வழுக்கி(கை)ஆறு- வரமும் வளமும்- பகுதி 1

இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள யாழ்க்குடாநாட்டிலே மூன்று ஆறுகள் தொடர்பாக அறிந்திருப்போம்.
அவை

  1. வழுக்கி(கை) ஆறு
  2. தொண்டைமான் ஆறு
  3. உப்பு ஆறு
    இதில் குறிப்பாக வழுக்கி ஆற்றின் வரலாற்றையும் யாழ்க்குடாநாட்டில் அதிலும் வலிகாமம் பகுதியின் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பாதுகாப்பதில் வழுக்கியாற்றின் வகிபாகம் தொடர்பாக முடிந்த அளவுக்கு இந்த கட்டுரைத்தொடர் மூலம் பேச முயல்கிறேன். இன்னும் சில தலைமுறைகளின் பின் வலிகாமம் பிரதேசத்தில் நீர்வளமும் நிலவளமும் தொடர்ந்து இருக்க வேண்டும் எனில் வழுக்கி ஆற்றின் வகிபாகத்தை சரியாக புரிந்து கொண்டு அதை பாதுகாத்து அரவணைப்பது மிக மிக முக்கியம்.
    ஏனெனில் அண்மைய வருடங்களின் அவதானிப்புகளில் வரலாற்று ரீதியாக இருந்த வழுக்கியாற்றின் முக்கியத்துவம் மங்கி மருகி, வெறுமனே மழைகாலத்தில் வெள்ளத்தை வெளியேற்றும் ஒரு “Drainage system” அதாவது ஒரு “வடிகால்” என்ற அளவிலேயே வழுக்கி ஆறு பார்க்கப்படுகிறது.
    அத்துடன் வழுக்கி ஆற்றுக்கு நீரைக்கொண்டுவந்த பல பாதைகள் அதாவது வெள்ள வாய்க்கால்கள் இன்று பல பிரதான வீதிகளாகி விட்டன. பாதி வழுக்கி ஆறு காணாமலே போய்விட்டது.
    இன்று பலர் நினைத்துக்கொண்டிருப்பது வழுக்கி ஆறு அம்பனைச் சந்தியில் ஆரம்பிக்கின்றது என்றே. வழுக்கி ஆற்றின் நீரேந்து பகுதிகளாக அல்லது வழுக்கி ஆற்றினால் பயன்பெற்றுவருவதாக கருதப்படும் பிரதேசத்தை குறிக்கும் வரைபடம் ஒன்றை பதிவேற்றி உள்ளேன். வலிகாமத்தின் மிகப்பெரிய ஒரு பரப்பளவை வழுக்கி ஆற்றுப் படுக்கை தன் வட்டத்துக்குள் கொண்டு வருகிறது. ஏராளமான வாய்க்கால்கள், சிறு குளங்கள் மூலமாக தண்ணீர் வழுக்கி ஆற்றில் இருந்திருக்கிறது.
    யாழ்க்குடாநாட்டின் குறிப்பாக வலிகாமத்தின் உயரமான பகுதிகளை குறிக்கும் contour map ஒன்றையும் பதிவேற்றி உள்ளேன். அதை கூர்ந்து அவதானித்தால் தெல்லிப்பழையின் வடமேற்காக மயிலிட்டி தெற்கு, வறுத்தலைவிழான் பகுதிகள் வலிகாமத்தின் மிக உயரமான பகுதிகளாக இருந்திருக்கின்றன. அந்தப்பகுதிகளில் இருந்து தாழ்வான ஏழாலை பகுதிகளை நோக்கி ஓடிய வெள்ளத்தை கட்டுப்படுத்த கட்டுவன் பகுதியில் ஒரு அணையை கட்டியிருக்கிறார்கள். அந்த அணை இன்று ஒரு பிரதான வீதியாகி தெல்லிப்பழழை-வறுத்தலைவிழான்- கட்டுவன் வீதியாகியிருக்கின்றது. “கட்டுவன்” என்ற பெயரே “கட்டு” “வான் கட்டு” என்பதில் இருந்து மருவி வந்ததாக கூறப்படுகிறது. குறித்த அணைக்கட்டு இந்த வீதியின் இன்றைய கிறிஸ்தவ சுடுகாடு இருக்கும் பகுதிக்கு அண்மித்ததாக இருந்ததாக கருதப்படுகிறது.
