) பொறுப்பெடுத்து செய்வார்.அவர் சமைக்கும் இவ் இரு நாட்களில் ஒன்று தான் சித்தரை வருடப் பிறப்பு.

அதுவும் அடுப்படியிற்குள் அந்த புகையிற்குள் தம்மை உள்படுத்திக் கொள்ளாமல் வளவிற்குள்… முற்றத்தில்… வீட்டிற்கு முன்னிலையில் மூன்று கல்லு வைத்து பெரிய பானை வைத்து வெண் பொங்கல் பொங்கும் அழகோ. அழகு சுவையைப் பற்றி சொல்லி மாழாது. சக்கரை பொங்கலை விட வெண் பொங்கல்தான் சுவை. இதற்குள் ஒரு வாழ்வியலும் உண்டு. இதுபற்றி வேறு ஒருதளத்தில் பேசுகின்றேன்.

வெண் பொங்கலுடன் இணைத்து ருசித்திட சாப்பிட கூடவே கத்தரிக்காய் வெள்ளைக் கறி உருளைக் கிழங்கு உறைப்புக் கறி பாசிப் பயறு இல் பருப்புக் கறி. கூடவே அதிக எண்ணை சேராத ஒன்று இரண்டு பொரியல். வடை மோதம் என்ற அளவில் எல்லாம் இருக்கும். இவை அனைத்தையும் தரையில் அமர்ந்து வாழை இலையில் பரிமாறி ஒன்றாக உண்ணும் அந்த சுகந்தம் சொல்லி மாளாது.

இதற்குள் எமக்கு சிலிப் பூட்டும் உறவுகள் அருகில் ‘மாமி…. மாமா…’ என்றழைத்து வரும் மச்சின உறவுகள் உடன் உட்காந்து உண்ணும் வருடப்பிறப்புகள் மறக்க முடியாதவை.காலையிலேயே களை கட்டும்

இந்த பொங்கல். ‘சிவ’ தொண்டனாக மருத்து நீர் வைத்து முழுகி திரு நீற்றுப் பட்டை நெற்றியிலும் மார்பிலும் இட்டு வெள்ளை வெட்டி கட்டி அந்த குச்சியான உடலை காட்டியபடி வீட்டு மலர் தோட்டத்தில் மலர்கள் புடுங்கி…. அதிகம் முல்லை மல்லிகை செவ்வரத்தை சாமிப் படங்களை துடைத்து விளக்குளை மினுக்கி சந்தனம் ஊற வைத்து பதமாக குழம்பாக குழைத்து மாவிலை தோரணை என்று தந்தையர் விரும்பும் சிறுவனாக ஆரம்பித்து பல்கலைக் கழக கடவுள் நம்பியையற்ற கம்யூனிஸ்ட்டாக இருந்தவரை இதுவே நடைமுறை.

தந்தையிரின் ‘விருப்ப” தனையனாக அவரின் நம்பிக்கைகளுக்கு மறுப்பு சொல்லாமல் என் நம்பிக்கைகளையும் கைவிடாமல் செயற்பட்ட ஒவ்வொரு வருடமும் என் தந்தையருக்காக நினைவு கூரும் ஆடி அமாவாசையை விட சித்திர வருடப்பிறப்பு என் கண்முன்னே என் தந்தையரை நிறுத்தியதில் அதிகம் மகிழ்நதே இருக்கின்றேன் தற்போதும்.என் தந்தையிரின் நினைவுகள், இனிமைகளுடன் இரு இனங்களும் இணைந்து கொண்டாடும் இந்த புது வருடப்பிறப்பை நம்பிக்கையுடன் கொண்டாடுவோம். கொரனா என்ற பேரிடர் இந்த முற்றத்து மூன்று கல் பொங்கலுக்கு தடை போட முடியாதுதானே

வறுமையினால் வேறு வசதிக் குறைவினால் வாய்புகள் குறைவாக உள்ளவர்களுக்கு முடிந்தவர்கள் மனமுள்ளவர்கள் அவர்களுக்கான வாய்ப்புகளை வசதிகளை இந் நாளில் அவர்களிடம் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றதே என்ற கூனிக் குறுகல் அவர்களுக்கு ஏற்படா வண்ணம் அன்புடன் பரிசளித்து கொண்டாடுவோம் இனிதே.

வளவு அற்ற வாழ்க்கையும், குளிர் பிரதேசத்து புலம் பெயர் அவலங்களும் சதா பரபரப்பாக ஓடிக் கொணடிருக்கும் தேடல்களும் முற்றத்தில் மூன்று கல் வைக்காமல் வீட்டிற்குள் மின்சார எரிவாயு அடுப்பில் பொங்கும் பொங்கல் ஒன்லைன் இல் சாப்பாடு ஓடர் பண்ணி சாப்பிடும் வெறுமையை தனிமைத் தருக்கின்றது.

கடந்த 30 வருடங்களாக நான் தொடலைத்திருக்கும் சுகந்தங்கள் இவை. வலிகளை சொல்லில் வடிக்க முடியாது… வாழ்ந்து… இழந்தால் மட்டுமே முழுமையாக உணர முடியும்.கொணடாட்டங்களே கூடி ஆக்கி படைத்து பரிகசித்து பகிர்ந்து உண்ணும்போதே ருசிக்கும…; அது வெண் பொங்கலாக இருந்தாலும் சக்கரைப் பொங்கலாக. அதனை இழந்துவிட்டு அதனை தேடும் பலரில் ஒருவானாக நானும் இந்தத் புது வருடத்தை கொண்டாடுகின்றேன்.