    அவ்வறு வழி மறிக்கப்பட்ட நீரின் ஒரு பகுதி மயிலிட்டி பக்கமாகவும் இன்னொரு பகுதி தெல்லிப்பழை பக்கமாகவும் ஓடியிருக்கின்றது. அவ்வாறு ஓடிய நீர் ஒன்று கரண்டை குளம், முல்லைக்குளம்/முள்ளான்குளம்( இந்த குளத்தை இன்னும் அடையாளப்படுத்த முடியவில்லை) ஊடக ஆனைக்குட்டி மதவடியில் KKS வீதியை கடக்க, வறுத்தலையின் ஒரு பகுதி மற்றும் வீமன்காமம் ஊடாக வந்த நீரும் தெல்லிப்பழையின் ஒரு பகுதிநீருமாக தெல்லிப்பழை அம்பனை வீதி அருகில் உள்ள வாய்க்கால் வழியாக அம்பனை வயலை அடைந்திருக்கிறது. அந்தப்பகுதியில் தற்போது 2 குளங்கள் காணப்பட்டாலும் மேலும் சில இருந்திருக்ககூடும். அதன் பின்னர் நீண்டு ஓடி பினாக்கை குளத்தை அடைந்த பிறகு இன்று நாம் எல்லோரும் பார்க்கும் நீர் நிறைந்த ஆறு கிட்டத்தட்ட ஆவணி மாதம் வரை நீரோடு காணப்படுகிறது.
    இந்த வழுக்கி யாற்று படுக்கை ஒவ்வொரு மழையின் போதும் நிலத்தடிக்கு நீரை அனுப்புவதில் பெரும் பங்கு ஆற்றி வருகிறது. அதை பேசுவதானால் எங்கள் யாழ் குடாநாட்டின் கீழ் இருக்கும் “Aquifer systen” என்ற நிலத்தடி நீர்த்தேக்கம் போன்ற அமைப்பை விளங்கப்படுத்த வேண்டும். இணைப்பில் யாழ்க்குடாநாட்டின் கீழ் உள்ள 4 பெரிய aquifers களை படத்தில் காட்டியுள்ளேன். எங்கள் அனைவருக்கும் குடிநீரும், விவசாயத்திற்கான நன்னீரும் கிடைப்பது அதில் இருந்து தான். அதிலும் குறிப்பாக “சுண்ணாகம் Aquifer” மிகப் பெரியது. அந்த aquifer இனை அதன் அடியில் உள்ள உப்பு நீர் மேலெழாமல் சுத்தமாக பேணுவது இந்த வழுக்கி ஆறும் அதை சூழ உள்ள குளங்களும் நீரேந்து பிரதேசங்களும் என்பது பலருக்கும் தெரியாது.
    தவிர மண்வளமாக இருக்ப்பதற்காக, அதில் நாம் இடும் கழிவுகளை கழுவி அகற்றுவதும் இந்த வழுக்கி ஆறும் அதை சூழ உள்ள குளங்களுமே. நம் பிரதேசத்தின் பல உயிரினங்களுக்கும் பறவைகளுக்கும் வருடம் முழுவதும் நீரை கொடுத்து உயிர்பல்வகைமையை காத்து அழகிய இயற்கை வனப்பை கொடுப்பதுவும் இந்த வழுக்கி ஆறும் அதன் சூழலுமே. உங்கள் கிணறுகளின் இன்று நீர் அள்ளக்கூடியவாறு கிடைப்பதுவும் இந்த வழுக்கியாறும் குளங்களும் கொடுத்த வரமே.
    ஏன் யாழ் குடாநாட்டில் கந்தரோடை பகுதியில் முதலாவதாக மனித நாகரீகத்தை வளர்த்ததும் இந்த வழுக்கியாற்றின் ஊடான படகுப் பயணங்களே!
    இவை ஒவ்வொன்று பற்றியும் நீண்டு எழுதலாம்!
    தொடர்ந்து பேசுவொம்!
    தொடரும்….
    திருநாவுக்கரசு தயந்தன்
    08.09.2023